திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
பொல்லார், நல்லார் முடிவுகள்
(தாவீதுக்கு உரியது)
1தீமை செய்வோரைக் கண்டு
மனம் புழுங்காதே;
பொல்லாங்கு செய்வாரைக் கண்டு
பொறாமைப்படாதே;
2ஏனெனில், அவர்கள் புல்லைப் போல்
விரைவில் உலர்ந்து போவர்;
பசும் பூண்டைப்போல் வாடிப்போவர்.
3ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்;
நாட்டிலேயே குடியிரு;
நம்பத் தக்கவராய் வாழ்.
4ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்;
உன் உள்ளத்து விருப்பங்களை
அவர் நிறைவேற்றுவார்.
5உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு;
அவரையே நம்பியிரு;
அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.
6உன் நேர்மையைக் கதிரொளி போலும்,
உன் நாணயத்தை நண்பகல் போலும்
அவர் விளங்கச் செய்வார்.
7ஆண்டவர்முன் அமைதியுடன் காத்திரு;
தம் வழியில் வெற்றி காண்போரையும்
சூழ்ச்சிகள் செய்வோரையும் பார்த்து
எரிச்சல் கொள்ளாதே.
8வெஞ்சினம் கொள்ளாதே;
வெகுண்டெழுவதை விட்டுவிடு;
எரிச்சலடையாதே;
அதனால் தீமைதான் விளையும்.
9தீமை செய்வோர் வேரறுக்கப்படுவர்;
ஆண்டவருக்காகக் காத்திருப்போரே
நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்.
10இன்னும் சிறிதுகாலம்தான்;
பிறகு பொல்லார் இரார்;
அவர்கள் இருந்த இடத்தில்
நீ அவர்களைத் தேடினால்
அவர்கள் அங்கே இரார்.
11எளியோர் நிலத்தை
உடைமையாகப் பெறுவர்;
அவர்கள் வளமிகு வாழ்க்கையில்
இன்பம் காண்பர்.
12பொல்லார் நேர்மையாளருக்குத்
தீங்கிழைக்கத் திட்டமிடுகின்றனர்;
அவர்களைப் பார்த்துப்
பல்லை நெரிக்கின்றனர்.
13என் தலைவர் அவர்களைப் பார்த்து
எள்ளி நகைக்கின்றார்;
அவர்களது முடிவுகாலம் நெருங்குவதை
அவர் காண்கின்றார்.
14எளியோரையும் வறியோரையும் வீழ்த்தவும்,
நேர்மையான வழியில் நடப்போரைக்
கொல்லவும் பொல்லார்
வாளை உருவுகின்றனர்;
வில்லை நாணேற்றுகின்றனர்.
15ஆனால், அவர்கள் வாள்
அவர்கள் நெஞ்சிலேயே பாயும்;
அவர்கள் வில்லும் முறிக்கப்படும்.
16பொல்லாரின் திரளான செல்வத்தைவிட
நல்லாரின் சிறிதளவு பொருளே சிறந்தது.
17பொல்லாரின் தோள்வலிமை முறிக்கப்படும்;
ஆனால் நேர்மையாளரை
ஆண்டவர் தாங்கிடுவார்.
18சான்றோரின் வாழ்நாள்களை
ஆண்டவர் அறிவார்;
அவர்கள் உரிமைச் சொத்து
என்றும் நிலைத்திருக்கும்.
19கேடுகாலத்தில்
அவர்கள் இகழ்ச்சி அடைவதில்லை;
பஞ்ச காலத்திலும்
அவர்கள் நிறைவடைவார்கள்.
20ஆனால், பொல்லார் அழிவுக்கு ஆளாவர்;
ஆண்டவரின் எதிரிகள்
கொழுத்த பலியாடுகளுக்கு ஒப்பாவர்.
அவர்கள் எரியுண்டு புகையென மறைவர்.
21பொல்லார் வாங்கிய கடனைத்
திருப்பிக் கொடுக்க மாட்டார்;
நேர்மையாளரோ மனமிரங்கிப்
பிறருக்குக் கொடுப்பர்.
22இறைவனின் ஆசி பெற்றோர்
நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்;
அவரால் சபிக்கப்பட்டோர் வேரறுக்கப்படுவர்.
23தாம் உவகைகொள்ளும்
நடத்தையைக் கொண்ட
மனிதரின் காலடிகளை
ஆண்டவர் உறுதிப்படுத்துகின்றார்.
24அவர்கள் விழுந்தாலும்
வீழ்ந்து கிடக்கமாட்டார்கள்;
ஆண்டவர் அவர்களைத்
தம் கையால் தூக்கி நிறுத்துவார்.
25இளைஞனாய் இருந்திருக்கிறேன்;
இதோ! முதியவன் ஆகிவிட்டேன்;
ஆனால், நேர்மையாளர் கைவிடப்பட்டதை
நான் கண்டதில்லை;
அவர்களுடைய மரபினர்
பிச்சை எடுப்பதை நான் பார்த்ததில்லை.
26நேர்மையாளர் எப்போதும் மனமிரங்கிக்
கடன் கொடுப்பர்;
அவர்களின் மரபினர்
இறையாசி பெற்றவராய் இருப்பர்.
27தீமையினின்று விலகு; நல்லது செய்;
எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய்.
28ஏனெனில், ஆண்டவர்
நேர்மையை விரும்புகின்றார்;
தம் அன்பரை அவர் கைவிடுவதில்லை;
அவர்களை என்றும் பாதுகாப்பார்.
பொல்லாரின் மரபினரோ
வேரறுக்கப்படுவர்.
29நேர்மையாளர்
நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்;
அதிலேயே என்றென்றும் குடியிருப்பர்.
30நேர்மையாளரின் வாய்
ஞானத்தை அறிவிக்கும்;
அவர்கள் நா
நீதிநெறியை எடுத்துரைக்கும்.
31கடவுளின் திருச்சட்டம்
அவர்களது உள்ளத்தில் இருக்கின்றது;
அவர்களின் கால்கள் சறுக்குவதில்லை.
32பொல்லார் நேர்மையாளரை
வேவு பார்த்துக் கொண்டிருப்பர்;
அவர்களைக் கொன்றுவிட வழிதேடுவர்.
33ஆனால், ஆண்டவர் நேர்மையாளரை
அவர்களின் கையில் ஒப்புவிக்கமாட்டார்;
நீதி விசாரணையின்போது
அவர்களைத் தண்டனைத்தீர்ப்புக்கு
உள்ளாக்கமாட்டார்.
34ஆண்டவருக்காகக் காத்திரு;
அவர்தம் வழியைப் பின்பற்று;
அப்பொழுது நீ நிலத்தை
உடைமையாக்கிக்கொள்ளும்படி
அவர் உன்னை உயர்த்துவார்.
பொல்லார் வேரறுக்கப்படுவதை
நீ காண்பாய்.
35வளமான நிலத்தில்
தழைத்தோங்கும் மரம்போல்
கொடிய நெஞ்சங்கொண்ட பொல்லார்
செழித்திருக்கக் கண்டேன்.
36ஆனால், அவர்கள்
மறைந்துவிட்டார்கள்;
அந்தோ! அவர்கள் அங்கில்லை;
தேடிப் பார்த்தேன்;
அவர்களைக் காணவில்லை.
37சான்றோரைப் பார்;
நேர்மையானவரைக் கவனி;
அமைதியையே நாடும் அம்மனிதருக்கு
வழிமரபினர் இருப்பர்.
38அநீதியாளர் அனைவரும்
ஒன்றாக அழிக்கப்படுவர்;
பொல்லாரின் வழிமரபினர்
வேரறுக்கப்படுவர்.
39நேர்மையாளருக்கு மீட்பு
ஆண்டவரிடமிருந்து வருகின்றது,
நெருக்கடியான நேரத்தில்
அவர்களுக்கு வலிமையும் அவரே.
40ஆண்டவர் துணைநின்று
அவர்களை விடுவிக்கின்றார்;
பொல்லாரிடமிருந்து
அவர்களை விடுவிக்கின்றார்;
அவரிடம் அடைக்கலம் புகுந்ததால்,
அவர்களை மீட்கின்றார்.