திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
உதவிக்காக மன்றாடல்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)
1நான் இன்னலுற்ற வேளையில்
ஆண்டவரை நோக்கி
மன்றாடினேன்;
அவரும் எனக்குச் செவி சாய்த்தார்.
2ஆண்டவரே! பொய் பேசும் வாயினின்று
என்னை விடுவித்தருளும்;
வஞ்சக நாவினின்று
என்னைக் காத்தருளும்.
3வஞ்சகம் பேசும் நாவே!
உனக்கு என்ன கிடைக்கும்?
அதற்கு மேலும் உனக்கு
என்னதான் கிடைக்கும்?
4வீரனின் கூரிய அம்புகளும்
தணல் வீசும் கரிகளும்தான் கிடைக்கும்!
5ஐயோ! நான் மேசேக்கில்
அன்னியனாய் வாழ்ந்தபோதும்,
கேதாரில் கூடாரங்களில்
தங்க நேர்ந்தபோதும்,
6சமாதானத்தைக் குலைப்பவர்களோடு,
நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று.
7நான் சமாதானத்தை நாடுவேன்;
அதைப் பற்றியே பேசுவேன்;
ஆனால், அவர்களுக்கோ
போர் ஒன்றில்தான் நாட்டம்!