திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
இறைவனின் தீர்ப்பும் திருவருளும்
(பாடகர் தலைவர்க்கு: அகிமெலக்கின் வீட்டுக்குத் தாவீது போனாரென்று ஏதோமியன் தோயேகு சவுலுக்கு அறிவித்த போது தாவீது பாடிய அறப்பாடல்)
1வலியோனே! தீமை செய்வதில்
ஏன் பெருமை கொள்கின்றாய்?
இறைவனின் பேரன்பு
எந்நாளும் உள்ளது.
2கேடுவிளைவிக்க நீ திட்டமிடுகின்றாய்;
உனது நா தீட்டிய கத்தி போன்றது;
வஞ்சகத்தில் தேர்ந்தோன் நீ அன்றோ!
3நன்மை செய்வதைவிட
தீமை செய்வதையே விரும்புகின்றாய்;
உண்மை பேசுவதைவிட
பொய் பேசுவதையே
விரும்புகின்றாய். (சேலா)
4நரம்பில்லா நாவுடையோனே!
நீ விரும்பும் சொற்கள் அனைத்தும்
கேடு விளைவிப்பனவே!
5ஆகவே! கடவுள் உன்னை
என்றும் மீளாதபடி நொறுக்கிவிடுவார்;
உன்னைத் தூக்கி எறிவார்;
கூடாரத்தினின்று
உன்னைப் பிடுங்கி எறிவார்;
உயிர் வாழ்வோரின் உலகினின்று
உன்னை வேரோடு
களைந்து விடுவார். (சேலா)
6நேர்மையாளர் அதன்
கடுமையைக் கண்டு திகிலடைவர்;
மேலும், உன்னை
எள்ளி நகையாடிக் கூறுவர்;
7‛இதோ! பாருங்கள்; இவன் தான்
கடவுளைத் தன் புகலிடமாய்க்
கொள்ளாதவன்;
தன் செல்வப் பெருக்கில்
நம்பிக்கை வைத்தவன்;
அழிவுச் செயலையே
புகலிடமாய்க் கொண்டவன்!’
8நானோ, கடவுளின் இல்லத்தில்
பச்சை ஒலிவமரக்கன்றுபோல்
இருக்கின்றேன்;
கடவுளின் பேரன்பில்
எப்போதும் நிலையாக நம்பிக்கை
வைத்திருக்கின்றேன்.
9கடவுளே! நீர் இவ்வாறு
எனக்குச் செய்துள்ளதால்,
உமக்கு என்றென்றும் நன்றி கூறுவேன்;
உம் அன்பரின் முன்னிலையில்,
உம் பெயர்மீது நம்பிக்கை கொள்வேன்;
இதுவே நன்று.