Home » Tamil » திருப்பாடல்கள் அதிகாரம் – 36 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 36 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
Click the play button to listen or click the Download button to save a copy.

மானிடரின் தீய குணம்
(பாடகர் தலைவர்க்கு: ஆண்டவரின் ஊழியரான தாவீதுக்கு உரியது)

1*பொல்லாரின் உள்ளத்தில்*

தீமையின் குரல்

ஒலித்துக் கொண்டே இருக்கின்றது;

அவர்களின் மனக்கண்களில்

இறையச்சம் இல்லை.

2ஏனெனில் அவர்கள், குற்றம் வெளிப்பட்டு

வெறுப்புக்கு உள்ளாகப் போவதில்லை என,

இறுமாந்து தமக்குத்தாமே

பெருமை பாராட்டிக்கொள்கின்றனர்.

3அவர்கள் வாயின் சொற்கள்

தீமையும் வஞ்சகமும் நிறைந்தவை;

நல்லுணர்வோடு நற்செயல் ஆற்றுவதை

அவர்கள் அடியோடு விட்டுவிட்டனர்.

4படுக்கையில் கிடக்கையில் அவர்கள்

சதித்திட்டங்களைத் தீட்டுகின்றனர்,

தகாத வழியை

உறுதியாகப் பற்றிக் கொள்கின்றனர்;

தீமையைப் புறம்பே தள்ளுவதில்லை.

கடவுளின் கருணை

5ஆண்டவரே! வானளவு உயர்ந்துள்ளது

உமது பேரன்பு;

முகில்களைத் தொடுகின்றது

உமது வாக்குப் பிறழாமை.

6ஆண்டவரே, உமது நீதி

இறைவனின் மலைகள்போல் உயர்ந்தது;

உம் தீர்ப்புகள் கடல்போல்

ஆழமானவை;

மனிதரையும் விலங்கையும் காப்பவர் நீரே;

7கடவுளே, உமது பேரன்பு

எத்துணை அருமையானது!

மானிடர் உம் இறக்கைகளின் நிழலில்

புகலிடம் பெறுகின்றனர்.

8உமது இல்லத்தின் செழுமையால்

அவர்கள் நிறைவு பெறுகின்றனர்;

உமது பேரின்ப நீரோடையில்

அவர்கள் தாகத்தைத் தணிக்கின்றீர்.

9ஏனெனில், வாழ்வு தரும் ஊற்று

உம்மிடமே உள்ளது;
உமது ஒளியால் யாமும் ஒளி பெறுகின்றோம்.

10உம்மை அறிந்தோர்க்கு

உமது பேரன்பையும்,

நேரிய உள்ளத்தோர்க்கு உமது நீதியையும்

தொடர்ந்து வழங்கியருளும்!

11செருக்குற்றோரின் கால்

என்னை நசுக்க விடாதேயும்!

பொல்லாரின் கை

என்னைப் பிடிக்க விடாதேயும்!

12தீங்கிழைப்போர் அதோ அங்கே

குப்புற வீழ்ந்து கிடக்கின்றனர்,

அவர்கள் நசுக்கப்பட்டனர்;

அவர்களால் எழவே இயலாது.


36:1 உரோ 3:18.

36:1 *…* ‘என் உள்ளத்தில்’ என்பது எபிரேய பாடம்.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more