back to top
HomeTamilஎசாயா அதிகாரம் - 30 - திருவிவிலியம்

எசாயா அதிகாரம் – 30 – திருவிவிலியம்

எசாயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

எகிப்துடன் செய்துள்ள பயனற்ற உடன்பாடு

1கலகக்காரரான புதல்வருக்கு

ஐயோ கேடு! என்கிறார் ஆண்டவர்.

என்னிடமிருந்து பெறாத திட்டத்தைச்

செயல்படுத்துகின்றனர்;

என் தூண்டுதல் இன்றி

உடன்படிக்கை செய்கின்றனர்;

இவ்வாறு பாவத்தின் மேல் பாவத்தைக்

குவிக்கின்றனர்.

2என்னைக் கேளாமலேயே

எகிப்திற்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்;

பார்வோன் ஆற்றலில்

அடைக்கலம் பெறவும்

எகிப்தின் நிழலில்

புகலிடம் தேடவும் போகின்றனர்.

3பார்வோனின் அடைக்கலம் உங்களுக்கு

மானக்கேட்டைக் கொணரும்;

எகிப்தின் நிழலில் புகலிடம் தேடுவது

உங்களுக்கு இகழ்ச்சி ஆகும்.

4யூதாவின் தலைவர்

சோவானுக்கு வந்தனர்;

அதன் தூதர் ஆனேசுக்குச் சென்றனர்.

5பயனற்ற மக்களினத்தை முன்னிட்டு

அனைவரும் மானக்கேடடைவர்;

அவர்களால் யாதொரு உதவியோ

பயனோ இராது;

ஆனால் மானக்கேடும்

அவமதிப்புமே மிஞ்சும்.

6நெகேபிலுள்ள விலங்கினங்களைப்

பற்றிய இறைவாக்கு;

கடுந்துயரும் வேதனையும்

நிறைந்த நாடு அது;

பெண்சிங்கமும் ஆண்சிங்கமும்,

விரியன் பாம்பும் பறக்கும் நாகமும்

உள்ள நாடு அது!

இத்தகைய நாட்டின் வழியாய்,

கழுதைகளின் முதுகின்மேல்

அவர்கள் தங்கள் செல்வங்களையும்

ஒட்டகங்களின் திமில்கள்மேல்

தங்கள் அரும்பொருட்களையும் சுமத்தி,

முற்றிலும் பயனற்ற மக்களினங்களுக்குக்

கொண்டு செல்கிறார்கள்.

7எகிப்தியர் செய்யும் உதவி பயனற்றது;

ஆதலால் நான் அவர்களைச்

‘செயலற்ற இராகாபு’ என அழைத்தேன்.

கீழ்ப்படியாத மக்கள்

8இப்பொழுது நீ சென்று அவர்கள் முன்

பலகையில் பதித்து வை;

ஏட்டுச்சுருள் ஒன்றில் எழுதிவை;

வருங்காலத்திற்கென என்றுமுள

சான்றாக அது விளங்கும்.

9ஏனெனில், அவர்கள்

கலகம் செய்யும் மக்களாயும்

பொய்யுரைக்கும் பிள்ளைகளாயும்,

ஆண்டவரின் திருச்சட்டத்திற்குச்

செவிசாய்ப்பதை விரும்பாத

பிள்ளைகளாயும் உள்ளனர்.

10திருப்பார்வையாளரிடம் அவர்கள்

“திருப்பார்வை காண வேண்டாம்” என்றும்,

திருக்காட்சியாளரிடம்,

“எங்களுக்கென உண்மையானவற்றைக்

காட்சி காணவேண்டாம்;

இனிமையானவற்றை

எங்களுக்குக் கூறுங்கள்;

மாயமானவற்றையே கண்டு சொல்லுங்கள்;

11தடம் மாறிச் செல்லுங்கள்;

நெறியை விட்டு விலகுங்கள்;

இஸ்ரயேலின் தூயவரை

எங்கள் பார்வையிலிருந்து

அகற்றுங்கள்” என்கிறார்கள்.

12ஆதலால் இஸ்ரயேலின் தூயவர்

கூறுவது இதுவே:

என் எச்சரிக்கையை

நீங்கள் அவமதித்தீர்கள்:

அடக்கி ஆள்வதிலும் ஒடுக்குவதிலும்

நம்பிக்கை வைத்தீர்கள்;

அவற்றையே பற்றிக் கொண்டிருந்தீர்கள்.

13ஆதலால், உயர்ந்த மதிற்சுவரில்

இடிந்துவிழும் தறுவாயிலுள்ள பிளவு

திடீரென்று நொடிப்பொழுதில்

சரிந்து விழுவதுபோல்

இந்தத் தீச்செயல் உங்கள்மேல் விழும்.

14அது இடிந்து வீழ்வது,

குயவனின் மட்கலம்

சுக்குநூறாய் உடைந்து போவதுபோல்

இருக்கும்;

அடுப்பிலிருந்து நெருப்பு எடுப்பதற்கோ

பள்ளத்திலிருந்து நீர் மொள்வதற்கோ

உடைந்த துண்டுகளில்

எதுவுமே உதவாது.

15என் தலைவரும்

இஸ்ரயேலின் தூயவருமான

ஆண்டவர் கூறுவது இதுவே;

நீங்கள் என்னிடம் திரும்பி வந்து

அமைதியுற்றால் விடுதலை பெறுவீர்கள்:

அமைதியிலும் நம்பிக்கையிலுமே

நீங்கள் வலிமை பெறுவீர்கள்;

நீங்களோ ஏற்க மறுத்தீர்கள்.

16“முடியாது, நாங்கள் குதிரை ஏறி

விரைந்தோடத்தான் செய்வோம்”

என்கிறீர்கள்; ஆம்,

தப்பியோடத்தான் போகிறீர்கள்;

“விரைந்தோடும் தேரில்

ஏறிச்செல்வோம்” என்கிறீர்கள்;

ஆம், உங்களைத் துரத்தி வருபவர்

விரைந்து வருவார்.

17ஒருவன் மிரட்ட,

நீங்கள் ஆயிரம் பேர் ஓடுவீர்கள்;

ஐவர் அச்சுறுத்த

நீங்கள் உயிர் தப்பி ஓடுவீர்கள்;

மலை உச்சிக் கொடிமரம் போல்,

குன்றின்மேல் சின்னம்போல்

எஞ்சி நிற்பீர்கள்.

18ஆதலால் உங்களுக்குக் கருணை காட்ட

ஆண்டவர் காத்திருப்பார்;

உங்களுக்கு இரங்குமாறு எழுந்தருள்வார்;

ஏனெனில் ஆண்டவர் நீதியின் கடவுள்;

அவருக்காகக் காத்திருப்போர்

நற்பேறு பெற்றோர்.

ஆண்டவர் தம் மக்களுக்கு வழங்கும் ஆசி

19சீயோன் வாழ் மக்களே, எருசலேமில் குடியிருப்போரே, நீங்கள் இனி ஒருபோதும் அழமாட்டீர்கள்; அவர் உங்கள்மேல் திண்ணமாய் அருள்கூர்வார். நீங்கள் கூப்பிடும் குரலுக்குச் செவி சாய்த்து உங்களுக்கு மறுமொழி அளிப்பார்.

20என் தலைவராகிய உங்கள் போதகர் உங்களுக்கு துன்பமெனும் அப்பத்தையும் ஒடுக்குதலெனும் நீரையும் கொடுத்திருந்தாலும், இனித் தம்மை மறைத்துக்கொள்ள மாட்டார்; உங்கள் போதகரை நீங்கள் கண்ணால் காண்பீர்கள்.

21நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும் “இதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்” என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்.

22அப்போது வெள்ளி பொதிந்த உங்கள் சிலைகளையும் பொன் வேய்ந்த உங்கள் வார்ப்புப் படிமங்களையும் தீட்டாகக் கருதுவீர்கள்; தீட்டானவையாக அவற்றைக் கருதி வெளியே வீசித் ‘தொலைந்து போ’ என்பீர்கள்.

23நீங்கள் நிலத்தில் விதைத்துள்ள விதைமீது ஆண்டவர் மழை பொழிவார்; நிலத்தின் விளைவான உணவு செழுமையாகவும் மிகுதியாகவும் இருக்கும்; அந்நாளில் உன் மந்தை பரந்த மேய்ச்சல் வெளியில் மேயும்.

24முறத்தாலும் சுளகாலும் தூற்றப்பட்டுச் சுவையூட்டப்பட்ட தீனியை நிலத்தை உழும் காளைகளும் கழுதைகளும் தின்னும்.

25கோட்டைகள் இடிந்து விழுகின்ற மிகப்பெரும் அழிவுநாளில் வானளாவிய மலைகள் அனைத்தின் மேலும் உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மேலும் கால்வாய்களும் நீரோடைகளும் தோன்றும்.

26ஆண்டவர் தம் மக்களின் முறிவுகளைக் கட்டி, தாம் அடித்து ஏற்படுத்திய காயங்களைக் குணமாக்கும் நாளில், நிலவின் ஒளி கதிரவன் ஒளிபோலாகும்; கதிரவன் ஒளி ஏழு பகல்களின் ஒளி ஒன்று திரண்டாற்போல ஏழு மடங்காகும்.

அசீரியாவுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு

27இதோ, ஆண்டவரின் திருப்பெயர்

தொலையிலிருந்து வருகின்றது;

அவர் கனல்கக்கும் சினத்தோடும்

பொறுக்க ஒண்ணாச் சீற்றத்தோடும்

வருகின்றார்;

அவர் உதடுகள்

கடும் சினத்தால் துடிக்கின்றன;

அவர் நாக்கு

பொசுக்கும் நெருப்பைப் போன்றது.

28அவர் மூச்சு, கழுத்தளவு பாயும்

வெள்ளம்போல வருகின்றது;

அழிவு என்னும் சல்லடையில்

மக்களினங்களைச் சலித்து

வழிதவறச் செய்யும் கடிவாளத்தை

மக்களின் வாயில் மாட்ட வருகின்றார்.

29புனித விழாக் கொண்டாடும் இரவில் பாடுவதுபோல் நீங்கள் மகிழ்ச்சிப் பாடல் பாடுவீர்கள்; இஸ்ரயேலின் பாறையான ஆண்டவர் மலைக்குச் செல்லும்போது குழலிசைத்துச் செல்வோரைப்போல் உங்கள் உள்ளம் அக்களிக்கும்.

30ஆண்டவர் தம் மாட்சி மிகு குரலை எங்கும் ஒலிக்கச் செய்வார்; அவர், பொங்கியெழும் சீற்றம் கொண்டு, விழுங்கும் நெருப்பு, பெருமழை, சூறாவளிக்காற்று, கல்மழை இவற்றால் தம் தண்டிக்கும் ஆற்றலை வெளிப்படுத்துவார்.

31ஆண்டவரின் குரலொலி கேட்டு அசீரியர் நடுநடுங்குவர்; ஆண்டவர் தம் கோலால் அவர்களை அடிப்பார்.

32உங்களின் யாழிசைக்கும், தம்புருவின் ஓசைக்கும் ஏற்ப, ஆண்டவர் தம் கோலால் அடிமேல் அடி அடித்து அவர்களை நொறுக்குவார்; அவர்களோடு கைகளைச் சுழற்றி வன்மையாகப் போரிடுவார்.

33ஏனெனில், முன்னரே அவர்களுக்காக நெருப்புக்குழி ஒன்று ஏற்பாடாகியுள்ளது. அது அரசனுக்கென்று தயார் செய்யப்பட்டது. ஆழமும், அகலமுமான நெருப்புக்குழியால் உருவாக்கப்பட்ட அதில் நெருப்பும், விறகுக்கட்டையும் ஏராளமாக நிறைந்துள்ளன. ஆண்டவரின் மூச்சு கந்தக மழைபோல் அவற்றின் மேல் நெருப்பு மூட்டும்.

Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks