திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
பற்றுறுதியும் நம்பிக்கையும்
(பாடகர் தலைவர்க்கு: ‘தொலையில் வாழும் மௌன மாடப்புறா’ என்ற மெட்டு; பெலிஸ்தியர் தாவீதைக் காத்து என்னுமிடத்தில் பிடித்த வேளை அவர் பாடிய கழுவாய்ப்பாடல்)
1கடவுளே, எனக்கு இரங்கியருளும்;
ஏனெனில், மனிதர் என்னை
நசுக்குகின்றனர்;
அவர்கள் என்னுடன் நாள்தோறும்
சண்டையிட்டுத் துன்புறுத்துகின்றனர்.
2என் பகைவர் நாள்தோறும்
கொடுமைப்படுத்துகின்றனர்;
மிகப் பலர் என்னை ஆணவத்துடன்
எதிர்த்துப் போரிடுவோர்.
3அச்சம் என்னை ஆட்கொள்ளும் நாளில்,
உம்மையே நான் நம்பியிருப்பேன்.
4கடவுளின் வாக்கை நான் புகழ்கின்றேன்;
கடவுளையே நம்பியிருக்கின்றேன்;
எதற்கும் அஞ்சேன்; அற்ப மனிதர்
எனக்கென்ன செய்ய முடியும்?
5என் எதிரிகள் எந்நேரமும்
என் சொற்களைப் புரட்டுகின்றனர்;
அவர்கள் திட்டங்கள் எல்லாம்
என்னைத் துன்புறுத்தவே.
6அவர்கள் ஒன்றுகூடிப்
பதுங்கி இருக்கின்றனர்;
என் உயிரைப் போக்குவதற்காக
என் காலடிச் சுவடுகளைக்
கவனித்துக்கொண்டே இருக்கின்றனர்.
7அவர்கள் தீமைகளைச் செய்துவிட்டுத்
தப்பமுடியுமோ?
கடவுளே, சினம் கொண்டெழுந்து
இந்த மக்களினங்களைக் கீழே வீழ்த்தும்.
8என் துன்பங்களின் எண்ணிக்கையை
நீர் அறிவீர்;
உமது தோற்பையில் என் கண்ணீரைச்
சேர்த்து வைத்துள்ளீர்;
இவையெல்லாம் உம் குறிப்பேட்டில்
உள்ளன அல்லவா?
9நான் உம்மை நோக்கி மன்றாடும் நாளில்
என் எதிரிகள் புறமுதுகிட்டு ஓடுவர்;
அப்போது, கடவுள்
என் பக்கம் இருக்கின்றார் என்பதை
நான் உறுதியாய் அறிவேன்.
10கடவுளின் வாக்கை
நான் புகழ்கின்றேன்;
ஆண்டவனின் வாக்கை
நான் புகழ்கின்றேன்.
11கடவுளையே நம்பியிருக்கின்றேன்;
எதற்கும் அஞ்சேன்;
மானிடர் எனக்கெதிராய்
என்ன செய்ய முடியும்?
12கடவுளே, நான் உமக்குச் செய்த
பொருத்தனைகளை மறக்கவில்லை;
உமக்கு நன்றிப்பலி செலுத்துவேன்.
13ஏனெனில், சாவினின்று
என் உயிரை நீர் மீட்டருளினீர்;
வாழ்வோரின் ஒளியில்,
கடவுளின் முன்னிலையில்
நான் நடக்கும் பொருட்டு
என் அடிகள் சறுக்காதபடி
காத்தீர் அன்றோ!