யோபு அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
யோபின் முன்னைய இன்பநிலை
1யோபு இன்னும் தொடர்ந்து
பேசிய உரை:
2காண்பேனா முன்னைய திங்கள்களை;
கடவுள் என்னைக் கண்காணித்த நாள்களை!
3அப்போது அவர் விளக்கு
என் தலைமீது ஒளிவீசிற்று;
அவரது ஒளியால் இருளில் நான் நடந்தேன்.
4அப்போது என் இளமையின் நாள்களில்
நான் இருந்தேன்; கடவுளின் கருணை
என் குடிசை மீது இருந்தது.
5அன்று வல்லவர் என்னோடு இருந்தார்;
என் மக்கள் என்னைச் சூழ்ந்திருந்தனர்.
6அப்போது என் காலடிகள் நெய்யில் குளித்தன;
பாறையிலிருந்து எனக்கு எண்ணெய் ஆறாய்ப் பாய்ந்தது.
7நகர வாயிலுக்கு நான் செல்கையிலும்,
பொது மன்றத்தில்
என் இருக்கையில் அமர்கையிலும்,
8என்னைக் கண்டதும்
இளைஞர் ஒதுங்கிக்கொள்வர்;
முதிர்ந்த வயதினர் எழுந்து நிற்பர்.
9உயர்குடி மக்கள் தம் பேச்சை நிறுத்துவர்;
கைகட்டி, வாய்பொத்தி வாளாவிருப்பர்.
10தலைவர்தம் குரல் அடங்கிப்போம்;
அவர் நா அண்ணத்தோடு ஒட்டிக்கொள்ளும்.
11என்னைக் கேட்ட செவி,
என்னை வாழ்த்தியது;
என்னைப் பார்த்த கண்
எனக்குச் சான்று பகர்ந்தது.
12ஏனெனில், கதறிய ஏழைகளை
நான் காப்பாற்றினேன்;
தந்தை இல்லார்க்கு உதவினேன்.
13அழிய இருந்தோர் எனக்கு ஆசி வழங்கினர்;
கைம்பெண்டிர்தம் உள்ளத்தைக்
களிப்பால் பாடச் செய்தேன்.
14அறத்தை அணிந்தேன்;
அது என் ஆடையாயிற்று.
நீதி எனக்கு மேலாடையும் பாகையும் ஆயிற்று.
15பார்வையற்றோர்க்குக் கண் ஆனேன்;
காலூனமுற்றோர்க்குக் கால் ஆனேன்.
16ஏழைகளுக்கு நான் தந்தையாக இருந்தேன்;
அறிமுகமற்றோரின் வழக்குகளுக்காக
வாதிட்டேன்.
17கொடியவரின் பற்களை உடைத்தேன்;
அவரின் பற்களுக்கு இரையானவரை
விடுவித்தேன்.
18நான் எண்ணினேன்;
‘மணல் மணியைப்போல்
நிறைந்த நாள் உடையவனாய்
என் இல்லத்தில் சாவேன்.
19என் வேர் நீர்வரை ஓடிப் பரவும்;
இரவெல்லாம் என் கிளையில் பனி இறங்கும்.
20என் புகழ் என்றும் ஓங்கும்;
என் வில் வளைதிறன் கொண்டது.’
21எனக்குச் செவிகொடுக்க
மக்கள் காத்திருந்தனர்;
என் அறிவுரைக்காக அமைதி காத்தனர்.
22என் சொல்லுக்கு மறுசொல்
அவர்கள் கூறவில்லை;
என் மொழிகள் அவர்களில் தங்கின.
23மழைக்கென அவர்கள்
எனக்காய்க் காத்திருந்தனர்;
மாரிக்கெனத் தங்கள் வாயைத் திறந்தனர்.
24நம்பிக்கை இழந்தோரை
என் புன்முறவல் தேற்றியது;
என் முகப்பொலிவு உரமூட்டியது.
25நானே அவர்களுக்கு வழியைக் காட்டினேன்;
தலைவனாய்த் திகழ்ந்தேன்;
வீரர் நடுவே வேந்தனைப்போல் வாழ்ந்தேன்;
அழுகின்றவர்க்கு
ஆறுதல் அளிப்பவன் போல் இருந்தேன்.