திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
கடவுளுக்கு அஞ்சி நடப்போர்
1அல்லேலூயா! ஆண்டவருக்கு
அஞ்சிநடப்போர் பேறுபெற்றோர்;
அவர்தம் கட்டளைகளில்
அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.
2அவர்களது வழிமரபு பூவுலகில்
வலிமைமிக்கதாய் இருக்கும்;
நேர்மையுள்ளோரின் தலைமுறை
ஆசிபெறும்.
3சொத்தும் செல்வமும்
அவர்களது இல்லத்தில் தங்கும்;
அவர்களது நீதி
என்றென்றும் நிலைத்திருக்கும்.
4இருளில் ஒளியென அவர்கள்
நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்;
அருளும் இரக்கமும் நீதியும்
உள்ளோராய் இருப்பர்.
5மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர்
நன்மை அடைவர்;
அவர்கள் தம் அலுவல்களில்
நீதியுடன் செயல்படுவர்.
6எந்நாளும் அவர்கள் அசைவுறார்;
நேர்மையுள்ளோர்
மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்.
7தீமையான செய்தி எதுவும்
அவர்களை அச்சுறுத்தாது;
ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால்
அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்.
8அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்;
அவர்களை அச்சம் மேற்கொள்ளாது;
இறுதியில் தம் எதிரிகள் அழிவதை
அவர்கள் காண்பது உறுதி.
9அவர்கள் வாரி வழங்கினர்;
ஏழைகளுக்கு ஈந்தனர்;
அவர்களது நீதி
என்றென்றும் நிலைத்திருக்கும்;
அவர்களது வலிமை
மாட்சியுடன் மேலோங்கும்.
10தீயோர் அதைப் பார்த்து எரிச்சல் அடைவர்;
பல்லை நெரிப்பர்; சோர்ந்து போவர்;
தீயோரின் விருப்பமெல்லாம்
வீணாய்ப்போம்.