back to top
HomeTamilசீராக்கின் ஞானம் அதிகாரம் - 17 - திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரம் – 17 – திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1ஆண்டவர் மனிதரை

மண்ணால் படைத்தார்;

மீண்டும் அந்த மண்ணுக்கே

திரும்புமாறு செய்கிறார்.

2அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட

காலவரையை வகுத்தார்;

மண்ணுலகில் உள்ளவற்றின்மீது

அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.

3தமக்கு உள்ளதைப்போன்ற

வலிமையை அவர்களுக்கு

வழங்கினார்; தமது சாயலாகவே

அவர்களை உருவாக்கினார்.

4எல்லா உயிரினங்களும் மனிதருக்கு

அஞ்சும்படி செய்தார்;

விலங்குகள், பறவைகள்மீது

அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.

5*[தம் ஐந்தறிவைப் பயன்படுத்தும்

உரிமையை ஆண்டவர்

அவர்களுக்கு அளித்தார்;

ஆறாவதாகத் தம் அறிவுத்திறனில்

பங்கு கொடுத்தார்;

அந்த ஆறறிவையும்

விளக்கும் பகுத்தறிவை

ஏழாவது கொடையாக வழங்கினார்.]

6விருப்புரிமை, நாக்கு, கண்,

காது ஆகியவற்றையும்

சிந்திப்பதற்கு ஓர்

உள்ளத்தையும் அவர்களுக்குக்

கொடுத்தார்.

7அவர்களை அறிவாலும்

கூர்மதியாலும் நிரப்பினார்;

நன்மை தீமையையும்

அவர்களுக்குக் காட்டினார்.

8அவர்களின் உள்ளத்தைப்பற்றி

விழிப்பாய் இருந்தார்;

தம் செயல்களின் மேன்மையைக்

காட்டினார்.

9*[தம் வியத்தகு செயல்கள் பற்றி

என்றும் பெருமைப்படும்

உரிமையை அவர்களுக்கு அளித்தார்.]

10அவர்கள் அவரது திருப்பெயரைப்

புகழ்வார்கள்; இவ்வாறு

அவருடைய செயல்களின்

மேன்மையைப் பறைசாற்றுவார்கள்.

11அறிவை அவர்களுக்கு வழங்கினார்;

வாழ்வு அளிக்கும்

திருச்சட்டத்தை அவர்களுக்கு

உரிமையாக்கினார்.

12அவர்களுடன் முடிவில்லா

உடன்படிக்கை செய்துகொண்டார்;

தம் தீர்ப்புகளை அவர்களுக்கு

வெளிப்படுத்தினார்.

13அவர்களின் கண்கள் அவருடைய

மாட்சியைக் கண்டன;

அவர்களின் செவிகள் அவரது

மாட்சியின் குரலைக் கேட்டன.

14“எல்லாவகைத் தீமைகள்

குறித்தும் கவனமாய் இருங்கள்”

என்று அவர் எச்சரித்தார்;

அடுத்திருப்பவர்களைப் பற்றிய

கட்டளைகளை அவர்கள்

ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்.

கடவுளே நடுவர்

15மனிதரின் வழிகளை ஆண்டவர்

எப்போதும் அறிவார்;

அவரின் பார்வையிலிருந்து

அவை மறைந்திருப்பதில்லை.

16*[இளமை தொட்டே அவர்களின்

வழிகள் தீமையை நாடுகின்றன.

தங்களின் கல்லான இதயத்தை

உணர்ச்சியுள்ள இதயமாக

மாற்ற அவர்களால் முடியாது.]

17நாடுகள் ஒவ்வொன்றுக்கும்

ஒரு தலைவரை ஏற்படுத்தினார்;

இஸ்ரயேல் நாடோ ஆண்டவரின்

பங்காகும்.

18*[இஸ்ரயேல் அவருடைய

தலைப்பேறு. அதை

நற்பயிற்சியில் வளர்க்கிறார்;

அதன்மீது தம் அன்பின்

ஒளியை வீசுகிறார்; அதைக்

கவனியாது விட்டுவிடுவதில்லை.]

19மனிதரின் செயல்கள் அனைத்தும்

கதிரவனின் ஒளிபோல்

அவர் திருமுன்

தெளிவாய்த் துலங்குகின்றன;

அவருடைய கண்கள் எப்போதும்

அவர்களுடைய வழிகள் மீது

இருக்கும்.

20அவர்களுடைய அநீதியான

செயல்கள் அவருக்கு

மறைவாய் இருப்பதில்லை;

அவர்களின் பாவங்கள்

அனைத்தையும் ஆண்டவர் அறிவார்.

21*[ஆண்டவர் நல்லவர்;

அவர் தம் படைப்புகளை அறிவார்.

அவற்றை அவர் விட்டுவிடவில்லை,

கைவிடவுமில்லை;

மாறாகப் பாதுகாத்தார்.]

22மனிதர் செய்யும் தருமங்கள்

அவருக்குக் கணையாழிபோல்

திகழ்கின்றன; அவர்கள்

புரியும் அன்புச் செயல்கள்

அவருக்குக் கண்மணிபோல்

விளங்குகின்றன.

23பின்னர் அவர் எழுந்து

அவர்களுக்குக் கைம்மாறு செய்வார்;

அவர்களுக்குச் சேரவேண்டிய

வெகுமதியை அவர்களின்

தலைமேல் பொழிவார்.

24இருப்பினும் மனம் வருந்துவோரைத்

தம்பால் ஈர்த்துக்கொள்கிறார்

நம்பிக்கை இழந்தோரை ஊக்குவிக்கிறார்.

மனந்திரும்ப அழைப்பு

25ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்;

பாவங்களை விட்டு விலகுங்கள்;

அவர் திருமுன் வேண்டுங்கள்;

குற்றங்களைக் குறைத்துக்

கொள்ளுங்கள்.

26உன்னத இறைவனிடம்

திரும்பி வாருங்கள்;

அநீதியை விட்டு

விலகிச் செல்லுங்கள்;

அவர் அருவருப்பதை

அடியோடு வெறுத்திடுங்கள்.

27வாழ்வோர் உன்னத இறைவனுக்கு

நன்றி செலுத்துகின்றனர்;

ஆனால் கீழுலகில் அவரது

புகழை யாரே பாடுவர்?

28உயிர் வாழ்ந்திராதவர் போன்றே

இறந்தவர்களும் அவருக்கு

நன்றி செலுத்துவதில்லை;

உடல் நலத்துடன் உயிர்

வாழ்வோரோ அவரைப் போற்றுகின்றனர்.

29ஆண்டவரின் இரக்கம்

எத்துணைப் பெரிது!

அவரிடம் மனந்திரும்புவோருக்கு

அவர் அளிக்கும் மன்னிப்பு

எத்துணை மேலானது!

30எல்லாமே மனிதரின்

ஆற்றலுக்கு உட்பட்டதில்லை;

மனிதர் இறவாமை பெற்றவர் அல்லர்.

31கதிரவனைவிட ஒளி மிக்கது எது?

ஆயினும் சூரிய கிரகணமும்

உண்டு. ஊனும் உதிரமும்

கொண்ட மனிதர் தீமைகளைப்

பற்றியே சிந்திக்கின்றனர்.

32அவர் உயர் வானத்தின்

படைகளை வகைப்படுத்துகிறார்.

மனிதர் அனைவரும் புழுதியும் சாம்பலுமே.


17:1-4 தொநூ 1:26-28; 3:18. சாஞா 2:23.
17:7 தொநூ 2:17.
17:14 விப 20:12-17.
17:17 இச 32:9.
17:27-28 திபா 6:5; எசா 38:18-19. பாரூ 2:17-18.


17:5 [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது.
17:9 [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது.
17:16 [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது.
17:18 [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது.
17:21 [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks