back to top
HomeTamilஎசாயா அதிகாரம் - 51 - திருவிவிலியம்

எசாயா அதிகாரம் – 51 – திருவிவிலியம்

எசாயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

எருசலேமுக்கு ஆண்டவரின் ஆறுதல் மொழி

1விடுதலையை நாடுவோரே,

ஆண்டவரைத் தேடுவோரே,

எனக்குச் செவிகொடுங்கள்.

நீங்கள் எந்தப் பாறையினின்று

செதுக்கப்பட்டீர்களோ,

எந்தக் குழியினின்று

தோண்டப் பட்டீர்களோ,

அதை நோக்குங்கள்.

2உங்கள் தந்தை ஆபிரகாமையும்

உங்களைப் பெற்றெடுத்த சாராவையும்

நினைத்துப் பாருங்கள்;

தனியனாய் இருந்த

அவனை அழைத்தேன்;

அவனுக்கு ஆசி வழங்கிப்

பெரும் திரளாக்கினேன்.

3ஆண்டவர் சீயோனைத் தேற்றுவார்;

பாழடைந்த அதன் பகுதிகள்

அனைத்திற்கும் ஆறுதல் அளிப்பார்;

அதன் பாலைநிலத்தை

ஏதேன்போல் அமைப்பார்;

அதன் பாழ் இடங்களை ஆண்டவரின்

தோட்டம்போல் ஆக்குவார்.

மகிழ்ச்சியும் அக்களிப்பும்

அதில் காணப்படும்;

நன்றிப்பாடலும் புகழ்ச்சிப் பண்ணும்

அங்கே ஒலிக்கும்.

4என் மக்களே,

நான் சொல்வதைக் கேளுங்கள்;

என் இனமே, எனக்குச் செவிகொடு;

ஏனெனில் திருச்சட்டம்

என்னிடமிருந்து புறப்பட்டுச் செல்லும்;

என் நீதி மக்களினங்களுக்கு

ஒளியாகத் திகழும்.

5நான் அளிக்கும் விடுதலை

அண்மையில் உள்ளது;

நான் வழங்கும் மீட்பு

வெளிப்பட்டு விட்டது;

என் புயங்கள் மக்களினங்கள்மேல்

ஆட்சி செலுத்தும்;

என் கைவன்மைமீது

அவை நம்பிக்கை கொள்ளும்.

6வானத்தை நோக்கிக்

கண்களை உயர்த்துங்கள்;

கீழே மண்ணுலகை உற்றுநோக்குங்கள்;

ஏனெனில், வானம் புகையென

மறைந்துபோம்;

மண்ணுலகம் உடையென நைந்துபோம்;

அதில் வாழ்வோர் விட்டிலென மடிவர்;

என் மீட்போ என்றென்றும் நிலைக்கும்;

என் விடுதலைக்கு முடிவே இராது.

7நேர்மைதனை அறிந்தோரே,

என் சட்டத்தை இதயத்தே தாங்கும்

மக்களினத்தாரே,

எனக்குச் செவி கொடுங்கள்;

மானிடரின் நிந்தைக்கு அஞ்சாதீர்கள்;

அவர்தம் இழிசொல் கேட்டுக்

கலங்காதீர்கள்.

8ஏனெனில், பொட்டுப்பூச்சி அவர்களை

ஆடையெனத் தின்றழிக்கும்;

அரிப்புழு அவர்களை

ஆட்டு மயிரென அரித்தொழிக்கும்;

நான் அளிக்கும் விடுதலையோ

என்றென்றும் நிலைக்கும்;

நான் வழங்கும் மீட்போ

தலைமுறைதோறும் நீடிக்கும்.

9விழித்தெழு, விழித்தெழு,

ஆண்டவரின் புயமே,

ஆற்றலை அணிந்து கொள்;

பண்டைய நாள்களிலும்

முந்தைய தலைமுறைகளிலும்

செய்ததுபோல் விழித்தெழு;

இராகாபைத் துண்டு துண்டாக வெட்டியதும்

பறவை நாகத்தை ஊடுறவக் குத்தியதும்

நீ அன்றோ?

10பேராழ நீர்த்திரளாம்

கடலை வற்றச்செய்து,

ஆழ்பகுதிகளில் பாதை அமைத்து,

மீட்கப்பட்டோரை கடக்கச் செய்ததும்

நீயே அன்றோ?

11ஆண்டவரால் மீட்கப்பட்டோர்

திரும்பி வருவர்;

மகிழ்ந்து பாடிக்கொண்டே

சீயோனுக்கு வருவர்;

முடிவில்லா மகிழ்ச்சி

அவர்கள் தலைமேல் தங்கும்;

அக்களிப்பும் அகமகிழ்ச்சியும் அடைவர்;

துயரமும் பெருமூச்சும் ஒழிந்துபோம்.

12உங்களுக்கு ஆறுதல் வழங்குபவர்

நானேதான்!

மடிந்து போகும் மனிதருக்கும்

புல்லென மாயும் மானிடருக்கும்

நீ அஞ்சுவது ஏன்?

13உன்னை உருவாக்கிய ஆண்டவரை

நீ ஏன் மறந்துவிட்டாய்?

வானங்களை விரித்துப் பரப்பியவரும்,

மண்ணுலகிற்கு அடித்தளமிட்டவரும்

அவர் அன்றோ?

உன்னை ஒடுக்கி

அழித்துவிட முயன்றவன்

சீற்றத்தை முன்னிட்டு

நீ ஏன் எந்நாளும்

ஓய்வின்றி நடுங்குகிறாய்?

உன்னை ஒடுக்கியவனின் சினம் எங்கே?

14கூனிக் குறுகியவன்

விரைவில் விடுதலை பெறுவான்;

அவன் குழியில் செத்து வீழ்வதில்லை;

அவனுக்கு உணவு இல்லாமல் போகாது.

15உன் கடவுளாகிய ஆண்டவர் நானே!

கடலைக் கலக்கி அலைகளைக்

கொந்தளிக்கச் செய்பவர் நானே!

‘படைகளின் ஆண்டவர்’ என்பது

அவர்தம் பெயராம்!

16நான் வானங்களை

விரித்துப் பரப்பினேன்;

மண்ணுலகிற்கு

அடித்தளம் அமைத்தேன்;

சீயோனை நோக்கி,

“நீ என் மக்கள்” என்றேன்;

என் சொற்களை

உன் நாவில் அருளினேன்;

என் கை நிழலில்

உன்னை மறைத்துக்கொண்டேன்.

எருசலேமின் துன்பம் தீர்தல்

17விழித்தெழு, விழித்தெழு,

ஆண்டவர் கையினின்று,

சினக் கிண்ணத்தைக் குடித்தவளே,

மதியை மயக்கும் அக்கிண்ணத்தை

அடிமண்டிவரை குடித்தவளே,

எருசலேமே, எழுந்து நில்.

18அவள் பெற்றெடுத்த புதல்வருள்

அவளுக்கு வழிகாட்டுவார் எவருமில்லை;

அவள் வளர்த்துவிட்ட ஆண் மக்களுள்

அவளுக்குக் கைகொடுப்பார் யாருமில்லை!

19இருவகைத் தீங்குகள் உனக்கு நேரிட்டன,

உனக்காகப் புலம்பியழுபவன் எவன்?

வீழ்ச்சி — அழிவு, பஞ்சம் — வாள்

இவை உன்னை வாட்டின;

யார் உன்னைத் தேற்றுவார்?

20உன் பிள்ளைகள் மயக்கமுற்றனர்;

வலையில் சிக்கிய கலைமான் போல்

அவர்கள் ஒவ்வொரு தெருமுனையிலும்

வீழ்ந்துகிடக்கின்றனர்;

ஆண்டவரின் சினத்திற்கும் உன்

கடவுளின் கண்டிப்புக்கும் உள்ளாயினர்.

21ஆதலால், சிறுமையுற்றவளே,

திராட்சை இரசம் இன்றியே

குடிவெறி கொண்டவளே, இதைக் கேள்.

22தம் மக்கள் சார்பாக வழக்காடும்

உன் கடவுளாகிய ஆண்டவர்,

உன் தலைவர் கூறுவது இதுவே:

“இதோ, உன்னை

மதிமயக்கும் கிண்ணத்தை

உன் கையினின்றும் அகற்றிவிட்டேன்;

என் சினக் கிண்ணத்தினின்று

நீ இனிக் குடிக்கவேமாட்டாய்.”

23அக்கிண்ணத்தை உன்னை

ஒடுக்கினோர் கையில் திணிப்பேன்;

“நாங்கள் கடந்து செல்வதற்கு

நீ முகங்குப்புற விழுந்துகிட” என்று

அவர்கள் உன்னிடம் சொன்னார்களே!

உன் முதுகை அவர்கள் தரையாகவும்,

கடந்து செல்வோருக்குக்குத்

தெருவாகவும் மாற்றினார்களே!


51:17 திவெ 14:10; 16:19.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks