திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
மாவேந்தரின் வருகை
(தாவீதின் புகழ்ப்பா)
1மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள
அனைத்தும் ஆண்டவருடையவை;
நிலவுலகும் அதில் வாழ்வனவும்
அவருக்கே சொந்தம்.
2ஏனெனில், அவரே கடல்கள்மீது
அதற்கு அடித்தளமிட்டார்;
ஆறுகள்மீது அதை
நிலைநாட்டினவரும் அவரே.
3ஆண்டவரது மலையில் ஏறத்
தகுதியுள்ளவர் யார்?
அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்?
4கறைபடாத கைகளும்
மாசற்ற மனமும் உடையவர்;
பொய்த் தெய்வங்களை நோக்கித்
தம் உள்ளத்தை உயர்த்தாதவர்;
வஞ்சக நெஞ்சோடு
ஆணையிட்டுக் கூறாதவர்,
5இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்;
தம் மீட்பராம் கடவுளிடமிருந்து
நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
6அவரை நாடுவோரின்
தலைமுறையினர் இவர்களே:
*யாக்கோபின் கடவுளது முகத்தைத்*
தேடுவோர் இவர்களே. (சேலா)
7வாயில்களே, உங்கள் நிலைகளை
உயர்த்துங்கள்;
தொன்மைமிகு கதவுகளே,
உயர்ந்து நில்லுங்கள்;
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.
8மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?
வலிமையும் ஆற்றலும் கொண்ட
ஆண்டவர் இவர்; இவரே
போரில் வல்லவரான ஆண்டவர்.
9வாயில்களே,
உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்;
தொன்மைமிகு கதவுகளே,
உயர்ந்து நில்லுங்கள்;
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.
10மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?
படைகளின் ஆண்டவர் இவர்;
இவரே மாட்சிமிகு மன்னர். (சேலா)