யோபு அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
‘பில்தாத்தின் சொற்கள் வீணே’
1அதற்கு யோபு கூறிய பதில்:
2என்போன்ற வலிமையற்றவர்க்கு
எத்துணைப் துணைபுரிந்தீர்!
ஆற்றலற்ற தோளுக்கு
எவ்வளவு துணைநின்றீர்!
3என் போன்ற அறிவற்றவர்க்கு
எவ்வளவு அறிவுரை கூறினீர்!
நன்னெறிகளை நிறையக் காட்டீனீர்!
4எவர் துணைகொண்டு
இயம்பினீர் இம்மொழிகளை?
எவர்தம் ஏவுதல்
உம்மிடமிருந்து வெளிப்பட்டது?
5கீழ்உலகின் ஆவிகள் நடுங்குகின்றன;
நீர்த் திரள்களும் அவற்றில் வாழ்வனவும்
அஞ்சுகின்றன.
6பாதாளம் கடவுள்முன் திறந்து கிடக்கிறது;
படுகுழி அவர்முன் மூடப்படவில்லை.
7வெற்றிடத்தில் வடபுறத்தை அவர் விரித்தார்;
காற்றிடையே உலகைத் தொங்கவிட்டார்.
8நீரினை மேகத்துள் பொதித்துள்ளார்;
அதன் நிறைவால் முகிலும் கிழிவதில்லை.
9தம் அரியணையின் முகத்தை மூடுகின்றார்;
முகிலை அதன்மேல் பரப்புகின்றார்.
10நீர்ப்பரப்பின் மீது வட்டம் வரைந்து,
இருளுக்கும் ஒளிக்குமிடையில்
எல்லை அமைத்தார்.
11விண்ணின் தூண்கள் அதிர்கின்றன;
அவர் அதட்டலில் அதிர்ச்சியடைகின்றன.
12ஆழியைத் தம் ஆற்றலால் அடக்கினார்;
இராகாபை அழித்தார் அறிவுக்கூர்மையால்.
13தம் மூச்சால் வான்வெளியை ஒளிர்வித்தார்;
தம் கையால் விரைந்தோடும் பாம்பை
ஊடுருவக் குத்தினார்.
14ஓ! இவையாவும்
அவர்தம் செயல்களின் விளிம்புகளே!
எத்துணை மென்குரல் அவற்றில் கேட்கின்றது.
அவர்தம் வல்லமையின் இடிமுழக்கத்தை அறிய
யாரால் இயலும்?