back to top
HomeTamilசீராக்கின் ஞானம் அதிகாரம் - 1 - திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரம் – 1 – திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

ஞானம் வழங்கும் நன்னெறி

ஞானத்தின் ஊற்று

1ஞானமெல்லாம்

ஆண்டவரிடமிருந்து வருகின்றது;

அது என்றும் அவரோடு

இருக்கின்றது.

2கடல் மணலையோ

மழைத் துளியையோ

முடிவில்லாக் காலத்தையோ

யாரே கணக்கிடுவர்?

3வான்வெளியின் உயரத்தையோ

நிலவுலகின் அகலத்தையோ

ஆழ்கடலையோ ஞானத்தையோ

யாரே தேடிக் காண்பர்?

4எல்லாவற்றுக்கும் முன்னர்

ஞானமே உண்டாக்கப்பட்டது;

கூர்மதி கொண்ட அறிவுத்திறன்

என்றென்றும் உள்ளது.

5*[உயர்வானில் உள்ள கடவுளின்

வாக்கே ஞானத்தின் ஊற்று;

என்றுமுள கட்டளைகளே

அதை அடையும் வழிகள்.]

6ஞானத்தின் ஆணிவேர்

யாருக்கு வெளியிடப்பட்டது? அதன்

நுணுக்கங்களை அறிந்தவர் எவர்?

7[ஞானத்தின் அறிவாற்றல் யாருக்குத்

தெளிவாக்கப்பட்டது? அதன்

பரந்த பட்டறிவைப் புரிந்து

கொண்டவர் யார்?]

8ஆண்டவர் ஒருவரே ஞானியாவார்;

தம் அரியணையில் வீற்றிருக்கும்

அவர் பெரிதும் அச்சத்திற்குரியவர்.

9அவரே ஞானத்தைப் படைத்தவர்;

அதனைக் கண்டு கணக்கிட்டவர்;

தம் வேலைப்பாடுகளையெல்லாம்

அதனால் நிரப்பியவர்.

10தம் ஈகைக்கு ஏற்ப எல்லா

உயிர்களுக்கும்

அவரே அதைக் கொடுத்துள்ளார்;

தம்மீது அன்புகூர்வோருக்கு

அதை வாரி வழங்கியுள்ளார்.

இறையச்சம்

11ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே

மாட்சியும் பெருமையுமாகும்;

அதுவே மகிழ்ச்சியும்

அக்களிப்பின் மணிமுடியுமாகும்.

12ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே

உள்ளத்தை இன்புறுத்துகிறது;

மகிழ்வையும் அக்களிப்பையும்

நீடிய ஆயுளையும் வழங்குகிறது.

13ஆண்டவரிடம் அச்சம் கொள்வோரது

முடிவு மகிழ்ச்சிக்கு உரியதாய் அமையும்;

அவர்கள் இறக்கும் நாளில்

ஆசி பெறுவார்கள்.

14ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே

ஞானத்தின் தொடக்கம்;

அது இறைப்பற்றுள்ளோருக்கு

தாய் வயிற்றிலிருக்கும்பொழுதே

வழங்கப்பெறுகிறது.

15ஞானம் மனிதர் நடுவில்

முடிவில்லாத அடித்தளத்தை

அமைத்துள்ளது; அவர்களுடைய

வழிமரபினரிடையே நீங்காது

நிலைத்திருக்கும்.

16ஆண்டவரிடம்

அச்சம் கொள்ளுதலே

ஞானத்தின் நிறைவு;

அது தன் கனிகளால்

மனிதருக்கும் களிப்பூட்டுகிறது.

17அது அவர்களின் இல்லம்

முழுவதையும் விரும்பத்தக்க

நலன்களால் நிரப்பிவிடும்;

தன் விளைச்சலால்

அவர்களின் களஞ்சியங்களை

நிறைத்திடும்.

18ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே

ஞானத்தின் மணிமுடி;

அது அமைதியைப் பொழிந்து,

உடல்நலனைக் கொழிக்கச்

செய்கிறது.

19ஆண்டவரே அதனைக் கண்டு

கணக்கிட்டார்;

அறிவாற்றலையும் நுண்ணறிவையும்

மனிதருக்கு மழையெனப்

பொழிந்திட்டார்;

அதை உறுதியாய்ப்

பற்றிக்கொண்டோரை

மாட்சியால் உயர்த்திட்டார்.

20ஆண்டவரிடம்

அச்சம் கொள்ளுதலே

ஞானத்தின் ஆணிவேர்; அதன்

கிளைகள் நீடிய வாழ்நாள்கள்.

21*[ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம்

பாவங்களை விரட்டிவிடுகிறது.

அது இருக்கும்போது சினத்தை

யெல்லாம் அகற்றிவிடுகிறது.]

பொறுமையும் தன்னடக்கமும்

22நேர்மையற்ற சினத்தை

நியாயப்படுத்த முடியாது;

சினத்தால் நிலை தடுமாறுவோர்

வீழ்ச்சி அடைவர்.

23பொறுமையுள்ளோர்

தக்க காலம்வரை

அமைதி காப்பர்;

பின்னர், மகிழ்ச்சி

அவர்களுள் ஊற்றெடுத்துப் பாயும்.

24அவர்கள் தக்க நேரம்வரை

நா காப்பார்கள்.

பலருடைய வாய் அவர்களது

அறிவுக்கூர்மையை எடுத்துரைக்கும்.

ஞானமும் ஒழுக்கமும்

25ஞானத்தின் கருவூலங்களில்

அறிவார்ந்த பொன்மொழிகள் உண்டு;

பாவிகளுக்கு இறைப்பற்று

அருவருப்பைத் தரும்.

26ஞானத்தை நீ அடைய விரும்பினால்

கட்டளைகளைக் கடைப்பிடி;

அப்போது ஆண்டவரே உனக்கு

ஞானத்தை வாரி வழங்குவார்.

27ஆண்டவரிடம் கொள்ளும்

அச்சமே ஞானமும்

நற்பயிற்சியுமாகும்.

பற்றுறுதியும் பணிவும்

அவருக்கு மகிழ்ச்சி தரும்.

28ஆண்டவரிடம் கொள்ளும்

அச்சத்தைப் புறக்கணியாதே;

பிளவுபட்ட உள்ளத்தோடு

அவரிடம் செல்லாதே.

29மனிதர்முன்* வெளிவேடம்

போட வேண்டாம்.

நாவடக்கம் கொள்.

30நீ வீழ்ச்சியுறாதவாறு

செருக்குக் கொள்ளாதே.

உன்மீதே மானக்கேட்டை

வருவித்துக்கொள்ளாதே.

ஆண்டவருக்கு நீ ஆஞ்சி

நடவாததாலும் உன் உள்ளத்தில்

கள்ளம் நிறைந்திருந்ததாலும்

ஆண்டவர் உன் மறைவான

எண்ணங்களை வெளிப்படுத்துவார்;

சபையார் எல்லார் முன்னிலையில்

உன்னைத் தாழ்த்துவார்.


1:1 நீமொ 2:4; சாஞா 8:21.
1:3 நீமொ 30:4; பாரூ 3:29.
1:4 நீமொ 3:19.
1:6 சாஞா 9:13.
1:10 சஉ 2:26.
1:14 திபா 111:10.
1:17 சாஞா 7:11.
1:30 மத் 23:12.


1:5 [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது.
1:7 [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது.
1:21 [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது.
1:29 இது சிரியாக்குப் பாடம்; ‘மனிதரின் வாயில்’ என்பது கிரேக்க பாடம்.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks