back to top
HomeTamilசீராக்கின் ஞானம் அதிகாரம் - 31 - திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரம் – 31 – திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

செல்வம்

1செல்வத்தின் மீதுள்ள விழிப்பு

உடலை நலியச் செய்கிறது;

அதைப்பற்றிய கவலை

உறக்கத்தைத் துரத்தியடிக்கின்றது.

2கவலை நிறைந்த விழிப்பு

ஆழ்துயிலைக் கெடுக்கிறது;

கொடிய நோய் உறக்கத்தைக்

கலைக்கிறது.

3செல்வம் திரட்டச் செல்வர்

கடுமையாய் உழைக்கின்றனர்;

தம் ஓய்வின்போது இன்பத்தில்

திளைக்கின்றனர்.

4ஏழைகள் கடுமையாய்

உழைத்தும் வறுமையில்

வாழ்கிறார்கள்; ஓய்வின்போது

தேவையில் உழல்கிறார்கள்.

5பொன்னை விரும்புவோர்

நீதியைக் கடைப்பிடியார்

மேன்மையை நாடுவோர்

அதனாலேயே நெறிபிறழ்வர்.*

6பொன்னை முன்னிட்டுப் பலர்

அழிவுக்கு ஆளாயினர்;

அவர்கள் அழிவை நேரில்

எதிர்க்கொண்டனர்.

7அதன்மீது பேராவல் கொள்வோருக்கு

அது ஒரு தடைக்கல்;

அறிவிலிகள் அனைவரும்

அதனால் பிடிபடுவர்.

8குற்றமில்லாது காணப்படும்

செல்வர் பேறுபெற்றோர்;

அவர்கள் பொன்னை

நாடிப் போவதில்லை.

9இத்தகையோர் யார்? அவர்களைப்

பேறுபெற்றோர் எனலாம்;

ஏனெனில் அவர்கள்

தங்கள் மக்களிடையே வியக்கத்

தக்கன செய்திருக்கிறார்கள்.

10பொன்னால் சோதிக்கப்பட்டு

நிறைவுள்ளவராய்க்

காணப்பட்டோர் யார்? அவர்கள்

அதிலே பெருமை கொள்ளட்டும்.

தவறு செய்யக்கூடிய சூழ்நிலை

இருந்திருந்தும் தவறு செய்யாமல்

விட்டவர் யார்? தீமை புரியக்கூடிய

சூழ்நிலை இருந்திருந்தும்

தீமை புரியாமல் விட்டவர் யார்?

11இத்தகையோருடைய சொத்து

நிலையாய் இருக்கும்; இஸ்ரயேலர்

கூட்டம் அவர்களுடைய

தருமங்களை எடுத்துரைக்கும்.

விருந்து

12அறுசுவை விருந்து

உன்னை அமர்ந்திருக்கிறாயா?

அதன்மீது பேராசை கொள்ளாதே.

‘நிறைய பண்டங்கள் உள்ளன’

என வியக்காதே.

13பேராசை படைத்த கண்

தீயது என நினைத்துக்கொள்.

படைக்கப்பட்டவற்றுள் கண்ணைவிடக்

கெட்டது எது? அதனால்தான்

எல்லாக் கண்களினின்றும் நீர் வடிகிறது.

14காண்பவைமீதெல்லாம்

கையை நீட்டாதே; பொது

ஏனத்திலிருந்து உணவை

எடுக்கும்போது அடுத்தவரை

நெருக்காதே.

15உனக்கு அடுத்திருப்பவரின்

தேவைகளை உன்னுடையவற்றைக்

கொண்டே அறிந்துகொள்;

எல்லாவற்றிலும் அடுத்திருப்பவர்களைப்

பற்றிக் கருத்தாய் இரு.

16உனக்குமுன் வைக்கப்பட்டவற்றைப்

பண்புள்ள மனிதர்போன்று சாப்பிடு;

பேராசையோடு விழுங்காதே;

இல்லையேல் நீ வெறுக்கப்படுவாய்.

17நற்பயிற்சியை முன்னிட்டு

உண்டு முடிப்பதில்

முதல்வனாய் இரு;

அளவு மீறி உண்ணாதே;

இல்லையேல் அடுத்தவரைப்

புண்படுத்துவாய்.

18பலர் நடுவே நீ பந்தியில்

அமர்ந்திருக்கும்போது

மற்றவருக்குமுன் நீ

உண்ணத்தொடங்காதே.

19நற்பயிற்சி பெற்றோருக்கு

சிறிது உணவே போதுமானது;

படுத்திருக்கும்போது அவர்கள்

அரும்பாடுபட்டு

மூச்சுவிடமாட்டார்கள்.

20அளவோடு உண்பதால்

ஆழ்ந்த உறக்கம் வருகிறது;

அவர்கள் வைகறையில்

துயில் எழுகிறார்கள்;

உயிரோட்டம் உள்ளவர்களாய்

இருக்கிறார்கள்.

தூக்கமின்மை, குமட்டல்,

கடும் வயிற்றுவலி ஆகியவை

அளவின்றி உண்பவருக்கு

உண்டாகும்.

21மிகுதியாக உண்ணுமாறு

நீ கட்டாயப்படுத்தப்பட்டால்,

இடையில் எழுந்துபோய்

வாந்தியெடு;* அது உனக்கு

நலம் பயக்கும்.

22குழந்தாய்,

நான் சொல்வதைக் கேள்;

என்னைப் புறக்கணியாதே.

கடைசியில் நான் சொல்வதன்

பொருளைக் கண்டுணர்வாய்.

உன் செயல்கள் எல்லாவற்றிலும்

சுறுசுறுப்பாய் இரு; அப்பொழுது

எந்த நோயும் உன்னை அணுகாது.

23தாராளமாக விருந்தோம்புவோரை

மனிதர் புகழ்வர்; அவர்களுடைய

ஈகைக்கு மானிடர் பகரும்

சான்று நம்பத்தக்கது.

24கஞ்சத்தனமாக உணவு

படைப்போரைப்பற்றி நகரே

குறைகூறும்; அவர்களுடைய

கஞ்சத்தனத்திற்கு மனிதர்

பகரும் சான்று முறையானது.

திராட்சை இரசம்

25திராட்சை இரசம்

அருந்துவதால் உன் ஆற்றலைக்

காட்டமுயலாதே;

திராட்சை இரசம் பலரை

அழித்திருக்கிறது.

26இரும்பின் உறுதியைச்

சூளை பரிசோதிக்கின்றது;

செருக்குற்றோரின் பூசல்களில்

அவர்களின் உள்ளத்தைத்

திராட்சை இரசம் பரிசோதிக்கின்றது.

27திராட்சை இரசத்தை

அளவோடு குடிக்கின்றபோது

அது மனிதருக்கு வாழ்வை

அளிக்கின்றது. திராட்சை இரசம்

இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை!

மானிடரின் மகிழ்வுக்காக

அது படைக்கப்பட்டது.

28உரிய நேரத்தில் அளவோடு

அருந்தப்படும் திராட்சை

இரசம் உள்ளத்திற்கு இன்பத்தையும்

மனத்திற்கு மகிழ்வையும் அளிக்கிறது.

29அளவுக்குமீறி அருந்தப்படும்

திராட்சை இரசம் சினத்தையும்

பூசலையும் தூண்டிவிடுகிறது;

மனக் கசப்பையும் விளைவிக்கிறது.

30அறிவிலிகள் தங்களுக்கே

கேடுவிளைக்கும்படி

குடிவெறி அவர்களின்

சீற்றத்தைத் தூண்டிவிடுகிறது;

அவர்களின் வலிமையைக்

குறைக்கிறது; அவர்கள்

காயம்பட நேரிடுகிறது.

31திராட்சை இரசம் பரிமாறப்படும்

விருந்தில் உனக்கு

அடுத்திருப்பவரைக் கடிந்துக்கொள்ளாதே;

அவர்கள் மகிழ்ந்திருக்கும்போது

அவர்களை இகழாதே;

அவர்களைப் பழித்துப் பேசாதே;

கடனைத் திருப்பிக்கேட்டு

அவர்களைத் தொல்லைப்படுத்தாதே.


31:5 ‘அழிவைத் தேடுவோர் அதனாலேயே நிரப்பப்படுவர்’ என்னும் பாடமும் சில சுவடிகளில் காணப்படுகிறது.
31:21 சில கிரேக்கச் சுவடிகளில் ‘இடையிலே எழுந்துபோய் ஓய்வு கொள்’ என உள்ளது.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks