எசாயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
எருசலேமுக்கு ஆண்டவரின் பாதுகாப்பு
1துணை வேண்டி எகிப்துக்குச்
செல்வோருக்கு ஐயோ கேடு!
அவர்கள் குதிரைகளுக்காகக்
காத்துக் கிடக்கின்றனர்;
பெரும் தேர்ப்படைகளையும்
வலிமைமிகு குதிரை வீரர்களையும்
நம்பியிருக்கிறார்கள்;
இஸ்ரயேலின் தூயவருக்காக
ஆவலுடன் காத்திருக்கவில்லை;
ஆண்டவரைத் தேடுவதுமில்லை;
2ஆனால் அவரோ ஞானமுடையவர்;
தீங்கை வருவிப்பவர்;
தம் வார்த்தைகளின் இலக்கை
மாற்றாதவர்;
தீயோர் வீட்டார்க்கும்
கொடியவருக்கு உதவுவோருக்கும்
எதிராகக் கிளர்ந்தெழுபவர்.
3எகிப்தியர் வெறும் மனிதரே,
இறைவன் அல்லர்;
அவர்கள் குதிரைகள் வெறும்
தசைப்பிண்டங்களே, ஆவிகள் அல்ல;
ஆண்டவர் தம் கையை ஓங்கும் போது
உதவி செய்பவன் இடறுவான்;
உதவி பெறுபவன் வீழ்வான்;
அவர்கள் அனைவரும் ஒருங்கே அழிந்தொழிவர்.
4ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே:
சிங்கமோ இளஞ்சிங்கமோ
தன் இரைமேல் பாய்ந்து
கர்ச்சிக்கும் போது
மேய்ப்பர் கூட்டம்
தனக்கெதிராய் எழுப்பும் கூக்குரலால்
திகிலடைவதில்லை;
அவர்கள் ஆரவாரத்தைப்
பொருட்படுத்துவதில்லை.
அதுபோல் படைகளின் ஆண்டவர்
சீயோன் மலைமேலும்
அதன் குன்றின்மேலும்
போர்புரிய இறங்கி வருவார்.
5பறக்கும் பறவைகள்போல்
படைகளின் ஆண்டவர்
எருசலேமுக்குப் பாதுகாப்பாய் இருப்பார்;
அதைப் பாதுகாத்து விடுவிப்பார்;
தண்டிக்காமல் தப்புவிப்பார்.
6இஸ்ரயேல் மக்களே! எனக்கெதிராகக் கலகம் செய்வதில் ஆழ்ந்துவிட்டீர்கள்; என்னிடம் திரும்பி வாருங்கள்.
7அந்நாளில் உங்களுள் ஒவ்வொருவரும் தமக்குப் பாவத்தை விளைவித்துக் கொள்ளுமாறு செய்த பொன், வெள்ளிச் சிலைகளைத் தூக்கி எறிந்து விடுவார்.
8“அசீரியன் வாளால் வீழ்வான்;
ஆனால் மனிதரின் வாளாலன்று;
அவனை வாள் விழுங்கிவிடும்;
ஆனால் அது மனிதரின் வாளன்று;
அவன் வாள் கண்டு, தப்பி ஓடுவான்;
அவனுடைய இளங்காளையர் அடிமையாக்கப்படுவர்.
9அவன் பாறை திகிலுற்று ஓடிப்போகும்;
அவன் தலைவர்
கலக்கமுற்று ஓடுவர்” என்கிறார்,
சீயோனில் தீப்பிழம்பையும்
எருசலேமில் தீச்சூளையையும்
கொண்ட ஆண்டவர்.