back to top
HomeTamilசீராக்கின் ஞானம் அதிகாரம் - 2 - திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரம் – 2 – திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

ஆண்டவரிடம் பற்றுறுதி

1குழந்தாய், ஆண்டவருக்குப்

பணிபுரிய நீ முன்வந்தால்,

சோதனைகளை எதிர்கொள்ள

முன்னேற்பாடு செய்துகொள்.

2உள்ளத்தில்

உண்மையுள்ளவனாய் இரு;

உறுதியாக இரு;

துன்ப வேளையில்

பதற்றமுடன் செயலாற்றாதே.

3ஆண்டவரைச் சிக்கெனப்

பிடித்துக்கொள்;

அவரை விட்டு விலகிச் செல்லாதே.

உன் வாழ்க்கையின் முடிவில்

வளமை அடைவாய்.

4என்ன நேர்ந்தாலும் ஏற்றுக்கொள்;

இழிவுவரும்போது

பொறுமையாய் இரு.

5நெருப்பில் பொன் புடமிடப்படுகிறது;

ஏற்புடைய மனிதர் மானக்கேடு

எனும் உலையில்

சோதித்துப் பார்க்கப்படுகின்றனர்.

6ஆண்டவரிடம் பற்றுறுதி கொள்;

அவர் உனக்குத் துணை செய்வார்.

உன் வழிகளைச் சீர்படுத்து;

அவரிடம் நம்பிக்கை கொள்.

7ஆண்டவருக்கு அஞ்சுவோரே.

அவரிடம் இரக்கத்துக்காகக்

காத்திருங்கள்;

நெறி பிறழாதீர்கள்;

பிறழ்ந்தால் வீழ்ச்சி அடைவீர்கள்.

8ஆண்டவருக்கு அஞ்சுவோரே,

அவரிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்;

உங்களுக்குக் கைம்மாறு

கிடைக்காமற் போகாது.

9ஆண்டவருக்கு அஞ்சுவோரே,

நல்லவைமீது நம்பிக்கை

கொள்ளுங்கள்;

நிலையான மகிழ்ச்சியையும்

இரக்கத்தையும் எதிர்நோக்கியிருங்கள்.

10முந்திய தலைமுறைகளை

எண்ணிப்பாருங்கள்.

ஆண்டவரிடம் பற்றுறுதி

கொண்டிருந்தோருள்

ஏமாற்றம் அடைந்தவர் யார்?

அவருக்கு அஞ்சி நடந்தோருள்

கைவிடப்பட்டவர் யார்?

அவரை மன்றாடினோருள்

புறக்கணிக்கப்பட்டவர் யார்?

11ஆண்டவர் பரிவும் இரக்கமும் உள்ளவர்;

பாவங்களை மன்னிப்பவர்;

துன்ப வேளையில் காப்பாற்றுகிறவர்.

12கோழை நெஞ்சத்தவருக்கும்

ஆற்றலற்ற கையருக்கும்

இரட்டை வேடமிடும்

பாவிகளுக்கும்

ஐயோ, கேடு வரும்!

13உறுதியற்ற உள்ளத்தவருக்கும்

ஐயோ, கேடு வரும்!

ஏனெனில் அவர்கள்

பற்றுறுதி கொள்ளவில்லை;

எனவே அவர்களுக்குப்

பாதுகாப்பு இராது.

14தளர்ச்சி அடைந்தோரே,

உங்களுக்கும் ஐயோ, கேடு வரும்!

ஆண்டவர் உங்களைச் சந்திக்க

வரும்போது என்ன செய்வீர்கள்?

15ஆண்டவருக்கு அஞ்சுவோர்

அவருடைய சொற்களைக்

கடைப்பிடிப்பர்;

அவர்மீது அன்புசெலுத்துவோர்

அவர்தம் வழிகளைப் பின்பற்றுவர்.

16ஆண்டவருக்கு அஞ்சுவோர்

அவர்தம் விருப்பத்தையே தேடுவர்;

அவரிடம் அன்பு பாராட்டுவோர்

அவர்தம் திருச்சட்டத்தில்

நிறைவு அடைவர்.

17ஆண்டவருக்கு அஞ்சுவோர்

முன்னேற்பாடாய் இருப்பர்;

அவர் திருமுன் தங்களைத்

தாழ்த்திக் கொள்வர்.

18‘ஆண்டவரின் கைகளில்

நாம் விழுவோம்;

மனிதரின் கைகளில்

விழமாட்டோம்; ஏனெனில்

அவரது பெருமையைப் போன்று

அவர்தம் இரக்கமும் சிறந்தது’

என அவர்கள் சொல்லிக் கொள்வார்கள்.


2:5 சாஞா 3:6; 1 பேது 1:7.
2:6 திபா 37:3,5.
2:10 திபா 37:25.
2:16 திபா 119:97, 103.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks