யோபு அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
எலிகூவின் முதல் சொற்பொழிவு
(32:1-37:24)
1யோபு தம்மை நேர்மையாளராகக் கருதியதால் இந்த மூன்று மனிதர்களும் அவருடன் சொல்லாடுவதை நிறுத்திவிட்டார்கள்.
2அப்பொழுது பூசியனும், இராமின் வீட்டைச் சார்ந்த பாரக்கேலின் புதல்வனுமான எலிகூ சீற்றம் அடைந்தான்.
3யோபு கடவுளைவிடத் தம்மை நேர்மையாளராய்க் கருதியதால் அவர்மீது சினம் கொண்டான். மூன்று நண்பர்கள்மீதும் அவன் கோபப்பட்டான். ஏனெனில் யோபின் மீது அவர்கள் குற்றம் சாட்டினார்களேயன்றி, அதற்கான ஆதாரத்தை எடுத்துக் கூறவில்லை.
4எலிகூ யோபிடம் பேச இதுவரை காத்திருந்தான். ஏனெனில், அவனை விட அவர்கள் வயதில் முதிர்ந்தவர்கள்.
5அந்த மூவரும் தகுந்த மறுமொழி தரவில்லை எனக் கண்ட எலிகூ இன்னும் ஆத்திரம் அடைந்தான்.
6ஆகவே பூசியனும் பாரக்கேலின் புதல்வனுமான
எலிகூ பேசத் தொடங்கினான்;
நான் வயதில் சிறியவன்;
நீங்களோ பெரியவர். ஆகவே,
என் கருத்தை உங்களிடம் உரைக்கத்
தயங்கினேன்; அஞ்சினேன்.
7நான் நினைத்தேன்; ‘முதுமை பேசட்டும்;
வயதானோர் ஞானத்தை உணர்த்தட்டும்.’
8ஆனால், உண்மையில்
எல்லாம் வல்லவரின் மூச்சே,
மனிதரில் இருக்கும் அந்த ஆவியே
உய்த்துணர்வை அளிக்கின்றது.
9வயதானோர் எல்லாம் ஞானிகள் இல்லை;
முதியோர் நீதியை அறிந்தவரும் இல்லை.
10ஆகையால் நான் சொல்கின்றேன்;
எனக்குச் செவி கொடுத்தருள்க!
நானும் என் கருத்தைச் சொல்கின்றேன்.
11இதோ! உம் சொற்களுக்காகக்
காத்திருந்தேன்,
நீங்கள் ஆய்ந்து கூறிய வார்த்தைகளை,
அறிவார்ந்த கூற்றை நான் கேட்டேன்.
12உங்களைக் கவனித்துக் கேட்டேன்;
உங்களுள் எவரும் யோபின் கூற்று
தவறென எண்பிக்கவில்லை.
அவர் சொற்களுக்கு தக்க
பதில் அளிக்கவுமில்லை.
13எச்சரிக்கை! ‘நாங்கள் ஞானத்தைக்
கண்டு கொண்டோம்;
இறைவனே அவர்மீது வெற்றி கொள்ளட்டும்;
மனிதரால் முடியாது’ என்று சொல்லாதீர்கள்!
14என்னை நோக்கி யோபு
தம்மொழிகளைக் கூறவில்லை;
உங்கள் சொற்களில் அவருக்கு நான் பதிலளிக்கமாட்டேன்.
15அவர்கள் மலைத்துப் போயினர்;
மீண்டும் மறுமொழி உரையார்;
அவர்கள் ஒரு வார்த்தையும்
சொல்வதற்கில்லை.
16அவர்கள் பேசவில்லை;
நின்று கொண்டிருந்தாலும்
பதில் சொல்லவில்லை;
நான் இன்னும் காத்திருக்க வேண்டுமா?
17நானும் எனது பதிலைக் கூறுவேன்;
நானும் எனது கருத்தை நவில்வேன்.
18ஏனெனில், சொல்லவேண்டியவை
என்னிடம் நிறையவுள்ளன;
என் உள்ளத்தில் ஆவி என்னை உந்துகின்றது.
19இதோ! என் நெஞ்சம்
அடைபட்ட திராட்சை இரசம் போல் உள்ளது;
வெடிக்கும் புது இரசத் துருத்தி போல் உள்ளது.
20நான் பேசுவேன்; என் நெஞ்சை
ஆற்றிக் கொள்வேன்; வாய்திறந்து
நான் பதில் அளிக்க வேண்டும்.
21நான் யாரிடமும்
ஒருதலைச் சார்பாய் இருக்கமாட்டேன்;
நான் யாரையும் பொய்யாகப் புகழ மாட்டேன்.
22ஏனெனில், பசப்பிப் புகழ எனக்குத் தெரியாது;
இல்லையேல், படைத்தவரே
விரைவில் என்னை அழித்திடுவார்.