திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
கடவுளுக்காக ஏங்குதல்
(யூதாவின் பாலைநிலத்தில் இருந்தபோது, தாவீது பாடிய புகழ்ப்பா)
1கடவுளே! நீரே என் இறைவன்!
உம்மையே நான் நாடுகின்றேன்;
என் உயிர் உம்மீது
தாகம் கொண்டுள்ளது;
நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல
என் உடல் உமக்காக ஏங்குகின்றது.
2உம் ஆற்றலையும் மாட்சியையும்
காண விழைந்து
உம் தூயகம் வந்து
உம்மை நோக்குகின்றேன்.
3ஏனெனில், உமது பேரன்பு
உயிரினும் மேலானது;
என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன.
4என் வாழ்க்கை முழுவதும்
இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்;
கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.
5அறுசுவை விருந்தில்
நிறைவடைவதுபோல
என் உயிர் நிறைவடையும்;
என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால்
உம்மைப் போற்றும்.
6நான் படுத்திருக்கையில்
உம்மை நினைப்பேன்;
இரா விழிப்புகளில்
உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன்.
7ஏனெனில், நீர் எனக்குத்
துணையாய் இருந்தீர்;
உம் இறக்கைகளின் நிழலில்
மகிழ்ந்து பாடுகின்றேன்.
8நான் உம்மை உறுதியாகப்
பற்றிக்கொண்டேன்;
உமது வலக்கை
என்னை இறுகப் பிடித்துள்ளது.
9என்னை அழித்துவிடத் தேடுவோர்
பூவுலகின் ஆழத்திற்குள் செல்வர்.
10அவர்கள் வாளுக்கு இரையாவர்;
நரிகளுக்கு விருந்தாவர்.
11அரசரோ கடவுளை நினைத்துக்
களிகூர்வார்;
அவர்மேல் ஆணையிட்டுக் கூறுவோர்
அனைவரும் பெருமிதம் கொள்வர்;
பொய் சொல்வோரின் வாய்
அடைக்கப்படும்.