back to top
HomeTamilசீராக்கின் ஞானம் அதிகாரம் - 17 - திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரம் – 17 – திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1ஆண்டவர் மனிதரை

மண்ணால் படைத்தார்;

மீண்டும் அந்த மண்ணுக்கே

திரும்புமாறு செய்கிறார்.

2அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட

காலவரையை வகுத்தார்;

மண்ணுலகில் உள்ளவற்றின்மீது

அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.

3தமக்கு உள்ளதைப்போன்ற

வலிமையை அவர்களுக்கு

வழங்கினார்; தமது சாயலாகவே

அவர்களை உருவாக்கினார்.

4எல்லா உயிரினங்களும் மனிதருக்கு

அஞ்சும்படி செய்தார்;

விலங்குகள், பறவைகள்மீது

அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.

5*[தம் ஐந்தறிவைப் பயன்படுத்தும்

உரிமையை ஆண்டவர்

அவர்களுக்கு அளித்தார்;

ஆறாவதாகத் தம் அறிவுத்திறனில்

பங்கு கொடுத்தார்;

அந்த ஆறறிவையும்

விளக்கும் பகுத்தறிவை

ஏழாவது கொடையாக வழங்கினார்.]

6விருப்புரிமை, நாக்கு, கண்,

காது ஆகியவற்றையும்

சிந்திப்பதற்கு ஓர்

உள்ளத்தையும் அவர்களுக்குக்

கொடுத்தார்.

7அவர்களை அறிவாலும்

கூர்மதியாலும் நிரப்பினார்;

நன்மை தீமையையும்

அவர்களுக்குக் காட்டினார்.

8அவர்களின் உள்ளத்தைப்பற்றி

விழிப்பாய் இருந்தார்;

தம் செயல்களின் மேன்மையைக்

காட்டினார்.

9*[தம் வியத்தகு செயல்கள் பற்றி

என்றும் பெருமைப்படும்

உரிமையை அவர்களுக்கு அளித்தார்.]

10அவர்கள் அவரது திருப்பெயரைப்

புகழ்வார்கள்; இவ்வாறு

அவருடைய செயல்களின்

மேன்மையைப் பறைசாற்றுவார்கள்.

11அறிவை அவர்களுக்கு வழங்கினார்;

வாழ்வு அளிக்கும்

திருச்சட்டத்தை அவர்களுக்கு

உரிமையாக்கினார்.

12அவர்களுடன் முடிவில்லா

உடன்படிக்கை செய்துகொண்டார்;

தம் தீர்ப்புகளை அவர்களுக்கு

வெளிப்படுத்தினார்.

13அவர்களின் கண்கள் அவருடைய

மாட்சியைக் கண்டன;

அவர்களின் செவிகள் அவரது

மாட்சியின் குரலைக் கேட்டன.

14“எல்லாவகைத் தீமைகள்

குறித்தும் கவனமாய் இருங்கள்”

என்று அவர் எச்சரித்தார்;

அடுத்திருப்பவர்களைப் பற்றிய

கட்டளைகளை அவர்கள்

ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்.

கடவுளே நடுவர்

15மனிதரின் வழிகளை ஆண்டவர்

எப்போதும் அறிவார்;

அவரின் பார்வையிலிருந்து

அவை மறைந்திருப்பதில்லை.

16*[இளமை தொட்டே அவர்களின்

வழிகள் தீமையை நாடுகின்றன.

தங்களின் கல்லான இதயத்தை

உணர்ச்சியுள்ள இதயமாக

மாற்ற அவர்களால் முடியாது.]

17நாடுகள் ஒவ்வொன்றுக்கும்

ஒரு தலைவரை ஏற்படுத்தினார்;

இஸ்ரயேல் நாடோ ஆண்டவரின்

பங்காகும்.

18*[இஸ்ரயேல் அவருடைய

தலைப்பேறு. அதை

நற்பயிற்சியில் வளர்க்கிறார்;

அதன்மீது தம் அன்பின்

ஒளியை வீசுகிறார்; அதைக்

கவனியாது விட்டுவிடுவதில்லை.]

19மனிதரின் செயல்கள் அனைத்தும்

கதிரவனின் ஒளிபோல்

அவர் திருமுன்

தெளிவாய்த் துலங்குகின்றன;

அவருடைய கண்கள் எப்போதும்

அவர்களுடைய வழிகள் மீது

இருக்கும்.

20அவர்களுடைய அநீதியான

செயல்கள் அவருக்கு

மறைவாய் இருப்பதில்லை;

அவர்களின் பாவங்கள்

அனைத்தையும் ஆண்டவர் அறிவார்.

21*[ஆண்டவர் நல்லவர்;

அவர் தம் படைப்புகளை அறிவார்.

அவற்றை அவர் விட்டுவிடவில்லை,

கைவிடவுமில்லை;

மாறாகப் பாதுகாத்தார்.]

22மனிதர் செய்யும் தருமங்கள்

அவருக்குக் கணையாழிபோல்

திகழ்கின்றன; அவர்கள்

புரியும் அன்புச் செயல்கள்

அவருக்குக் கண்மணிபோல்

விளங்குகின்றன.

23பின்னர் அவர் எழுந்து

அவர்களுக்குக் கைம்மாறு செய்வார்;

அவர்களுக்குச் சேரவேண்டிய

வெகுமதியை அவர்களின்

தலைமேல் பொழிவார்.

24இருப்பினும் மனம் வருந்துவோரைத்

தம்பால் ஈர்த்துக்கொள்கிறார்

நம்பிக்கை இழந்தோரை ஊக்குவிக்கிறார்.

மனந்திரும்ப அழைப்பு

25ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்;

பாவங்களை விட்டு விலகுங்கள்;

அவர் திருமுன் வேண்டுங்கள்;

குற்றங்களைக் குறைத்துக்

கொள்ளுங்கள்.

26உன்னத இறைவனிடம்

திரும்பி வாருங்கள்;

அநீதியை விட்டு

விலகிச் செல்லுங்கள்;

அவர் அருவருப்பதை

அடியோடு வெறுத்திடுங்கள்.

27வாழ்வோர் உன்னத இறைவனுக்கு

நன்றி செலுத்துகின்றனர்;

ஆனால் கீழுலகில் அவரது

புகழை யாரே பாடுவர்?

28உயிர் வாழ்ந்திராதவர் போன்றே

இறந்தவர்களும் அவருக்கு

நன்றி செலுத்துவதில்லை;

உடல் நலத்துடன் உயிர்

வாழ்வோரோ அவரைப் போற்றுகின்றனர்.

29ஆண்டவரின் இரக்கம்

எத்துணைப் பெரிது!

அவரிடம் மனந்திரும்புவோருக்கு

அவர் அளிக்கும் மன்னிப்பு

எத்துணை மேலானது!

30எல்லாமே மனிதரின்

ஆற்றலுக்கு உட்பட்டதில்லை;

மனிதர் இறவாமை பெற்றவர் அல்லர்.

31கதிரவனைவிட ஒளி மிக்கது எது?

ஆயினும் சூரிய கிரகணமும்

உண்டு. ஊனும் உதிரமும்

கொண்ட மனிதர் தீமைகளைப்

பற்றியே சிந்திக்கின்றனர்.

32அவர் உயர் வானத்தின்

படைகளை வகைப்படுத்துகிறார்.

மனிதர் அனைவரும் புழுதியும் சாம்பலுமே.


17:1-4 தொநூ 1:26-28; 3:18. சாஞா 2:23.
17:7 தொநூ 2:17.
17:14 விப 20:12-17.
17:17 இச 32:9.
17:27-28 திபா 6:5; எசா 38:18-19. பாரூ 2:17-18.


17:5 [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது.
17:9 [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது.
17:16 [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது.
17:18 [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது.
17:21 [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks