back to top
HomeTamilஎசாயா அதிகாரம் - 21 - திருவிவிலியம்

எசாயா அதிகாரம் – 21 – திருவிவிலியம்

எசாயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

பாபிலோனின் வீழ்ச்சி பற்றிய காட்சி

1கடலையடுத்த பாலைநிலம் குறித்த திருவாக்கு:

தென்னாட்டிலிருந்து

சுழல்காற்றுகள் வீசுவதுபோல்,

அச்சம்தரும் நாடான

பாலைநிலத்திலிருந்து

அழிவு வருகின்றது.

2கொடியதொரு காட்சி

எனக்குக் காண்பிக்கப்பட்டது:

நம்பிக்கைத் துரோகி

துரோகம் செய்கின்றான்;

நாசக்காரன் நாசம் செய்கின்றான்.

‘ஏலாம் நாடே! கிளர்ந்தெழு;

மேதியாவே! முற்றுகையிடு’

அதன் பெருமூச்சுகள் அனைத்துக்கும்
முடிவு வரச் செய்வேன்.

3ஆதலால், என் அடிவயிறு

வேதனையால் துடிக்கிறது.

பெண்ணின் பேறுகால வேதனைக்கு

ஒத்த வேதனைகள்

என்னைக் கவ்விக்கொண்டன;

கலக்கமடைந்து

செவிடன் போல் ஆனேன்;

திகைப்புற்றுக் குருடன் போல் ஆனேன்.

4என் மனம் பேதலிக்கிறது;

திகில் என்னை ஆட்கொண்டது;

நான் நாடிய கருக்கல் வேளை

என்னை நடுக்கமுறச் செய்கிறது.

5பந்தி தயார் செய்கிறார்கள்;

கம்பளத்தை விரிக்கிறார்கள்;

உண்கிறார்கள், குடிக்கிறார்கள்;

தலைவர்களே, எழுங்கள்;

கேடயத்திற்கு எண்ணெய் பூசுங்கள்.

6ஏனெனில் என் தலைவர்

எனக்குக் கூறியது இதுவே:

“நீ போய்க்

காவலன் ஒருவனை நிறுத்திவை;

தான் காண்பதை அவன் அறிவிக்கட்டும்.

7இருவர் இருவராய்க்

குதிரைப்படை வீரர்கள்

அணிவகுத்து வருவதையும்,

கழுதைகள் மேலும் ஒட்டகங்கள் மேலும்

வீரர்கள் ஏறி வருவதையும்

அவன் காணும்போது

மிகவும் கவனமாய்க் கண்காணிக்கட்டும்.”

8அப்போது காவல்காரன் கூக்குரலிட்டான்:

“என் தலைவரே, பகல்முழுவதும்

நான் காவல் மாடத்தின்மேல்

நின்று கொண்டிருக்கின்றேன்;

இரவெல்லாம் என் பணியில்

நிறுத்தப்பட்டுள்ளேன்.

9இதோ, ஒரு சோடிக்

குதிரைகள் பூட்டப்பட்ட தேரில்,

ஏறி ஒருவர் வருகின்றார்.

அவர் பதிலுரையாக,

‘பாபிலோன் வீழ்ந்தது,

வீழ்ச்சியடைந்து விட்டது;

அதன் தெய்வங்களின்

சிலைகள் அனைத்தையும் தரையில் மோதி

உடைக்கப்பட்டாயிற்று’ என்று கூறினார்.”

10போரடிக்கப்பட்டுக் களத்தில்

சிதறிக் கிடக்கும் என் மக்களே,

இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின்

ஆண்டவரிடமிருந்து கேட்டவற்றை

நான் உங்களுக்கு அறிவித்துள்ளேன்.

ஏதோம் பற்றிய செய்தி

11தூமாவைப் பற்றிய திருவாக்கு:

சேயிரிலிருந்து என்னைக் கூப்பிட்டு,

“சாமக்காவலனே,

இரவு எப்போது முடியும்?

சாமக்காவலனே,

இரவு எப்போது முடியும்?”

என்று ஒருவர் கேட்க,

12“காலை வருகிறது, அவ்வாறே இரவும்;

கேட்பதென்றால் கேளுங்கள்,

மீண்டும் திரும்பி வாருங்கள்” என்று

சாமக்காவலன் கூறினான்.

அரேபியாவைக் குறித்த செய்தி

13அரேபியாவைக் குறித்த திருவாக்கு:

தெதானின் வணிகப் பயணிகளே!

அரேபியாவின் பாலைநிலச் சோலைகளில்

நீங்கள் கூடாரம் அடியுங்கள்;

14தேமா நாட்டில் குடியிருப்போரே!

தாகமுற்றோர்க்குத்

தண்ணீர் கொண்டு வாருங்கள்;

அகதிகளை

உணவுடன் சென்று சந்தியுங்கள்.

15ஏனெனில், வாள்களுக்குத் தப்பி

அவர்கள் ஓடுகின்றார்கள்;

உருவிய வாளுக்கும்,

நாணேற்றிய வில்லுக்கும்

போரின் கடுமைக்கும் அஞ்சி

ஓடுகின்றார்கள்.

16என் தலைவர் எனக்குக் கூறியது: கூலியாள் கணக்கிடுவதற்கு ஒத்த ஓராண்டிற்குள், கேதாரின் மேன்மை மங்கிப் போகும்.

17கேதார் மக்களுள் வலிமை வாய்ந்த வில்வீரர்களுள் எஞ்சினோர் மிகச் சிலராகவே இருப்பர். ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே இதைக் கூறியுள்ளார்.

Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks