back to top
HomeTamil Mass Readingதிருப்பலி வாசகங்கள் - ஆகஸ்ட் 22, 2023

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 22, 2023

பொதுக்காலம் 20ஆம் வாரம் – செவ்வாய்

முதல் வாசகம்

இஸ்ரயேலை நீ விடுவிப்பாய். உன்னை அனுப்புவது நான் அல்லவா?

நீதித்தலைவர்கள் நூலிலிருந்து வாசகம் 6: 11-24

அந்நாள்களில்

ஆண்டவரின் தூதர் ஓபிராவில் உள்ள ஒரு கருவாலி மரத்தடியில் வந்து அமர்ந்தார். அந்த மரம் அபியேசர் குடும்பத்தவரான யோவாசுக்குச் சொந்தமானது. அவர் மகன் கிதியோன், மிதியானியரிடமிருந்து கோதுமையை மறைப்பதற்காக, திராட்சை ஆலையில் கதிர்களை அடித்துக் கொண்டிருந்தார். ஆண்டவரின் தூதர் அவருக்குத் தோன்றி, “வலிமை மிக்க வீரனே! ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்” என்றார்.

கிதியோன் அவரிடம், “என் தலைவரே! ஆண்டவர் எம்மோடு இருக்கிறார் என்றால் ஏன் இவை எல்லாம் எமக்கு நேரிடுகின்றன? ஆண்டவர் எம்மை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு வரவில்லையா என்று கூறி, எங்கள் தந்தையர் எமக்கு வியந்துரைத்த அவரது வியத்தகு செயல்களெல்லாம் எங்கே? இப்பொழுது ஏன் ஆண்டவர் எம்மை இப்படிக் கைவிட்டுவிட்டார்? எம்மை மிதியானியரின் கைகளில் ஒப்படைத்து விட்டாரே!” என்றார்.

ஆண்டவர் அவர் பக்கம் திரும்பி, “உன்னுடைய இதே ஆற்றலுடன் செல்வாய். மிதியானியர் கையிலிருந்து இஸ்ரயேலை நீ விடுவிப்பாய். உன்னை அனுப்புவது நான் அல்லவா?” என்றார். கிதியோன் அவரிடம், “என் தலைவரே! எவ்வழியில் நான் இஸ்ரயேலை விடுவிப்பேன்! இதோ! மனாசேயிலேயே நலிவுற்று இருப்பது என் குடும்பம். என் தந்தை வீட்டிலேயே நான்தான் சிறியவன்” என்றார்.

ஆண்டவர் அவரிடம், “நான் உன்னோடு இருப்பதால் நீ தனி ஒரு ஆளாக மிதியானியரை வெல்வாய்” என்றார். கிதியோன், “உம் பார்வையில் எனக்குத் தயவு கிடைத்துள்ளது என்றால், நீர்தான் என்னுடன் பேசுகிறவர் என்பதற்கு அடையாளம் ஒன்று காட்டும். நான் உம்மிடம் திரும்பிவந்து எனது உணவுப் படையலைக் கொண்டு வந்து உம் திருமுன் வைக்கும்வரை இவ்விடத்தைவிட்டு அகலாதீர்” என்றார். அவரும், “நீ திரும்பும்வரை நான் இங்கேயே இருப்பேன்” என்றார்.

கிதியோன் வந்து ஆட்டுக் குட்டியையும், இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவால் புளியாத அப்பத்தையும் தயார் செய்தார். பிறகு அவர் இறைச்சியை ஒரு கூடையிலும், குழம்பை ஒரு சட்டியிலும் எடுத்துக் கொண்டு, அந்தக் கருவாலி மரத்தடிக்கு வந்து அவரிடம் கொடுத்தார். கடவுளின் தூதர் அவரிடம், “இறைச்சியையும் புளியாத அப்பத்தையும் கொண்டு வந்து இப்பாறை மீது வைத்துக் குழம்பை ஊற்று” என்றார். அவரும் அவ்வாறே செய்தார். ஆண்டவரின் தூதர் தம் கையிலிருந்த கோலின் முனையால் இறைச்சியையும் புளியாத அப்பத்தையும் தொட்டார். பாறையிலிருந்து நெருப்பு எழும்பி, இறைச்சியையும் புளியாத அப்பத்தையும் எரித்தது. ஆண்டவரின் தூதர் அவர் பார்வையிலிருந்து மறைந்தார்.

அப்போது கிதியோன் அவர் ஆண்டவரின் தூதர் என அறிந்து கொண்டார். கிதியோன், “ஐயோ! இவர் என் தலைவராகிய ஆண்டவர்! ஆண்டவரின் தூதரை நேருக்கு நேராக நான் பார்த்துவிட்டேனே!” என்றார். ஆண்டவர் அவரிடம், “உனக்கு நலமே ஆகுக! அஞ்சாதே! நீ சாக மாட்டாய்” என்றார். கிதியோன் அங்கே ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் கட்டி எழுப்பினார். அதை ‘நலம் நல்கும் ஆண்டவர்’ என அழைத்தார். அது இந்நாள்வரை அபியேசர் குடும்பத்தவருக்குச் சொந்தமான ஓபிராவில் உள்ளது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 85: 8. 10-11. 12-13 (பல்லவி: 8)

பல்லவி: இறைவன் தம் மக்களுக்கு நிறைவாழ்வை வாக்களிக்கின்றார்.

8ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்; அவர்களோ மடமைக்குத் திரும்பிச் செல்லலாகாது. – பல்லவி

10பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.11மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். – பல்லவி

12நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும்.13நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 கொரி 8: 9

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 23-30

அக்காலத்தில்

இயேசு தம் சீடரிடம், “செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்: செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்றார்.

சீடர்கள் இதைக் கேட்டு, “அப்படியானால் யார்தாம் மீட்புப் பெற முடியும்?” என்று கூறி மிகவும் வியப்படைந்தார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, “மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்” என்றார்.

அதன் பின்பு பேதுரு இயேசுவைப் பார்த்து, “நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்டார்.

அதற்கு இயேசு, “புதுப் படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும் என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நில புலங்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்.

ஆனால் முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்” என்று அவர்களிடம் கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட்-2023 செப் ►
ஞா 6 13 20 27
தி 7 14 21 28
செ 1 8 15 22 29
பு 2 9 16 23 30
வி 3 10 17 24 31
வெ 4 11 18 25
5 12 19 26
Archive 2023 2024
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks