சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
தீய உறவு
1மையைத் தொடுவோர் தங்களைக்
கறைப்படுத்திக் கொள்வர்;
செருக்குடையோருடன் சேர்ந்து
பழகுவோர் அவர்களைப்
போலவே மாறுவர்.
2உன்னால் சுமக்க முடியாத
சுமைகளைத் தூக்காதே;
உன்னைவிட வலிமை
வாய்ந்தோருடனும் செல்வம்
படைத்தோருடனும் உறவு கொள்ளாதே.
மண்பானைக்கும் இரும்புக்
கொப்பரைக்கும் என்ன தொடர்பு?
கொப்பரையுடன் பானை மோதிச்
சுக்குநூறாகும்.
3செல்வர்கள் அநீதி இழைப்பதுமன்றி
ஏழைகளை இழிவுபடுத்தவும்
செய்வார்கள்; ஏழைகளோ
அநீதிக்கு ஆளாவதோடு
மன்னிப்பும் கேட்கவேண்டும்.
4உன்னால் தங்களுக்குப்
பயன் விளையுமாயின்,
செல்வர் உன்னைச் சுரண்டுவர்;
உனக்கு ஒரு தேவை என்றால்
உன்னைக் கைவிடுவர்.
5நீ வசதியாய் இருக்கும்போது
உன்னோடு ஒட்டி உறவாடுவர்;
உன்னை வெறுமையாக்கி
விட்டுக் கவலையின்றி இருப்பர்.
6உன் உதவி அவர்களுக்குத்
தேவைப்படும் போது
உன்னை ஏமாற்றுவர்;
உன்னைப் பார்த்துப் புன்முறுவல் பூத்து
உனக்கு ஊக்கம் அளிப்பர்;
உன்னிடம் நயந்து பேசி,
“உனக்குத் தேவையானது என்ன?”
எனக் கேட்பர்.
7நீ திகைக்கத் திகைக்க உனக்குப்
பல்சுவை விருந்தூட்டி,
சிறிது சிறிதாக உன்னை
அறவே கறந்து,
இறுதியில் உன்னை
எள்ளி நகையாடுவர்;
பின்னர் உன்னைக் காண
நேர்ந்தால் ஒதுங்கிச் செல்வர்;
உன்னைப் பார்த்துத் தலையாட்டுவர்.
8ஏமாந்து போகாதவாறு
எச்சரிக்கையாய் இரு;
உன் அறிவின்மையால் தாழ்வுறாதே.
9வலியோர் உன்னை
விருந்துக்கு அழைக்கும்போது
ஆர்வம் காட்டாதே;
அப்படியானால் மீண்டும்
மீண்டும் உன்னை அழைப்பர்.
10எதிலும் முந்திக்கொள்ளாதே;
நீ ஒதுக்கப்படலாம்.
தொலைவில் ஒதுங்கி நில்லாதே;
நீ மறக்கப்படுவாய்.
11வலியோரை உனக்கு இணையாக
நடத்த முயலாதே;
அவர்களின் நீண்ட
பேச்சுகளை நம்பாதே.
உன்னை ஆழம் காணவே
அவர்கள் நீண்டநேரம்
பேசுகின்றார்கள்;
அவர்கள் சிரித்துப் பேசுவதும்
உன்னைக் கணிப்பதற்கே.
12இரகசியங்களைக் காப்பாற்றாதோர்
இரக்கமற்றோர்;
உன்னைக் கொடுமைப்படுத்தவும்
சிறைப்படுத்தவும்
அவர்கள் தயங்கமாட்டார்கள்.
13அவற்றைக் காப்பாற்றுவதில்
மிகவும் கவனமாய் இரு;
ஏனெனில் உனது வீழ்ச்சியை
மடியில் கட்டிக்கொண்டு நடக்கிறாய்.
14*[நீ உறங்கும்போது இவற்றைக்
கேட்க நேர்ந்தால் விழித்தெழு;
உன் வாழ்நாள்முழுவதும்
ஆண்டவர்மீது அன்புசெலுத்து;
உன் மீட்புக்காக அவரை மன்றாடு.]
15ஒவ்வோர் உயிரும்
தன் இனத்தின்மீது
அன்பு பாராட்டுகிறது;
ஒவ்வொரு மனிதரும்
தமக்கு அடுத்திருப்பவர்மீது
அன்பு செலுத்துகிறார்.
16உயிரினங்களெல்லாம் தங்கள்
இனங்களோடு சேர்ந்து வாழ்கின்றன;
மனிதரும் தம்மைப்போன்ற
மனிதருடன் இணைந்தே வாழ்கின்றனர்.
17ஓநாய்க்கும் ஆட்டுக்குட்டிக்கும்
உறவு ஏது?
பாவிகளுக்கும்
இறைப்பற்றுள்ளோருக்கும்
தொடர்பு ஏது?
18கழுதைப் புலிக்கும் நாய்க்கும்
இடையே அமைதி ஏது?
செல்வர்களுக்கும் ஏழைகளுக்கும்
இடையே சமாதானம் ஏது?
19காட்டுக் கழுதைகள் பாலைநிலத்தில்
சிங்கங்களுக்கு இரையாகும்;
ஏழைகளைச் செல்வர்கள் விழுங்குவர்.
20இறுமாப்புக் கொண்டோர்
தாழ்ச்சியை அருவருப்பர்;
செல்வர் ஏழைகளை அருவருப்பர்.
21செல்வர் தடுமாறினால்
நண்பர்கள் தாங்குவார்கள்;
எளியோர் விழும்போது
நண்பர்களும் சேர்ந்து
தள்ளி விடுவார்கள்.
22செல்வர் நாத்தவறினால்
அவரைக் காப்பாற்றப் பலர் இருப்பர்;
தகாதவற்றைப் பேசினும்
அவற்றை முறைப்படுத்துவர்.
எளியோர் நாத்தவறினால்
அவர்கள்மீது குற்றஞ் சாட்டுவர்;
அறிவுக்கூர்மையோடு பேசினும்
அவர்களுக்குச் செவிசாய்ப்பார்
யாரும் இலர்.
23செல்வர் பேசும்போது எல்லாரும்
அமைதியாய்க் கேட்பர்;
அவரது பேச்சை வானுயரப் புகழ்வர்.
ஏழை பேசும்போது,
‘இவன் யார்?’ எனக் கேட்பர்;
பேச்சில் தடுமாற்றம் ஏற்படின்,
அவரைப் பிடித்து வெளியே தள்ளுவர்.
24பாவக் கலப்பில்லாத செல்வம் நன்று;
வறுமை தீயது
என இறைப்பற்றில்லாதோரே கூறுவர்.
25மனிதரின் உள்ளம் நன்மைக்கோ
தீமைக்கோ முகத் தோற்றத்தை
மாற்றி விடுகிறது.
26இனிய உள்ளத்தின் அடையாளம்
மலர்ந்த முகம்.
உவமைகளைக் கண்டுபிடிக்கக்
கடும் உழைப்போடு கூடிய
சிந்தனை வேண்டும்.