சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
1ஆண்டவர் மனிதரை
மண்ணால் படைத்தார்;
மீண்டும் அந்த மண்ணுக்கே
திரும்புமாறு செய்கிறார்.
2அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட
காலவரையை வகுத்தார்;
மண்ணுலகில் உள்ளவற்றின்மீது
அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.
3தமக்கு உள்ளதைப்போன்ற
வலிமையை அவர்களுக்கு
வழங்கினார்; தமது சாயலாகவே
அவர்களை உருவாக்கினார்.
4எல்லா உயிரினங்களும் மனிதருக்கு
அஞ்சும்படி செய்தார்;
விலங்குகள், பறவைகள்மீது
அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.
5*[தம் ஐந்தறிவைப் பயன்படுத்தும்
உரிமையை ஆண்டவர்
அவர்களுக்கு அளித்தார்;
ஆறாவதாகத் தம் அறிவுத்திறனில்
பங்கு கொடுத்தார்;
அந்த ஆறறிவையும்
விளக்கும் பகுத்தறிவை
ஏழாவது கொடையாக வழங்கினார்.]
6விருப்புரிமை, நாக்கு, கண்,
காது ஆகியவற்றையும்
சிந்திப்பதற்கு ஓர்
உள்ளத்தையும் அவர்களுக்குக்
கொடுத்தார்.
7அவர்களை அறிவாலும்
கூர்மதியாலும் நிரப்பினார்;
நன்மை தீமையையும்
அவர்களுக்குக் காட்டினார்.
8அவர்களின் உள்ளத்தைப்பற்றி
விழிப்பாய் இருந்தார்;
தம் செயல்களின் மேன்மையைக்
காட்டினார்.
9*[தம் வியத்தகு செயல்கள் பற்றி
என்றும் பெருமைப்படும்
உரிமையை அவர்களுக்கு அளித்தார்.]
10அவர்கள் அவரது திருப்பெயரைப்
புகழ்வார்கள்; இவ்வாறு
அவருடைய செயல்களின்
மேன்மையைப் பறைசாற்றுவார்கள்.
11அறிவை அவர்களுக்கு வழங்கினார்;
வாழ்வு அளிக்கும்
திருச்சட்டத்தை அவர்களுக்கு
உரிமையாக்கினார்.
12அவர்களுடன் முடிவில்லா
உடன்படிக்கை செய்துகொண்டார்;
தம் தீர்ப்புகளை அவர்களுக்கு
வெளிப்படுத்தினார்.
13அவர்களின் கண்கள் அவருடைய
மாட்சியைக் கண்டன;
அவர்களின் செவிகள் அவரது
மாட்சியின் குரலைக் கேட்டன.
14“எல்லாவகைத் தீமைகள்
குறித்தும் கவனமாய் இருங்கள்”
என்று அவர் எச்சரித்தார்;
அடுத்திருப்பவர்களைப் பற்றிய
கட்டளைகளை அவர்கள்
ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்.
கடவுளே நடுவர்
15மனிதரின் வழிகளை ஆண்டவர்
எப்போதும் அறிவார்;
அவரின் பார்வையிலிருந்து
அவை மறைந்திருப்பதில்லை.
16*[இளமை தொட்டே அவர்களின்
வழிகள் தீமையை நாடுகின்றன.
தங்களின் கல்லான இதயத்தை
உணர்ச்சியுள்ள இதயமாக
மாற்ற அவர்களால் முடியாது.]
17நாடுகள் ஒவ்வொன்றுக்கும்
ஒரு தலைவரை ஏற்படுத்தினார்;
இஸ்ரயேல் நாடோ ஆண்டவரின்
பங்காகும்.
18*[இஸ்ரயேல் அவருடைய
தலைப்பேறு. அதை
நற்பயிற்சியில் வளர்க்கிறார்;
அதன்மீது தம் அன்பின்
ஒளியை வீசுகிறார்; அதைக்
கவனியாது விட்டுவிடுவதில்லை.]
19மனிதரின் செயல்கள் அனைத்தும்
கதிரவனின் ஒளிபோல்
அவர் திருமுன்
தெளிவாய்த் துலங்குகின்றன;
அவருடைய கண்கள் எப்போதும்
அவர்களுடைய வழிகள் மீது
இருக்கும்.
20அவர்களுடைய அநீதியான
செயல்கள் அவருக்கு
மறைவாய் இருப்பதில்லை;
அவர்களின் பாவங்கள்
அனைத்தையும் ஆண்டவர் அறிவார்.
21*[ஆண்டவர் நல்லவர்;
அவர் தம் படைப்புகளை அறிவார்.
அவற்றை அவர் விட்டுவிடவில்லை,
கைவிடவுமில்லை;
மாறாகப் பாதுகாத்தார்.]
22மனிதர் செய்யும் தருமங்கள்
அவருக்குக் கணையாழிபோல்
திகழ்கின்றன; அவர்கள்
புரியும் அன்புச் செயல்கள்
அவருக்குக் கண்மணிபோல்
விளங்குகின்றன.
23பின்னர் அவர் எழுந்து
அவர்களுக்குக் கைம்மாறு செய்வார்;
அவர்களுக்குச் சேரவேண்டிய
வெகுமதியை அவர்களின்
தலைமேல் பொழிவார்.
24இருப்பினும் மனம் வருந்துவோரைத்
தம்பால் ஈர்த்துக்கொள்கிறார்
நம்பிக்கை இழந்தோரை ஊக்குவிக்கிறார்.
மனந்திரும்ப அழைப்பு
25ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்;
பாவங்களை விட்டு விலகுங்கள்;
அவர் திருமுன் வேண்டுங்கள்;
குற்றங்களைக் குறைத்துக்
கொள்ளுங்கள்.
26உன்னத இறைவனிடம்
திரும்பி வாருங்கள்;
அநீதியை விட்டு
விலகிச் செல்லுங்கள்;
அவர் அருவருப்பதை
அடியோடு வெறுத்திடுங்கள்.
27வாழ்வோர் உன்னத இறைவனுக்கு
நன்றி செலுத்துகின்றனர்;
ஆனால் கீழுலகில் அவரது
புகழை யாரே பாடுவர்?
28உயிர் வாழ்ந்திராதவர் போன்றே
இறந்தவர்களும் அவருக்கு
நன்றி செலுத்துவதில்லை;
உடல் நலத்துடன் உயிர்
வாழ்வோரோ அவரைப் போற்றுகின்றனர்.
29ஆண்டவரின் இரக்கம்
எத்துணைப் பெரிது!
அவரிடம் மனந்திரும்புவோருக்கு
அவர் அளிக்கும் மன்னிப்பு
எத்துணை மேலானது!
30எல்லாமே மனிதரின்
ஆற்றலுக்கு உட்பட்டதில்லை;
மனிதர் இறவாமை பெற்றவர் அல்லர்.
31கதிரவனைவிட ஒளி மிக்கது எது?
ஆயினும் சூரிய கிரகணமும்
உண்டு. ஊனும் உதிரமும்
கொண்ட மனிதர் தீமைகளைப்
பற்றியே சிந்திக்கின்றனர்.
32அவர் உயர் வானத்தின்
படைகளை வகைப்படுத்துகிறார்.
மனிதர் அனைவரும் புழுதியும் சாம்பலுமே.