சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
தலைமைக் குரு சீமோன்
1ஓனியாவின் மகன் சீமோன்
தலைமைக் குருவாய்த்
திகழ்ந்தார்; அவர் தம் வாழ்நாளில்
ஆண்டவருடைய இல்லத்தைப்
பழுதுபார்த்தார்; தமது காலத்தில்
கோவிலை வலிமைப்படுத்தினார்.
2அவர் உயரமான இரட்டைச்
சுவருக்கு அடிக்கல் நாட்டினார்;
கோவிலைச்சுற்றி உயர்ந்த சுவர்
அணைகளை அமைத்தார்.
3அவருடைய காலத்தில் நீர்த் துறை
ஒன்று தோண்டப்பட்டது.
அந்நீர்த்தேக்கம் கடலைப்போன்று
பரந்தது.
4தம் மக்களை அழிவினின்று
காப்பாற்றக் கருத்தாயிருந்தார்;
முற்றுகையை எதிர்த்து நிற்க
நகரத்தை வலிமைப்படுத்தினார்.
5திரையிட்டியிருந்த தூயகத்திலிருந்து
அவர் வெளியே வந்த
வேளையில் மக்கள் அவரைச்
சூழ்ந்து நின்றபோது
எத்துணை மாட்சிமிக்கவராய்த்
திகழ்ந்தார்!
6முகில்களின் நடுவே
தோன்றும் விடிவெள்ளி
போன்று விளங்கினார்;
விழாக் காலத்தில் தெரியும்
முழு நிலவுபோல் ஒளி வீசினார்.
7உன்னத இறைவனின்
கோவிலுக்குமேல் ஒளிரும்
கதிரவன் போலவும் மாட்சிமிகு
முகில்களில் பளிச்சிடும்
வானவில் போலவும் காணப்பட்டார்.
8முதற்கனிகளின் காலத்தில்
மலரும் ரோசாபோன்றும்,
நீரூற்றின் ஓரத்தில் அலரும்
லீலி மலர்போன்றும் கோடைக்
காலத்தில் தோன்றும்
லெபனோனின் பசுந்தளிர்
போன்றும் திகழ்ந்தார்.
9தூபக் கிண்ணத்தில்
இருக்கும் தீயும் சாம்பிராணியும்
போலவும் எல்லாவகை
விலையுயர்ந்த கற்களாலும்
அணி செய்த பொற்கலத்தைப்
போலவும் விளங்கினார்.
10கனி செறிந்த ஒலிவ மரம்போலவும்
முகிலை முட்டும் சைப்பிரசுமரம்
போலவும் இருந்தார்.
11அவர் மாட்சியின் ஆடை
அணிந்து பெருமைக்குரிய
அணிகலன்கள் புனைந்து தூய
பலிபீடத்தில் ஏறியபோது
திருஇடம் முழுவதையும்
மாட்சிப்படுத்தினார்.
12எரிபலி பீடத்தின் அருகே
அவர் நிற்க, மற்றக் குருக்கள்
மாலைபோல் அவரைச் சூழ்ந்து
கொள்ள, அவர் அவர்களின்
கைகளிலிருந்து பலியின்
பாகத்தைப் பெற்றுக்
கொண்டபோது, லெபனோனின்
இளங் கேதுரு மரம்போல
விளங்கினார். அவர்கள்
பேரீச்சைமரம்போல் அவரைச்
சூழ்ந்துகொண்டார்கள்.
13ஆரோனின் மைந்தர்கள்
எல்லாரும் தங்களது
மாட்சியில் ஆண்டவருக்குரிய
காணிக்கைகளைத் தங்கள்
கைகளில் ஏந்தி இஸ்ரயேலின்
சபை முழுவதற்கும் முன்பாக
நின்றார்கள்.
14சீமோன் பலிபீடப் பணிகளை
முடித்துக்கொண்டு,
எல்லாம் வல்ல உன்னத
இறைவனுக்குச் செலுத்தவேண்டிய
காணிக்கையை ஒழுங்குபடுத்தினார்.
15பின் தமது கையை நீட்டிக்
கிண்ணத்தை எடுத்தார்;
திராட்சை இரசத்தை
அதில் வார்த்தார்;
பீடத்தின் அடியில் அதை
ஊற்றினார். அது அனைத்திற்கும்
மன்னரான உன்னதருக்கு
உகந்த நறுமணப் பலியாய்
அமைந்தது.
16அதன்பின் ஆரோனின்
மைந்தர்கள் ஆர்ப்பரித்தார்கள்;
வெள்ளியாலான எக்காளங்களை
முழங்கினார்கள்; உன்னத
இறைவனை நினைவுபடுத்தப்
பேரொலி எழச் செய்தார்கள்.
17எல்லா மக்களும் ஒன்று
சேர்ந்து விரைந்தார்கள்;
தரையில் குப்புற விழுந்தார்கள்;
எல்லாம் வல்ல உன்னத
ஆண்டவரை வணங்கினார்கள்.
18பாடகர்கள் தங்கள் குரல்களால்
அவரைப் புகழ்ந்தார்கள்;
அதன் பேரொலி
இன்னிசையாய் எதிரொலித்தது.
19ஆண்டவருக்குரிய
வழிபாட்டுமுறை முடியும்வரை
இரக்கமுள்ளவர் திருமுன்
மக்கள் வேண்டினார்கள்;
உன்னத ஆண்டவரை
மன்றாடினார்கள்.
அதனோடு அவருடைய
திருப்பணி நிறைவு பெற்றது.
20ஆண்டவருடைய பெயரில்
பெருமை கொள்ளவும்
அவருடைய ஆசியைத்
தம் வாயால் மொழியவும்
சீமோன் இறங்கி வந்து
இஸ்ரயேல் மக்களின்
முழுச் சபைமீதும் தம்
கைகளை உயர்த்தினார்.
21உன்னத கடவுளிடமிருந்து
ஆசி பெற்றுக்கொள்ள
அவர்கள் மீண்டும் தலை
தாழ்த்தி வணங்கினார்கள்.
அறிவுரையும் ஆசியும்
22இப்பொழுது அண்டத்தின்
கடவுளைப் போற்றுங்கள்;
எல்லா இடங்களிலும் அரியன
பெரியன செய்பவரை, பிறப்பிலிருந்து
நம் வாழ்வை மேன்மைப்படுத்துபவரை,
தம் இரக்கத்திற்கு ஏற்ப
நம்மை நடத்துகிறவரைப் புகழுங்கள்.
23அவர் நமக்கு மனமகிழ்ச்சியை
அளிப்பாராக; இஸ்ரயேலில்
முந்திய நாள்களில் இருந்ததுபோல
நம் நாள்களிலும் அமைதி நிலவுவதாக.
24அவருடைய இரக்கம் நம்முடன்
என்றும் இருப்பதாக;
நம் நாள்களில் அவர்
நம்மை விடுவிப்பாராக.
அருவருப்பான மக்களினத்தார்
25இரண்டு வகை மக்களினத்தாரை
என் உள்ளம் வெறுக்கிறது;
மூன்றாம் வகையினர்
மக்களினத்தாரே அல்ல.
26அவர்கள்;
சமாரியா மலைமீது வாழ்வோர்,
பெலிஸ்தியர், செக்கேமில்
குடியிருக்கும் அறிவற்ற மக்கள்.
முடிவுரை
27எருசலேம் வாழ் எலயாசரின்
மகனான சீராக்கின் மைந்தர்
ஏசுவாகிய நான் ஞானத்தை
என் உள்ளத்திலிருந்து பொழிந்தேன்;
கூர்மதியையும் அறிவாற்றலையும்
தரும் நற்பயிற்சி அடங்கியுள்ள
இந்நூலை எழுதியுள்ளேன்.
28இவற்றில் ஈடுபாடு
காட்டுவோர் பேறுபெற்றோர்;
தம் உள்ளத்தில் இவற்றை
இருத்துவோர் ஞானியர் ஆவர்.
29இவற்றைக் கடைப்பிடிப்போர்
அனைத்திலும் ஆற்றல் பெறுவர்.
ஆண்டவருடைய ஒளியே
அவர்களுக்கு வழி.