சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
பெண்கள்
1உன் காதல் மனையாளைப்
பார்த்துப் பொறாமைப்படாதே;
உனக்கே தீங்கு விளைவிக்கும்
தீய பழக்கங்களை அவளுக்குச்
சொல்லிக்கொடாதே.
2ஒரு பெண்ணுக்கு நீ அடிமையாகாதே;
இல்லையேல், அவள்
உன்னையே அடக்கியாள நேரிடும்.
3நெறிகெட்டவளை அணுகிச் செல்லாதே;
அவளது வலைக்குள் வீழ்ந்திடுவாய்.
4பாடகியுடன் உனக்குத்
தொடர்பு வேண்டாம்.
அவளது மயக்கும்
வலையில் சிக்கிக்கொள்வாய்.
5கன்னிப்பெண்ணை
உற்று நோக்காதே;
நீ தடுமாறி அவளால்
தண்டனைக்கு ஆளாவாய்.
6விலைமாதரிடம் உன் உள்ளத்தைப்
பறிகொடாதே;
உன் உரிமைச் சொத்தை
நீ இழக்க நேரிடும்.
7நகரின் தெருக்களில்
அங்குமிங்கும் பராக்குப் பார்க்காதே;
ஆள்நடமாட்டமற்ற இடங்களில்
சுற்றித்திரியாதே.
8அழகான பெண்ணிடமிருந்து
உன் கண்களைத் திருப்பிக்கொள்;
பிறன் மனைவியின் அழகை
உற்றுநோக்காதே.
பெண்களின் அழகால்
பலர் நெறி பிறழ்ந்துள்ளனர்;
இதனால் காமம் தீயெனப் பற்றியெரியும்.
9அடுத்தவருடைய மனைவியுடன்
அமர்ந்து விருந்துண்ணாதே;
அவளுடன் மது அருந்திக் களிக்காதே;
உன் மனம் அவளிடம் மயங்கிவிடும்;
முடிவில் உன் வாழ்வே வீழ்ச்சியுறும்.
மற்றவர்களுடன் உறவு
10உன் பழைய நண்பர்களைக்
கைவிடாதே;
புதிய நண்பர்கள் அவர்களுக்கு
இணையாகமாட்டார்கள்;
புதிய நண்பர்கள் புதிய மதுவைப்
போன்றவர்கள்.
நாள் ஆக ஆகத்தான்
அதை நீ சுவைத்துக் களிப்பாய்.
11பாவிகளின் பெருமை கண்டு
பொறாமை கொள்ளாதே;
அவர்களுக்கு வரவிருக்கும்
கேடு உனக்குத் தெரியாது.
12இறைப்பற்றில்லாதவர்களுக்குப்
பிடித்தமானவற்றில் இன்பம்
கொள்ளாதே;
அவர்கள் தங்கள்
வாழ்நாளிலேயே தண்டனை
பெறுவார்கள் என்பதை
நினைவில் இருத்து.
13கொலை செய்ய அதிகாரம்
கொண்டவர்களை விட்டுத்
தொலைவில் இரு;
அப்பொழுது சாவுபற்றிய
அச்சத்தால் நீ
அலைக்கழிக்கப்படமாட்டாய்;
அவர்களிடம் நீ சென்றால்
தவறு ஏதும் செய்யாதே;
செய்தால் உன் உயிரை
அவர்கள் வாங்கிவிடுவார்கள்.
கண்ணிகள் நடுவே நீ நடக்கிறாய்
என்றும் நகரின் கோட்டை
கொத்தளங்களூடே செல்கிறாய்
என்றும் அறிந்துகொள்.
14அடுத்திருப்பவரை அறிய
முடிந்தவரை முயற்சி செய்;
ஞானிகளைக் கலந்து
ஆலோசனை செய்.
15அறிவுக்கூர்மை படைத்தவர்களோடு
உரையாடு;
உன் பேச்செல்லாம் உன்னத
இறைவனின் திருச்சட்டம்
பற்றி அமையட்டும்.
16நீதிமான்கள் உன்னுடன்
விருந்தாடட்டும்;
ஆண்டவரிடம் கொள்ளும்
அச்சமே உனது
பெருமையாக இருக்கட்டும்.
17கைவினைஞரின் திறமையைக்
கொண்டே பொருள்கள்
மதிப்புப் பெறுகின்றன;
மக்கள் தலைவர் தம்
பேச்சைக் கொண்டே
ஞானியாய் மதிக்கப்படுகிறார்.
18வாயாடியைக் கண்டு அவர்களின்
நகரத்தார் அஞ்சுவர்;
உளறு வாயரை ஊரார் வெறுப்பர்.