back to top
HomeTamilஎசாயா அதிகாரம் - 25 - திருவிவிலியம்

எசாயா அதிகாரம் – 25 – திருவிவிலியம்

எசாயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

ஆண்டவருக்குப் புகழ்ச்சிப் பா

1ஆண்டவரே, நீரே என் கடவுள்: நான்

உம்மை மேன்மைப்படுத்துவேன்;

உன் பெயரைப் போற்றுவேன்;

நீர் வியத்தகு செயல் புரிந்துள்ளீர்;

நெடுநாளாய் நீர் தீட்டியுள்ள திட்டத்தைத்

திண்ணமாகவும் உறுதியாகவும்

நிறைவேற்றியுள்ளீர்.

2ஏனெனில், நீ நகரத்தைக்

கற்குவியலாக்கினீர்;

அரண்சூழ்ந்த பட்டணத்தைப்

பாழடையச் செய்தீர்;

அயல் நாட்டினரின் கோட்டை அது;

இனி நகராய் இராது;

என்றுமே கட்டி எழுப்பப்படாது.

3ஆதலால் வலிமைமிகு மக்களினம்

உம்மைப் பெருமைப்படுத்தும்;

முரடரான வேற்றின நகரத்தினர்

உமக்கு அஞ்சுவர்.

4ஏழைகளுக்கு நீர்

அரணாய் இருக்கின்றீர்;

வறியவனுக்கு அவன் துன்பத்தில்

உறைவிடம் நீரே;

புயற்காற்றில் புகலிடமாகவும்,

கடும் வெப்பத்தில்

குளிர் நிழலாகவும் திகழ்கின்றீர்;

ஏனெனில் முரடர்களின் சீற்றம்

மதிற்சுவரை மோதித் தாக்கும்

பெரும் புயல் போலும்,

5வறண்ட நிலத்தில்

வெப்பம் போலும் இருக்கும்.

கார்மேக நிழல்

வெயிலைத் தணிப்பது போல்

அயல் நாட்டவரின் ஆர்ப்பாட்டத்தை

நீர் அடங்கச் செய்கின்றீர்;

முரடர்களின் ஆரவாரம் அடங்கிவிட்டது.

ஆண்டவர் அளிக்கும் மாபெரும் விருந்து

6படைகளின் ஆண்டவர் இந்த மலையில்

மக்களினங்கள் அனைவருக்கும்

சிறந்ததொரு விருந்தை

ஏற்பாடு செய்வார்;

அதில் சுவைமிக்க பண்டங்களும்,

பழரசப் பானமும்,

கொழுப்பான இறைச்சித் துண்டுகளும்,

வடிகட்டிப் பக்குவப்படுத்திய

திராட்சை இரசமும் பரிமாறப்படும்.

7மக்களினங்கள் அனைவரின்

முகத்தை மூடியுள்ள முக்காட்டை

இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்;

பிற இனத்தார் அனைவரின்

துன்பத் திகிலைத் தூக்கி எறிவார்.

8என்றுமே இல்லாதவாறு

சாவை ஒழித்துவிடுவார்;

என் தலைவராகிய ஆண்டவர்

எல்லா முகங்களிலிருந்தும்

கண்ணீரைத் துடைத்து விடுவார்;

தம்மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை

இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்;

ஏனெனில், ஆண்டவரே

இதை உரைத்தார்.

9அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்;

இவரே நம் கடவுள்;

இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்;

இவர் நம்மை விடுவிப்பார்;

இவரே ஆண்டவர்;

இவருக்காகவே நாம் காத்திருந்தோம்;

இவர் தரும் மீட்பில்

நாம் மகிழ்ந்து அக்களிப்போம்.”

மோவாபுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு

10ஆண்டவரின் ஆற்றல்

இம் மலையில் தங்கியிருக்கும்;

எருக்குழி நீரில்

வைக்கோல் மிதிக்கப்படுவதுபோல்,

மோவாபு அவரால் மிதிக்கப்படுவான்.

11நீந்துபவன் நீந்துவதற்காகத்

தன் கைகளை விரிப்பதுபோல்,

மோவாபு தன் கைகளை விரிப்பான்;

ஆனால் ஆண்டவர் அவன் செருக்கையும்

கைவினைச் செயல்களையும்

விழச் செய்வார்.

12வானளாவ உயர்ந்துநிற்கும்

உன் அரண்களை அவர் விழத் தள்ளி,

தரைமட்டமாக்குவார்;

அவை புழுதியோடு புழுதியாகி

மண்ணோடு மண்ணாகும்.


25:8 1 கொரி 15:54; திவெ 7:17; 21:4.
25:10 எசா 15:1-16:14; எரே 48:1-47; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks