திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
பாதுகாப்புக்காக மன்றாடல்
(பாடகர் தலைவர்க்கு: ‘அழிக்காதே’ என்ற மெட்டு; தாவீதின் வீட்டருகே காத்திருந்து அவரைக் கொல்வதற்கென்று சவுல் ஆள்களை அனுப்பியபோது தாவீது பாடிய கழுவாய்ப் பாடல்)
1என் கடவுளே! என்
எதிரிகளினின்று
என்னை விடுவித்தருளும்;
என்னை எதிர்த்து எழுவோரிடமிருந்து
எனக்குப் பாதுகாப்பளித்தருளும்.
2தீமை செய்வோரிடமிருந்து
எனக்கு விடுதலை அளித்தருளும்;
கொலைவெறியரிடமிருந்து
என்னைக் காத்தருளும்.
3ஏனெனில், அவர்கள் என்னைக்
கொல்வதற்காகப் பதுங்கியுள்ளனர்;
கொடியவர் என்னைத் தாக்கத்
திட்டமிட்டுள்ளனர்;
நானோ, ஆண்டவரே!
குற்றம் ஏதும் இழைக்கவில்லை;
பாவம் ஏதும் செய்யவில்லை;
4என்னிடம் குற்றமில்லாதிருந்தும்,
அவர்கள் ஓடிவந்து
என்னைத் தாக்க முனைகின்றனர்;
என்னை எதிர்கொள்ளுமாறு
எழுந்தருளும்;
என்னைக் கண்ணோக்கும்,
5படைகளின் கடவுளாகிய ஆண்டவரே!
நீர் இஸ்ரயேலின் கடவுள்!
பிற இனத்தார் அனைவரையும்
தண்டிக்க எழுந்துவாரும்;
தீங்கிழைக்கும் அந்தத் துரோகிகளுள்
எவருக்கும் இரக்கம் காட்டாதேயும். (சேலா)
6அவர்கள் மாலைவரை காத்திருந்து,
அதன்பின் நாய்களைப் போலக்
குரைத்து கொண்டு
நகரினுள் சுற்றித் திரிகின்றனர்.
7அவர்கள் வாய் பேசுவதைக் கவனியும்;
அவர்களின் நாவின் சொற்கள்
வாள் போன்றவை;
‛நாங்கள் பேசுவதை கேட்கிறவர்
யார்?’ என்கின்றார்கள்.
8ஆனால், ஆண்டவரே,
நீர் அவர்களைப் பார்த்து
எள்ளி நகைக்கின்றீர்;
பிற இனத்தார் எல்லாரையும் பார்த்து
நீர் ஏளனம் செய்கின்றீர்;
9நீரே என் ஆற்றல்! உமது உதவியை
எதிர்பார்க்கின்றேன்;
ஏனெனில், கடவுளே! நீரே என் அரண்.
10என் கடவுள் தமது பேரன்பால்
என்னை எதிர்கொள்ள வருவார்;
கடவுள் என் எதிரிகளின் வீழ்ச்சியை
நான் கண்ணாரக் காணும்படி செய்வார்.
11அவர்களை ஒரேயடியாய்க்
கொன்று விடாதேயும்;
இல்லையேல், உம் வல்லமையை
என் மக்கள் மறந்துவிடுவர்;
என் தலைவரே! எங்கள் கேடயமே!
அவர்களை உமது வலிமையால்
நிலைகுலையச் செய்யும்.
12அவர்களின் வாய் பேசுவதும்
நா உரைப்பதும் பாவமே;
அவர்கள் தற்பெருமை
அவர்களைச் சிக்கவைப்பதாக!
அவர்கள் சபிக்கின்றனர்;
அடுக்கடுக்காய்ப் பொய் பேசுகின்றனர்.
13ஆகவே, வெகுண்டெழுந்து
அவர்களை அழித்துவிடும்;
இனி இராதபடி அவர்களை ஒழித்துவிடும்;
அப்பொழுது, கடவுள்
யாக்கோபின் மரபினரை
ஆள்கின்றார் எனவும்
அவரது அரசு உலகின் எல்லைவரைக்கும்
உள்ளது எனவும் அவர்கள்
உணர்ந்து கொள்வார்கள். (சேலா)
14அவர்கள் மாலைவரை காத்திருந்து,
அதன்பின், நாய்களைப்போல
குரைத்துக் கொண்டு
நகரினுள் சுற்றித்திரிகின்றார்கள்.
15அவர்கள் இரைதேடி அலைகின்றனர்;
வயிறு நிறையாவிடில்,
முறுமுறுக்கின்றனர்.
16நானோ உமது ஆற்றலைப்
புகழ்ந்து பாடுவேன்;
காலையில் உமது பேரன்பைப் பற்றி
ஆர்ப்பரித்துப் பாடுவேன்;
ஏனெனில், நெருக்கடியான வேளையில்
நீர் எனக்கு அரணும்
அடைக்கலமுமாய் இருந்தீர்.
17என் ஆற்றல் நீரே!
உம்மைப் போற்றிப் பாடுவேன்;
ஏனெனில், கடவுள் எனக்கு அரண்;
கடவுளே எனக்குப் பேரன்பு!