back to top
HomeTamilஎசாயா அதிகாரம் - 21 - திருவிவிலியம்

எசாயா அதிகாரம் – 21 – திருவிவிலியம்

எசாயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

பாபிலோனின் வீழ்ச்சி பற்றிய காட்சி

1கடலையடுத்த பாலைநிலம் குறித்த திருவாக்கு:

தென்னாட்டிலிருந்து

சுழல்காற்றுகள் வீசுவதுபோல்,

அச்சம்தரும் நாடான

பாலைநிலத்திலிருந்து

அழிவு வருகின்றது.

2கொடியதொரு காட்சி

எனக்குக் காண்பிக்கப்பட்டது:

நம்பிக்கைத் துரோகி

துரோகம் செய்கின்றான்;

நாசக்காரன் நாசம் செய்கின்றான்.

‘ஏலாம் நாடே! கிளர்ந்தெழு;

மேதியாவே! முற்றுகையிடு’

அதன் பெருமூச்சுகள் அனைத்துக்கும்
முடிவு வரச் செய்வேன்.

3ஆதலால், என் அடிவயிறு

வேதனையால் துடிக்கிறது.

பெண்ணின் பேறுகால வேதனைக்கு

ஒத்த வேதனைகள்

என்னைக் கவ்விக்கொண்டன;

கலக்கமடைந்து

செவிடன் போல் ஆனேன்;

திகைப்புற்றுக் குருடன் போல் ஆனேன்.

4என் மனம் பேதலிக்கிறது;

திகில் என்னை ஆட்கொண்டது;

நான் நாடிய கருக்கல் வேளை

என்னை நடுக்கமுறச் செய்கிறது.

5பந்தி தயார் செய்கிறார்கள்;

கம்பளத்தை விரிக்கிறார்கள்;

உண்கிறார்கள், குடிக்கிறார்கள்;

தலைவர்களே, எழுங்கள்;

கேடயத்திற்கு எண்ணெய் பூசுங்கள்.

6ஏனெனில் என் தலைவர்

எனக்குக் கூறியது இதுவே:

“நீ போய்க்

காவலன் ஒருவனை நிறுத்திவை;

தான் காண்பதை அவன் அறிவிக்கட்டும்.

7இருவர் இருவராய்க்

குதிரைப்படை வீரர்கள்

அணிவகுத்து வருவதையும்,

கழுதைகள் மேலும் ஒட்டகங்கள் மேலும்

வீரர்கள் ஏறி வருவதையும்

அவன் காணும்போது

மிகவும் கவனமாய்க் கண்காணிக்கட்டும்.”

8அப்போது காவல்காரன் கூக்குரலிட்டான்:

“என் தலைவரே, பகல்முழுவதும்

நான் காவல் மாடத்தின்மேல்

நின்று கொண்டிருக்கின்றேன்;

இரவெல்லாம் என் பணியில்

நிறுத்தப்பட்டுள்ளேன்.

9இதோ, ஒரு சோடிக்

குதிரைகள் பூட்டப்பட்ட தேரில்,

ஏறி ஒருவர் வருகின்றார்.

அவர் பதிலுரையாக,

‘பாபிலோன் வீழ்ந்தது,

வீழ்ச்சியடைந்து விட்டது;

அதன் தெய்வங்களின்

சிலைகள் அனைத்தையும் தரையில் மோதி

உடைக்கப்பட்டாயிற்று’ என்று கூறினார்.”

10போரடிக்கப்பட்டுக் களத்தில்

சிதறிக் கிடக்கும் என் மக்களே,

இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின்

ஆண்டவரிடமிருந்து கேட்டவற்றை

நான் உங்களுக்கு அறிவித்துள்ளேன்.

ஏதோம் பற்றிய செய்தி

11தூமாவைப் பற்றிய திருவாக்கு:

சேயிரிலிருந்து என்னைக் கூப்பிட்டு,

“சாமக்காவலனே,

இரவு எப்போது முடியும்?

சாமக்காவலனே,

இரவு எப்போது முடியும்?”

என்று ஒருவர் கேட்க,

12“காலை வருகிறது, அவ்வாறே இரவும்;

கேட்பதென்றால் கேளுங்கள்,

மீண்டும் திரும்பி வாருங்கள்” என்று

சாமக்காவலன் கூறினான்.

அரேபியாவைக் குறித்த செய்தி

13அரேபியாவைக் குறித்த திருவாக்கு:

தெதானின் வணிகப் பயணிகளே!

அரேபியாவின் பாலைநிலச் சோலைகளில்

நீங்கள் கூடாரம் அடியுங்கள்;

14தேமா நாட்டில் குடியிருப்போரே!

தாகமுற்றோர்க்குத்

தண்ணீர் கொண்டு வாருங்கள்;

அகதிகளை

உணவுடன் சென்று சந்தியுங்கள்.

15ஏனெனில், வாள்களுக்குத் தப்பி

அவர்கள் ஓடுகின்றார்கள்;

உருவிய வாளுக்கும்,

நாணேற்றிய வில்லுக்கும்

போரின் கடுமைக்கும் அஞ்சி

ஓடுகின்றார்கள்.

16என் தலைவர் எனக்குக் கூறியது: கூலியாள் கணக்கிடுவதற்கு ஒத்த ஓராண்டிற்குள், கேதாரின் மேன்மை மங்கிப் போகும்.

17கேதார் மக்களுள் வலிமை வாய்ந்த வில்வீரர்களுள் எஞ்சினோர் மிகச் சிலராகவே இருப்பர். ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே இதைக் கூறியுள்ளார்.

Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks