சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
1பழிவாங்குவோர்
ஆண்டவரிடமிருந்து
பழிக்குப்பழியே பெறுவர்.
ஆண்டவர் அவர்களுடைய
பாவங்களைத் திண்ணமாய்
நினைவில் வைத்திருப்பார்.
2உனக்கு அடுத்திருப்பவர்
செய்த அநீதியை
மன்னித்துவிடு;
அவ்வாறெனில் நீ
மன்றாடும் போது உன்
பாவங்கள் மன்னிக்கப்படும்.
3மனிதர் மனிதர்மீது
சினங்கொள்கின்றனர்;
அவ்வாறிருக்க, ஆண்டவர்
தங்களுக்கு நலம் அளிப்பார்
என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
4மனிதர் தம்போன்ற மனிதருக்கு
இரக்கங்காட்டுவதில்லை;
அப்போது அவர்கள்
தம் பாவமன்னிப்புக்காக
எப்படி மன்றாடமுடியும்?
5அழியும் தன்மை கொண்ட
மனிதர் வெகுளியை
வளர்க்கின்றனர்.
அவ்வாறாயின், யார்
அவர்களுடைய பாவங்களுக்குக்
கழுவாய் தேட முடியும்?
6உன் முடிவை நினைத்துப்பார்;
பகைமையை அகற்று;
அழிவையும் சாவையையும்
நினைத்துப்பார்;
கட்டளைகளில் நிலைத்திரு.
7கட்டளைகளை நினைவில் கொள்;
அடுத்தவர்மீது சினங்கொள்ளாதே;
உன்னத இறைவனின்
உடன்படிக்கையைக் கருத்தில் வை;
குற்றங்களைப் பொருட்படுத்தாதே.
பூசல்
8பூசலைத் தவிர்த்திடு;
உன் பாவங்கள் குறையும்.
சீற்றங்கொள்வோர் சண்டையை
மூட்டிவிடுகின்றனர்.
9பாவிகள் நட்பைக்
கலைக்கிறார்கள்;
அமைதியாய் இருப்போரிடையே
பிணக்கை விதைக்கிறார்கள்.
10விறகின் தன்மைக்கு
ஏற்ப நெருப்பு பற்றியெரியும்;
பூசலின் கடுமைக்கு
ஏற்ப அது பற்றியெரியும்.
மனிதரின் வலிமையைப் பொறுத்து
அவர்களின் சீற்றம் அமையும்;
அவர்களின் செல்வத்தைப் பொறுத்து
அவர்களது சினம் பெருகும்.
11திடீர் வாக்குவாதம்
நெருப்பை மூட்டுகிறது;
திடீர்ப் பூசல் கொலைக்கு
இட்டுச் செல்கிறது.
12ஊதும்போது தீப்பொறி
கொழுந்துவிட்டு எரிகிறது;
அதன்மீது துப்பும்போது
அது அணைந்துபோகிறது;
இந்த இரு விளைவுகளும்
உன் வாயினின்றே புறப்படுகின்றன.
புறங் கூறுதல்
13புறங்கூறுவோரையும்
இரட்டை நாக்குக்
கொண்டோரையும் சபி.
அமைதியில் வாழ்ந்த பலரை
அவர்கள் அழித்துவிட்டார்கள்.
14மூன்றாவது நாக்கு*
பலரை நிலைகுலையச் செய்தது;
அவர்களை நாடுவிட்டு நாடு
துரத்தியடித்தது;
அரண் கொண்ட நகர்களைத்
தகர்த்தெறிந்தது;
பெரியோர்களின்
வீடுகளைத் தரைமட்டமாக்கியது.
15மூன்றாவது நாக்கு
பற்றுள்ள மனைவியரையும்
வெளியில் துரத்தியது;
அவர்களுடைய உழைப்பின்
பயனை இழக்கச் செய்தது.
16அதற்குச் செவிசாய்ப்பவர்கள்
ஓய்வு கொள்ளமாட்டார்கள்;
அமைதியிலும் வாழமாட்டார்கள்.
17சவுக்கடி தழும்பை உண்டாக்கும்;
வாயடியோ எலும்பை முறிக்கும்.
18பலர் வாள்முனையில்
மடிந்திருக்கின்றனர்;
நாவால் மடிந்தோரே
அவர்களை விட மிகுதியானோர்.
19மூன்றாவது நாக்கினின்று
பாதுகாக்கப்பட்டோர்
பேறுபெற்றோர்;
அதன் சீற்றத்துக்கு
ஆளாகாதோறும்
அதன் நுகத்தைச்
சுமக்காதோறும்
அதன் சங்கிலிகளால்
கட்டப்படாதோரும்
பேறுபெற்றோர்.
20அதன் நுகம் இரும்பு நுகம்;
அதன் சங்கிலிகள்
வெண்கலச் சங்கிலிகள்.
21அதனால் விளையும்
சாவு இழிந்த சாவு;
அதனைவிடப் பாதாளம்
மேலானது.
22இறைப்பற்றுள்ளோர்மீது
அதற்கு ஆற்றலில்லை;
அதன் தீப்பிழம்புகள்
அவர்களை எரிப்பதில்லை.
23ஆண்டவரைவிட்டு விலகுவோர்
அதற்குள் விழுகின்றனர்;
அவர்களுக்குள் அது
கொழுந்துவிட்டு எரியும்;
அதை அணைக்க முடியாது.
அது சிங்கத்தைப்போன்று
அவர்கள் மீது கட்டவீழ்த்து
விடப்படும்;
வேங்கையைப்போன்று
அவர்களைப் பிறிட்டுக் கிழிக்கும்.
24உன் உடைமைகளைச்
சுற்றி முள் வேலியிடு;
உன் வெள்ளியையும்
பொன்னையையும் பூட்டிவை.
25உன் சொற்களை நிறுத்துப்
பார்க்கத் துலாக் கோலையும்
எடைக்கற்களையும் செய்துகொள்;
உன் வாய்க்குக் கதவு
ஒன்று செய்து அதைத் தாழிடு.
26நாவால் தவறாதபடி
எச்சரிக்கையாய் இரு;
இல்லையேல்,
உனக்காய்ப் பதுங்கியிருப்போர்
முன் நீ வீழ்ச்சியுறுவாய்.