back to top
HomeTamilஎசாயா அதிகாரம் - 62 - திருவிவிலியம்

எசாயா அதிகாரம் – 62 – திருவிவிலியம்

எசாயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1சீயோனின் வெற்றி

வைகறை ஒளியெனவும்,

அதன் மீட்பு சுடர் விளக்கெனவும்

வெளிப்படும்வரை,

அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்;

எருசலேம் பொருட்டுச்

செயலற்று அமைதியாயிரேன்.

2பிறஇனத்தார்

உன் வெற்றியைக் காண்பர்;

மன்னர் யாவரும்

உன் மேன்மையைப் பார்ப்பர்;

ஆண்டவர் தம் நாவினால் சூட்டும்

புதியதொரு பெயரால்

நீ அழைக்கப்படுவாய்.

3ஆண்டவரின் கையில் நீ

அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்;

உன் கடவுளின் கரத்தில்

அரச மகுடமாய் விளங்குவாய்.

4‘கைவிடப்பட்டவள்’ என்று

இனி நீ பெயர்பெற மாட்டாய்;

‘பாழ்பட்டது’ என

இனி உன் நாடு அழைக்கப்படாது;

நீ ‘எப்சிபா’* என்று அழைக்கப்படுவாய்;

உன் நாடு ‘பெயுலா’**என்று பெயர் பெறும்.

ஏனெனில், ஆண்டவர் உன்னை

விரும்புகின்றார்;

உன் நாடு மணவாழ்வு பெறும்.

5இளைஞன் கன்னிப் பெண்ணை

மணப்பதுபோல

உன்னை எழுப்பியவர்

உன்னை மணந்து கொள்வார்;

மணமகன் மணப்பெண்ணில்

மகிழ்வதுபோல்

உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.

6எருசலேமே, உன் மதில்கள்மேல்

காவலரை நிறுத்தியுள்ளேன்;

இராப்பகலாய் ஒருபோதும்

அவர்கள் அமைதியாய் இரார்;

ஆண்டவருக்கு நினைப்பூட்டுவோரே!

நொடிப்பொழுதும் அமைதியாய் இராதீர்.

7அவர் எருசலேமை நிலைநாட்டி,

பூவுலகில் அது புகழ் பெறும்வரை

அவரை ஓய்வெடுக்க விடாதீர்.

8ஆண்டவர் தம் வலக்கையின் மேலும்

வலிமைமிக்க தம் புயத்தின் மேலும்

ஆணையிட்டுக் கூறியது:

உன் தானியத்தை இனி

நான் உன் பகைவருக்கு

உணவாகக் கொடுக்கமாட்டேன்;

உன் உழைப்பால் கிடைத்த

திராட்சை இரசத்தை

வேற்றின மக்கள் பருகமாட்டார்கள்.

9அறுவடை செய்தவர்களே

அதை உண்டு ஆண்டவரைப் போற்றுவர்.

பழம் பறித்தவர்களே

என் தூயகச் சுற்றுமுற்றங்களில்

இரசம் பருகுவர்.

10செல்லுங்கள், வாயில்கள் வழியாய்க்

கடந்து செல்லுங்கள்;

மக்கள் வரப் பாதையைத் தயாராக்குங்கள்;

அமையுங்கள், நெடுஞ்சாலையைச்

சீராக அமையுங்கள்;

கற்களை அகற்றுங்கள்;

மக்களினங்கள்முன்

கொடியைத் தூக்கிப் பிடியுங்கள்.

11உலகின் கடைக்கோடி வரை

ஆண்டவர் பறைசாற்றியது:

“மகள் சீயோனிடம் சொல்லுங்கள்:

இதோ, உன் மீட்பு வருகின்றது,

அவரது வெற்றிப்பரிசு

அவருடன் உள்ளது;

அவரது செயலின் பயன்

அவர் முன்னே உள்ளது.”

12‘புனித மக்களினம்’ என்றும்

‘ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள்’ என்றும்

அவர்கள் அழைக்கப்படுவார்கள்;

நீயோ, ‘தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவன்’

என்றும்

இனி ‘கைவிடப்படாத நகர்’ என்றும்

பெயர் பெறுவாய்.


62:11 எசா 40:10; திவெ 22:12.


62:4 * எபிரேயத்தில், ‘அவளில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்பது பொருள்.
62:4 ** எபிரேயத்தில், ‘மணமுடித்தவள்’ என்பது பொருள்.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks