back to top
HomeTamilதிருப்பாடல்கள் அதிகாரம் - 37 - திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 37 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

பொல்லார், நல்லார் முடிவுகள்
(தாவீதுக்கு உரியது)

1தீமை செய்வோரைக் கண்டு

மனம் புழுங்காதே;

பொல்லாங்கு செய்வாரைக் கண்டு

பொறாமைப்படாதே;

2ஏனெனில், அவர்கள் புல்லைப் போல்

விரைவில் உலர்ந்து போவர்;

பசும் பூண்டைப்போல் வாடிப்போவர்.

3ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்;

நாட்டிலேயே குடியிரு;

நம்பத் தக்கவராய் வாழ்.

4ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்;

உன் உள்ளத்து விருப்பங்களை

அவர் நிறைவேற்றுவார்.

5உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு;

அவரையே நம்பியிரு;

அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.

6உன் நேர்மையைக் கதிரொளி போலும்,

உன் நாணயத்தை நண்பகல் போலும்

அவர் விளங்கச் செய்வார்.

7ஆண்டவர்முன் அமைதியுடன் காத்திரு;

தம் வழியில் வெற்றி காண்போரையும்

சூழ்ச்சிகள் செய்வோரையும் பார்த்து

எரிச்சல் கொள்ளாதே.

8வெஞ்சினம் கொள்ளாதே;

வெகுண்டெழுவதை விட்டுவிடு;

எரிச்சலடையாதே;

அதனால் தீமைதான் விளையும்.

9தீமை செய்வோர் வேரறுக்கப்படுவர்;

ஆண்டவருக்காகக் காத்திருப்போரே

நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்.

10இன்னும் சிறிதுகாலம்தான்;

பிறகு பொல்லார் இரார்;

அவர்கள் இருந்த இடத்தில்

நீ அவர்களைத் தேடினால்

அவர்கள் அங்கே இரார்.

11எளியோர் நிலத்தை

உடைமையாகப் பெறுவர்;

அவர்கள் வளமிகு வாழ்க்கையில்

இன்பம் காண்பர்.

12பொல்லார் நேர்மையாளருக்குத்

தீங்கிழைக்கத் திட்டமிடுகின்றனர்;

அவர்களைப் பார்த்துப்

பல்லை நெரிக்கின்றனர்.

13என் தலைவர் அவர்களைப் பார்த்து

எள்ளி நகைக்கின்றார்;

அவர்களது முடிவுகாலம் நெருங்குவதை

அவர் காண்கின்றார்.

14எளியோரையும் வறியோரையும் வீழ்த்தவும்,

நேர்மையான வழியில் நடப்போரைக்

கொல்லவும் பொல்லார்

வாளை உருவுகின்றனர்;

வில்லை நாணேற்றுகின்றனர்.

15ஆனால், அவர்கள் வாள்

அவர்கள் நெஞ்சிலேயே பாயும்;

அவர்கள் வில்லும் முறிக்கப்படும்.

16பொல்லாரின் திரளான செல்வத்தைவிட

நல்லாரின் சிறிதளவு பொருளே சிறந்தது.

17பொல்லாரின் தோள்வலிமை முறிக்கப்படும்;

ஆனால் நேர்மையாளரை

ஆண்டவர் தாங்கிடுவார்.

18சான்றோரின் வாழ்நாள்களை

ஆண்டவர் அறிவார்;

அவர்கள் உரிமைச் சொத்து

என்றும் நிலைத்திருக்கும்.

19கேடுகாலத்தில்

அவர்கள் இகழ்ச்சி அடைவதில்லை;

பஞ்ச காலத்திலும்

அவர்கள் நிறைவடைவார்கள்.

20ஆனால், பொல்லார் அழிவுக்கு ஆளாவர்;

ஆண்டவரின் எதிரிகள்

கொழுத்த பலியாடுகளுக்கு ஒப்பாவர்.

அவர்கள் எரியுண்டு புகையென மறைவர்.

21பொல்லார் வாங்கிய கடனைத்

திருப்பிக் கொடுக்க மாட்டார்;

நேர்மையாளரோ மனமிரங்கிப்

பிறருக்குக் கொடுப்பர்.

22இறைவனின் ஆசி பெற்றோர்

நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்;

அவரால் சபிக்கப்பட்டோர் வேரறுக்கப்படுவர்.

23தாம் உவகைகொள்ளும்

நடத்தையைக் கொண்ட

மனிதரின் காலடிகளை

ஆண்டவர் உறுதிப்படுத்துகின்றார்.

24அவர்கள் விழுந்தாலும்

வீழ்ந்து கிடக்கமாட்டார்கள்;

ஆண்டவர் அவர்களைத்

தம் கையால் தூக்கி நிறுத்துவார்.

25இளைஞனாய் இருந்திருக்கிறேன்;

இதோ! முதியவன் ஆகிவிட்டேன்;

ஆனால், நேர்மையாளர் கைவிடப்பட்டதை

நான் கண்டதில்லை;

அவர்களுடைய மரபினர்

பிச்சை எடுப்பதை நான் பார்த்ததில்லை.

26நேர்மையாளர் எப்போதும் மனமிரங்கிக்

கடன் கொடுப்பர்;

அவர்களின் மரபினர்

இறையாசி பெற்றவராய் இருப்பர்.

27தீமையினின்று விலகு; நல்லது செய்;

எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய்.

28ஏனெனில், ஆண்டவர்

நேர்மையை விரும்புகின்றார்;

தம் அன்பரை அவர் கைவிடுவதில்லை;

அவர்களை என்றும் பாதுகாப்பார்.

பொல்லாரின் மரபினரோ

வேரறுக்கப்படுவர்.

29நேர்மையாளர்

நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்;

அதிலேயே என்றென்றும் குடியிருப்பர்.

30நேர்மையாளரின் வாய்

ஞானத்தை அறிவிக்கும்;

அவர்கள் நா

நீதிநெறியை எடுத்துரைக்கும்.

31கடவுளின் திருச்சட்டம்

அவர்களது உள்ளத்தில் இருக்கின்றது;

அவர்களின் கால்கள் சறுக்குவதில்லை.

32பொல்லார் நேர்மையாளரை

வேவு பார்த்துக் கொண்டிருப்பர்;

அவர்களைக் கொன்றுவிட வழிதேடுவர்.

33ஆனால், ஆண்டவர் நேர்மையாளரை

அவர்களின் கையில் ஒப்புவிக்கமாட்டார்;

நீதி விசாரணையின்போது

அவர்களைத் தண்டனைத்தீர்ப்புக்கு

உள்ளாக்கமாட்டார்.

34ஆண்டவருக்காகக் காத்திரு;

அவர்தம் வழியைப் பின்பற்று;

அப்பொழுது நீ நிலத்தை

உடைமையாக்கிக்கொள்ளும்படி

அவர் உன்னை உயர்த்துவார்.

பொல்லார் வேரறுக்கப்படுவதை

நீ காண்பாய்.

35வளமான நிலத்தில்

தழைத்தோங்கும் மரம்போல்

கொடிய நெஞ்சங்கொண்ட பொல்லார்

செழித்திருக்கக் கண்டேன்.

36ஆனால், அவர்கள்

மறைந்துவிட்டார்கள்;

அந்தோ! அவர்கள் அங்கில்லை;

தேடிப் பார்த்தேன்;

அவர்களைக் காணவில்லை.

37சான்றோரைப் பார்;

நேர்மையானவரைக் கவனி;

அமைதியையே நாடும் அம்மனிதருக்கு

வழிமரபினர் இருப்பர்.

38அநீதியாளர் அனைவரும்

ஒன்றாக அழிக்கப்படுவர்;

பொல்லாரின் வழிமரபினர்

வேரறுக்கப்படுவர்.

39நேர்மையாளருக்கு மீட்பு

ஆண்டவரிடமிருந்து வருகின்றது,

நெருக்கடியான நேரத்தில்

அவர்களுக்கு வலிமையும் அவரே.

40ஆண்டவர் துணைநின்று

அவர்களை விடுவிக்கின்றார்;

பொல்லாரிடமிருந்து

அவர்களை விடுவிக்கின்றார்;

அவரிடம் அடைக்கலம் புகுந்ததால்,

அவர்களை மீட்கின்றார்.


37:11 மத் 5:5.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks