திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
பொல்லாரின் தண்டிப்புக்காக வேண்டல்
(பாடகர் தலைவர்க்கு: ‘அழிக்காதே’ என்ற மெட்டு; தாவீதின் கழுவாய்ப்பாடல்)
1ஆட்சியாளரே! நீவிர் வழங்கும் தீர்ப்பு
உண்மையில் நீதியானதா?
மாந்தர்க்கு நேர்மையுடன்
தீர்ப்பு வழங்குகின்றீரா?
2இல்லை; அநீதியானவற்றைச் செய்வதற்கே
நீங்கள் திட்டமிடுகின்றீர்கள்;
நீங்கள் நாட்டில் நடக்கும் அநீதிக்கு
உடந்தையாய் இருக்கின்றீர்கள்.
3பொல்லார் கருவிலிருந்தே
நெறிதவறிச் செல்கின்றனர்;
பிறப்பிலிருந்தே பொய் பேசித் திரிகின்றனர்.
4அவர்களது நச்சுத்தன்மை
நாகத்தின் நஞ்சு போன்றது;
செவிட்டு விரியன் தன் காதை
அடைத்துக்கொள்வதுபோல, அவர்களும் தங்களைச்
செவிடாக்கிக் கொள்கின்றனர்.
5பாம்பாட்டியின் மகுடியோசை
அவ்விரியனின் காதில் விழாது;
அவன் திறமையுடன் ஊதினாலும்
அதற்குக் கேளாது.
6கடவுளே, அவர்கள் வாயின் பற்களை
நொறுக்கிவிடும்;
ஆண்டவரே, அந்த இளஞ்சிங்கங்களின்
கடைவாய்ப் பற்களை உடைத்துவிடும்.
7காட்டாற்று நீர்போல
அவர்கள் மறைந்தொழியட்டும்;
அவர்கள் தம் வில்லை நாணேற்றியவுடன்
அம்புகள் முறிந்து போகட்டும்!
8ஊர்ந்து ஊர்ந்து தேய்ந்து போகும்
நத்தைபோல் ஆகட்டும்;
பிறந்தும் கதிரொளி காணாத
பெண்வயிற்றுப் பிண்டம்போல் ஆகட்டும்.
9முள் நெருப்பினால்
உங்கள் பானை சூடேறுமுன்னே,
பச்சையானதையும்
வெந்துகொண்டிருப்பதையும்
சுழற்காற்றினால் அவர்
அடித்துக்கொண்டு போவார்.
10தீயோர் தண்டிக்கப்படுவதை
நேர்மையாளர் காணும்போது மகிழ்வர்;
அவர்கள் தம் பாதங்களைப்
பொல்லாரின் இரத்தத்தில் கழுவுவர்.
11அப்போது மானிடர்,
‘உண்மையிலேயே நேர்மையாளருக்குக்
கைம்மாறு உண்டு;
மெய்யாகவே பூவுலகில்
நீதியுடன் ஆளும் கடவுள் ஒருவர்
இருக்கின்றார்’ என்று சொல்வர்.