back to top
HomeTamilஎசாயா அதிகாரம் - 41 - திருவிவிலியம்

எசாயா அதிகாரம் – 41 – திருவிவிலியம்

எசாயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

இஸ்ரயேலுக்கு ஆண்டவரின் உறுதிமொழி

1தீவுகளே, என் திருமுன்னே

மௌனமாயிருங்கள்;

மக்களினங்கள் தம் ஆற்றலைப்

புதுப்பிப்பார்களாக!

அருகில் வந்து பேசுவார்களாக!

நீதித்தீர்ப்புக்காக

நாம் ஒருங்கே கூடிவருவோமாக!

2சென்றவிடமெல்லாம் சிறப்புறும்

நேர்மையாளனைக்

கிழக்கிலிருந்து எழும்பச் செய்தவர் யார்?

மக்களினங்களை

அவனிடம் கையளித்து

அரசர்களை

அவனுக்குக் கீழ்ப்படுத்தியவர் யார்?

அவன் வாள் அவர்களைப்

புழுதியாக்குகிறது;

அவன் வில் அவர்களைப்

பதர்போல் பறக்கச் செய்கிறது.

3அவன் அவர்களைத்

துரத்திச் செல்கின்றான்;

எதிர்ப்பு எதுவுமின்றி

முன்னேறுகின்றான்;

பாதை வழியே

காலடி படாது செல்கின்றான்.

4இவற்றைச்செய்து முடித்தவர் யார்?

தொடக்கத்திலிருந்தே

தலைமுறைகளை அழைத்தவரன்றோ!

ஆண்டவராகிய நானே முதலானவர்!

முடிவானவற்றுடன்

இருக்கப் போவதும் நானே!

5தீவு நாட்டினர்

அதைப் பார்த்து அஞ்சினர்;

உலகின் எல்லைகளில் வாழ்வோர்

நடுநடுங்கினர்; எனவே

அவர்கள் ஒருங்கே கூடி வந்தனர்.

6ஒவ்வொருவரும் தம் அடுத்தவருக்கு

உதவி செய்கின்றார்;

தம் அடுத்தவரிடம்,

‘திடன்கொள்’ என்கின்றார்.

7கைவினைஞர் பொற்கொல்லருக்கு

ஊக்கமூட்டுகின்றார்;

சுத்தியலால் தட்டுபவர்

சம்மட்டியால் அடிப்பவரிடம்,

பற்றவைப்பதுபற்றி, ‘நன்று’

என்று சொல்லி

உற்சாகப்படுத்துகின்றார்;

அசையாதபடி ஆணிகளால்

அதை இறுக்குகின்றார்.

8நீயோ, இஸ்ரயேலே! என் அடியவனே!

நான் தெரிந்தெடுத்த யாக்கோபே!

என் அன்பன் ஆபிரகாமின் வழிமரபே!

9உலகின் எல்லைகளினின்று

உன்னை அழைத்து வந்தேன்;

தொலைநாடுகளினின்று

உன்னை அழைத்தேன்;

‘நீ என் அடியவன்;

நான் உன்னைத் தெரிந்தெடுத்தேன்;

உன்னை நான் தள்ளிவிடவில்லை’

என்று சொன்னேன்.

10அஞ்சாதே,

நான் உன்னுடன் இருக்கிறேன்;

கலங்காதே, நான் உன் கடவுள்,

நான் உனக்கு வலிமை அளிப்பேன்;

உதவி செய்வேன்;

என் நீதியின் வலக்கரத்தால்

உன்னைத் தாங்குவேன்.

11உனக்கெதிராய்

வெகுண்டெழுவோர் அனைவரும்

மானக்கேடுற்று இழிநிலை அடைவர்;

உன்னை எதிர்த்து வழக்காடுவோர்

இல்லாதொழிவர்.

12உன்னை எதிர்த்துப் போராடியோரை

நீ தேடுவாய்; ஆனால்

அவர்களைக் கண்டுபிடிக்க மாட்டாய்;

உன்னை எதிர்த்துப் போரிட்டோர்

ஒழிந்து போவர்.

13ஏனெனில் நானே

உன் கடவுளாகிய ஆண்டவர்;

உன் வலக்கையைப் பற்றிப் பிடித்து,

“அஞ்சாதே, உனக்குத்

துணையாய் இருப்பேன்” என்று

உன்னிடம் சொல்பவரும் நானே.

14“யாக்கோபு என்னும் புழுவே,

இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே,

அஞ்சாதிரு; நான் உனக்குத்

துணையாய் இருப்பேன்,”

என்கிறார் ஆண்டவர்.

இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்.

15இதோ, நான் உன்னைப்

புதிய கூர்மையான

போரடிக்கும் கருவியாக்குவேன்.

நீ மலைகளைப்

போரடித்து நொறுக்குவாய்;

குன்றுகளைத் தவிடுபொடியாக்குவாய்.

16அவற்றைத் தூற்றுவாய்,

காற்று அவற்றை வாரிக்கொண்டுபோம்;

புயல் அவற்றைச் சிதறடிக்கும்;

ஆண்டவரில் நீ அகமகிழ்வாய்;

இஸ்ரயேலின் தூயவரில்

மேன்மை அடைவாய்.

17ஏழைகளும் வறியோரும்

நீரைத் தேடுகின்றனர்;

அது கிடைக்கவில்லை.

அவர்கள் தாகத்தால்

நாவறண்டு போகின்றனர்;

ஆண்டவராகிய நான்

அவர்களுக்குப் பதிலளிப்பேன்;

இஸ்ரயேலின் கடவுளாகிய நான்

அவர்களைக் கைவிடமாட்டேன்.

18பொட்டல் மேடுகளைப் பிளந்து

ஆறுகள் தோன்றச் செய்வேன்;

பள்ளத்தாக்குகளில்

நீரூற்றுகள் புறப்படச் செய்வேன்;

பாலைநிலத்தை

நீர்த் தடாகங்களாகவும்

வறண்ட நிலத்தை

நீர்ச் சுனைகளாகவும் மாற்றுவேன்.

19பாலைநிலத்தில்

கேதுரு மரங்களை வளரச் செய்வேன்;

சித்திம் மரம், மிருதுச் செடி,

ஒலிவ மரம் ஆகியன

தோன்றச் செய்வேன்;

பாழ்நிலத்தில்

தேவதாரு மரங்களையும்,

புன்னை மரங்களையும்,

ஊசியிலை மரங்களையும் வைப்பேன்.

20அப்போது, ஆண்டவர் தம் ஆற்றலால்

இதைச்செய்தார் என்றும்

இஸ்ரயேலின் தூயவர்

அதைப் படைத்தார் என்றும்

மக்கள் கண்டு உணர்ந்து கொள்வர்;

ஒருங்கே சிந்தித்துப் புரிந்து கொள்வர்.

பொய்த் தெய்வங்களுக்கு ஆண்டவரின் அறைகூவல்

21‘உங்கள் வழக்கைக் கொண்டு வாருங்கள்’

என்கிறார் ஆண்டவர்.

‘உங்கள் ஆதாரங்களை

எடுத்துரையுங்கள்’, என்கிறார்

யாக்கோபின் அரசர்.

22அத்தெய்வங்கள் அருகில் வந்து,

நிகழப்போவதை நமக்கு அறிவிக்கட்டும்;

முன்னே நடந்தவற்றை

எடுத்துரைக்கட்டும்;

நாம் சிந்தித்து அவற்றின்

இறுதி விளைவை அறிந்து கொள்வோம்;

இல்லாவிடில் வரவிருப்பவற்றை

நமக்கு எடுத்துக்கூறட்டும்.

23“நீங்கள் தெய்வங்கள் என

நாங்கள் உணரும்பொருட்டு

வருங்காலத்தில் நடப்பனவற்றை

எங்களுக்குக் கூறுங்கள்;

நன்மையாவது தீமையாவது

செய்யுங்கள்;

நாங்கள் யாவரும் ஒன்றாகக்கண்டு

திகைத்து நிற்போம்.

24இதோ, நீங்கள் ஒன்றுமில்லாமை!

உங்கள் செயலும் ஒன்றுமில்லாமையே!

உங்களைத் தேர்ந்துகொள்பவன்

வெறுக்கத்தக்கவன்”.

25நான் வடக்கிலிருந்து

ஒருவனை எழும்பச் செய்தேன்;

அவன் கதிரவன் உதிக்கும்

திசையிலிருந்து வந்துவிட்டான்;

அவன் என் பெயரைப் போற்றுவான்;

ஒருவன் சேற்றைக் குழைப்பதுபோலும்

குயவன் களிமண்ணை மிதிப்பது போலும்

அவன் ஆளுநர்களை நடத்துவான்.

26நாங்கள் அறியும்படி

தொடக்கத்திலிருந்தே

இதை அறிவித்தவர் யார்?

‘அது சரி’ என்று

நாங்கள் சொல்லும்முன்னரே

உரைத்தவர் யார்?

அப்படி எதுவும் அறிவிக்கவில்லை;

முன்னுரைக்கவில்லை;

நீங்கள் பேசியதை

யாரும் கேட்டதுமில்லை.

27“இதோ வருகிறார்கள்” என்று

முதன்முதலில் சீயோனுக்கு

அறிவித்தது நானே!

நற்செய்தியாளரை எருசலேமுக்கு

அனுப்பியதும் நானே!

28நான் சுற்றுமுற்றும் பார்த்தேன்;

எதையும் காணவில்லை;

அவற்றுள் அறிவுரை வழங்கவோ

என் வினாவுக்கு மறுமொழி தரவோ

எத்தெய்வமும் இல்லை.

29இதோ அவை அனைத்தும்

ஒன்றுமில்லாமையே!

அவற்றின் செயல்களும்

ஒன்றுமில்லாமையே!

அவற்றின் படிமங்களோ

வெறும் காற்றும் வெறுமையுமே!


41:8 2 குறி 20:7; யாக் 2:23.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks