சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
1 நீ விருந்துக்குத் தலைவனாக ஏற்படுத்தப்பட்டுள்ளாயா? இறுமாப்புக் கொள்ளாதே; விருந்தினர்களுள் நீயும் ஒருவனாக நடந்துகொள்; முதலில் மற்றவர்களைக் கவனி; பிறகு நீ பந்தியில் அமர்ந்துகொள்.
2 உன் கடமைகளையெல்லாம் நீ செய்தபின் பந்தியில் அமர்ந்துகொள்; அப்போது அவர்கள்மூலம் நீ மகிழ்வாய்; விருந்தை நன்முறையில் நடத்தித்தந்தமைக்காக நீ மணிமுடி பெறுவாய்.
3 மூப்பரே, பேசும்; அது உமக்குத் தகும். ஆனால் நுண்ணிய அறிவாற்றலோடு பேசும்; இன்னிசையைத் தடை செய்யாதிரும்.
4 இசை ஒலிக்கும் இடத்தில் மிகுதியாகப் பேசாதீர்; பொருந்தா வேளையில் உம் ஞானத்தை வெளிப்படுத்தாதீர்.
5 திராட்சை இரசம் பரிமாறப்படும் விருந்தில் அமையும் இன்னிசை நிகழ்ச்சி பொன் அணிகளில் இருக்கும் மாணிக்க முத்திரை போன்றது.
6 சிறப்புமிகு திராட்சை இரசம் பரிமாறப்படும் விருந்தில் அமையும் பண்ணொழுகும் இன்னிசை பொன் அணிகலன்களில் இருக்கும் இரத்தின முத்திரை போன்றது.
7 இளைஞனே, தேவைப்பட்டால் பேசு; அரிதாக, அதுவும் இரு முறை வினவப்பெற்றால் மட்டும் பேசு.
8 சுருக்கமாய்ப் பேசு; குறைவான சொற்களில் நிறைய சொல்; அறிந்திருந்தும் அமைதியாக இரு.
9 பெரியார்கள் நடுவின் உன்னை அவர்களுக்கு இணையாக்கிக் கொள்ளாதே; அடுத்தவர் பேசும்போது உளறிக்கொண்டிராதே.
10 இடி முழக்கத்திற்குமுன் மின்னல் வெட்டுகிறது; அடக்கமான மனிதருக்குமுன் அவர்களது நற்பெயர் செல்கிறது.
11 விருந்தைவிட்டு நேரத்தோடு எழுந்திரு; கடைசி ஆளாய் இராதே; அலைந்து திரியாது வீட்டுக்கு விரைந்து செல்.
12 அங்குக் களித்திரு; உன் விருப்பப்படி செய்; செருக்கான பேச்சுகளால் பாவம் செய்யாதே.
13 மேலும் உன்னைப் படைத்தவரைப் போற்று; அவரே தம் நலன்களால் உன்னை நிரப்பியவர்.
14 ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் நற்பயிற்சியை ஏற்றுக்கொள்வர்; வைகறையில் அவரைத் தேடுவோர் அவரது பரிவைப் பெற்றுக் கொள்வர்.
15 திருச்சட்டத்தை ஆய்ந்தறிவோர் அதனால் நிறைவுபெறுவர்; வெளிவேடக்காரர் அதனால் தடக்கி விழுவர்.
16 ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் நீதித் தீர்ப்பைக் காண்பர்; தங்களின் நேர்மையான செயல்களை ஒளிபோலத் தூண்டிவிடுவர்.
17 பாவியர் கண்டனத்தைத் தட்டிக் கழிப்பர்; தங்கள் விருப்பத்திற்கு ஏற்பச் சாக்குப் போக்குகளைக் கண்டுபிடிப்பர்.
18 அறிவுள்ளோர் பிறருடைய கருத்துகளைப் புறக்கணியார்; பெருமையும் இறுமாப்பும் கொண்டோர் அச்சத்தால் பின்னடையார்.
19 எண்ணிப் பாராது எதையும் செய்யாதே; செய்தபின் மனம் வருந்தாதே.
20 சிக்கலான வழிதனியே போகாதே; ஒரே கல்மீது இரு முறை தடுக்கி விழாதே.
21 தடங்கலற்ற வழியை நம்பாதே.
22 உன் பிள்ளைகளிடமிருந்தும் உன்னைக் காப்பாற்றிக்கொள்.
23 உன் செயல்கள் அனைத்திலும் உன்னையே நம்பு; இவ்வாறு கட்டளைகளைக் கடைப்பிடிப்பாய்.
24 திருச்சட்டத்தை நம்புவோர் கட்டளைகளுக்குப் பணிந்து நடப்பர்; ஆண்டவரை நம்புவோர்க்கு இழப்பு என்பதே இல்லை.