சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
1ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர்கள்
இவற்றையெல்லாம் செய்வார்கள்;
திருச்சட்டத்தைக் கற்றுத்
தேர்ந்தவர்கள் ஞானத்தை
அடைவார்கள்.
2தாய் போன்று ஞானம்
அவர்களை எதிர்கொள்ளும்;
இளம் மணமகள் போல்
அவர்களை வரவேற்கும்.
3அறிவுக் கூர்மை எனும்
உணவை அவர்கள் அருந்தக்
கொடுக்கும்; ஞானமாகிய
நீரைப் பருக அளிக்கும்.
4அவர்கள் அதன்மீது
சாய்ந்து கொள்வார்கள்;
விழமாட்டார்கள்;
அதைச் சார்ந்து வாழ்பவர்கள்
இகழ்ச்சி அடையமாட்டார்கள்.
5அடுத்திருப்பவருக்கு மேலாக
அது அவர்களை உயர்த்தும்;
சபை நடுவில் பேச நாவன்மை நல்கும்.
6அவர்கள் அக்களிப்பையும்
மகிழ்ச்சியின் முடியையும்
கண்டடைவார்கள்;
நிலையான பெயரை
உரிமையாக்கிக் கொள்வார்கள்.
7அறிவிலிகள் ஞானத்தை
அடையமாட்டார்கள்;
பாவிகள் அதைக் காணமாட்டார்கள்;
8இறுமாப்பினின்று அது
விலகி நிற்கும்;
பொய்யர் ஒரு போதும்
அதை நினைத்துப்பாரார்.
9பாவிகளின் வாயிலிருந்து
வரும் இறைப்புகழ்ச்சி தகாதது;
அது ஆண்டவரிடமிருந்து
அவர்களுக்கு அருளப்படவில்லை.
10ஞானத்தினின்று இறைப்புகழ்ச்சி
வெளிப்படவேண்டும்;
ஆண்டவரே அதை
வளமுறச் செய்வார்.
விருப்புரிமை
11‘ஆண்டவரே
என் வீழ்ச்சிக்குக் காரணம்’
எனச் சொல்லாதே;
தாம் வெறுப்பதை
அவர் செய்வதில்லை.
12‘அவரே என்னை நெறிபிறழச்
செய்தார்’ எனக் கூறாதே;
பாவிகள் அவருக்குத்
தேவையில்லை.
13ஆண்டவர் அருவருப்புக்குரிய
அனைத்தையும் வெறுக்கிறார்;
அவருக்கு அஞ்சிநடப்போர்
அவற்றை விரும்புவதில்லை.
14அவரே தொடக்கத்தில்
மனிதரை உண்டாக்கினர்;
தங்கள் விருப்புரிமையின்படி
செயல்பட அவர்களை விட்டுவிட்டார்.
15நீ விரும்பினால் கட்டளைகளைக்
கடைப்பிடி; பற்றுறுதியுடன்
நடப்பது உனது விருப்பத்தைப்
பொறுத்தது.
16உனக்குமுன் நீரையும்
நெருப்பையும் அவர் வைத்துள்ளார்;
உன் கையை நீட்டி உனக்கு
விருப்பமானதை எடுத்துக்கொள்.
17மனிதர்முன் வாழ்வும்
சாவும் வைக்கப்பட்டுள்ளன.
எதை அவர்கள் விரும்புகிறார்களோ
அதுவே அவர்களுக்குக்
கொடுக்கப்படும்.
18ஆண்டவரின் ஞானம் பெரிது.
அவர் ஆற்றல் மிக்கவர்;
அனைத்தையும் அவர் காண்கிறார்.
19ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் மீது
அவரது பார்வை இருக்கும்;
மனிதரின் செயல்கள் அனைத்தையும்
அவர் அறிவார்.
20இறைப்பற்றின்றி இருக்க
யாருக்கும் ஆண்டவர்
கட்டளையிட்டதில்லை;
பாவம் செய்ய எவருக்கும்
அவர் அனுமதி கொடுத்ததும் இல்லை.