back to top
HomeTamilசீராக்கின் ஞானம் அதிகாரம் - 1 - திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரம் – 1 – திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

ஞானம் வழங்கும் நன்னெறி

ஞானத்தின் ஊற்று

1ஞானமெல்லாம்

ஆண்டவரிடமிருந்து வருகின்றது;

அது என்றும் அவரோடு

இருக்கின்றது.

2கடல் மணலையோ

மழைத் துளியையோ

முடிவில்லாக் காலத்தையோ

யாரே கணக்கிடுவர்?

3வான்வெளியின் உயரத்தையோ

நிலவுலகின் அகலத்தையோ

ஆழ்கடலையோ ஞானத்தையோ

யாரே தேடிக் காண்பர்?

4எல்லாவற்றுக்கும் முன்னர்

ஞானமே உண்டாக்கப்பட்டது;

கூர்மதி கொண்ட அறிவுத்திறன்

என்றென்றும் உள்ளது.

5*[உயர்வானில் உள்ள கடவுளின்

வாக்கே ஞானத்தின் ஊற்று;

என்றுமுள கட்டளைகளே

அதை அடையும் வழிகள்.]

6ஞானத்தின் ஆணிவேர்

யாருக்கு வெளியிடப்பட்டது? அதன்

நுணுக்கங்களை அறிந்தவர் எவர்?

7[ஞானத்தின் அறிவாற்றல் யாருக்குத்

தெளிவாக்கப்பட்டது? அதன்

பரந்த பட்டறிவைப் புரிந்து

கொண்டவர் யார்?]

8ஆண்டவர் ஒருவரே ஞானியாவார்;

தம் அரியணையில் வீற்றிருக்கும்

அவர் பெரிதும் அச்சத்திற்குரியவர்.

9அவரே ஞானத்தைப் படைத்தவர்;

அதனைக் கண்டு கணக்கிட்டவர்;

தம் வேலைப்பாடுகளையெல்லாம்

அதனால் நிரப்பியவர்.

10தம் ஈகைக்கு ஏற்ப எல்லா

உயிர்களுக்கும்

அவரே அதைக் கொடுத்துள்ளார்;

தம்மீது அன்புகூர்வோருக்கு

அதை வாரி வழங்கியுள்ளார்.

இறையச்சம்

11ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே

மாட்சியும் பெருமையுமாகும்;

அதுவே மகிழ்ச்சியும்

அக்களிப்பின் மணிமுடியுமாகும்.

12ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே

உள்ளத்தை இன்புறுத்துகிறது;

மகிழ்வையும் அக்களிப்பையும்

நீடிய ஆயுளையும் வழங்குகிறது.

13ஆண்டவரிடம் அச்சம் கொள்வோரது

முடிவு மகிழ்ச்சிக்கு உரியதாய் அமையும்;

அவர்கள் இறக்கும் நாளில்

ஆசி பெறுவார்கள்.

14ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே

ஞானத்தின் தொடக்கம்;

அது இறைப்பற்றுள்ளோருக்கு

தாய் வயிற்றிலிருக்கும்பொழுதே

வழங்கப்பெறுகிறது.

15ஞானம் மனிதர் நடுவில்

முடிவில்லாத அடித்தளத்தை

அமைத்துள்ளது; அவர்களுடைய

வழிமரபினரிடையே நீங்காது

நிலைத்திருக்கும்.

16ஆண்டவரிடம்

அச்சம் கொள்ளுதலே

ஞானத்தின் நிறைவு;

அது தன் கனிகளால்

மனிதருக்கும் களிப்பூட்டுகிறது.

17அது அவர்களின் இல்லம்

முழுவதையும் விரும்பத்தக்க

நலன்களால் நிரப்பிவிடும்;

தன் விளைச்சலால்

அவர்களின் களஞ்சியங்களை

நிறைத்திடும்.

18ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே

ஞானத்தின் மணிமுடி;

அது அமைதியைப் பொழிந்து,

உடல்நலனைக் கொழிக்கச்

செய்கிறது.

19ஆண்டவரே அதனைக் கண்டு

கணக்கிட்டார்;

அறிவாற்றலையும் நுண்ணறிவையும்

மனிதருக்கு மழையெனப்

பொழிந்திட்டார்;

அதை உறுதியாய்ப்

பற்றிக்கொண்டோரை

மாட்சியால் உயர்த்திட்டார்.

20ஆண்டவரிடம்

அச்சம் கொள்ளுதலே

ஞானத்தின் ஆணிவேர்; அதன்

கிளைகள் நீடிய வாழ்நாள்கள்.

21*[ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம்

பாவங்களை விரட்டிவிடுகிறது.

அது இருக்கும்போது சினத்தை

யெல்லாம் அகற்றிவிடுகிறது.]

பொறுமையும் தன்னடக்கமும்

22நேர்மையற்ற சினத்தை

நியாயப்படுத்த முடியாது;

சினத்தால் நிலை தடுமாறுவோர்

வீழ்ச்சி அடைவர்.

23பொறுமையுள்ளோர்

தக்க காலம்வரை

அமைதி காப்பர்;

பின்னர், மகிழ்ச்சி

அவர்களுள் ஊற்றெடுத்துப் பாயும்.

24அவர்கள் தக்க நேரம்வரை

நா காப்பார்கள்.

பலருடைய வாய் அவர்களது

அறிவுக்கூர்மையை எடுத்துரைக்கும்.

ஞானமும் ஒழுக்கமும்

25ஞானத்தின் கருவூலங்களில்

அறிவார்ந்த பொன்மொழிகள் உண்டு;

பாவிகளுக்கு இறைப்பற்று

அருவருப்பைத் தரும்.

26ஞானத்தை நீ அடைய விரும்பினால்

கட்டளைகளைக் கடைப்பிடி;

அப்போது ஆண்டவரே உனக்கு

ஞானத்தை வாரி வழங்குவார்.

27ஆண்டவரிடம் கொள்ளும்

அச்சமே ஞானமும்

நற்பயிற்சியுமாகும்.

பற்றுறுதியும் பணிவும்

அவருக்கு மகிழ்ச்சி தரும்.

28ஆண்டவரிடம் கொள்ளும்

அச்சத்தைப் புறக்கணியாதே;

பிளவுபட்ட உள்ளத்தோடு

அவரிடம் செல்லாதே.

29மனிதர்முன்* வெளிவேடம்

போட வேண்டாம்.

நாவடக்கம் கொள்.

30நீ வீழ்ச்சியுறாதவாறு

செருக்குக் கொள்ளாதே.

உன்மீதே மானக்கேட்டை

வருவித்துக்கொள்ளாதே.

ஆண்டவருக்கு நீ ஆஞ்சி

நடவாததாலும் உன் உள்ளத்தில்

கள்ளம் நிறைந்திருந்ததாலும்

ஆண்டவர் உன் மறைவான

எண்ணங்களை வெளிப்படுத்துவார்;

சபையார் எல்லார் முன்னிலையில்

உன்னைத் தாழ்த்துவார்.


1:1 நீமொ 2:4; சாஞா 8:21.
1:3 நீமொ 30:4; பாரூ 3:29.
1:4 நீமொ 3:19.
1:6 சாஞா 9:13.
1:10 சஉ 2:26.
1:14 திபா 111:10.
1:17 சாஞா 7:11.
1:30 மத் 23:12.


1:5 [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது.
1:7 [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது.
1:21 [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது.
1:29 இது சிரியாக்குப் பாடம்; ‘மனிதரின் வாயில்’ என்பது கிரேக்க பாடம்.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks