back to top
HomeTamilயோபு அதிகாரம் - 30 - திருவிவிலியம்

யோபு அதிகாரம் – 30 – திருவிவிலியம்

யோபு அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

யோபின் தற்போதைய துன்பநிலை

1ஆனால், இன்று என்னை,

என்னைவிட இளையோர்

ஏளனம் செய்கின்றனர்;

அவர்களின் தந்தையரை என் மந்தையின்

நாய்களோடு இருத்தவும் உடன் பட்டிரேன்.

2எனக்கு அவர்களின் கைவன்மையால்

என்ன பயன்? அவர்கள்தாம்

ஆற்றல் இழந்து போயினரே?

3அவர்கள் பட்டினியாலும் பசியாலும்

மெலிந்தனர்; வறண்டு, இருண்டு

அழிந்த பாலைக்கு ஓடினர்.

4அவர்கள் உப்புக்கீரையைப்

புதரிடையே பறித்தார்கள்;

காட்டுப் பூண்டின் வேரே அவர்களின் உணவு.

5மக்கள் அவர்களைத்

தம்மிடமிருந்து விரட்டினர்;

கள்வரைப் பிடிக்கத் கத்துவதுபோல்

அவர்களுக்குச் செய்தனர்.

6ஓடைகளின் உடைப்புகளிலும்

நிலவெடிப்புகளிலும் பாறைப்பிளவுகளிலும்

அவர்கள் வாழ்ந்தனர்.

7புதர்களின் நடுவில் அவர்கள் கத்துவர்;

முட்செடியின் அடியில் முடங்கிக் கிடப்பர்.

8மடையனின் மக்கள் பெயரில்லாப் பிள்ளைகள்;

அவர்கள் நாட்டிலிருந்து விரட்டப்பட்டனர்.

9இப்பொழுதோ, அவர்களுக்கு நான்

வசைப்பாட்டு ஆனேன்;

அவர்களுக்கு நான் பழமொழியானேன்.

10என்னை அவர்கள் அருவருக்கின்றனர்;

என்னைவிட்டு விலகிப் போகின்றனர்;

என்முன் காறித் துப்பவும்

அவர்கள் தயங்கவில்லை.

11என் வில்லின் நாணைக் கடவுள் தளர்த்தி,

என்னைத் தாழ்த்தியதால்,

என்முன் அவர்கள் கடிவாளம் அற்றவராயினர்.

12என் வலப்பக்கம் கும்பல் கூடுகின்றது;

என்னை நெட்டித் தள்ளுகின்றது;

அழிவுக்கான வழிகளை

எனக்கெதிராய் வகுத்தது.

13எனக்கு அவர்கள் குழி தோண்டுகின்றனர்;

என் அழிவை விரைவுபடுத்துகின்றனர்;

அவர்களைத் தடுப்பார் யாருமில்லை.

14அகன்ற உடைப்பில் நுழைவது போலப்

பாய்கின்றனர்; இடிபாடுகளுக்கு இடையில்

அலைபோல் வருகின்றனர்.

15பெருந்திகில் மீண்டும் என்னைப் பிடித்தது;

என் பெருமை காற்றோடு போயிற்று;

முகிலென மறைந்தது என் சொத்து.

16இப்பொழுதோ, என் உயிர்

போய்க்கொண்டே இருக்கின்றது;

இன்னலின் நாள்கள் என்னை இறுக்குகின்றன.

17இரவு என் எலும்புகளை உருக்குகின்றது;

என்னை வாட்டும் வேதனை ஓய்வதில்லை.

18நோயின் கொடுமை என்னை உருக்குலைத்தது;

கழுத்துப்பட்டை போல்

என்னை ஒட்டிக்கொண்டது.

19கடவுள் சேற்றில் என்னை அமிழ்த்தி விட்டார்;

புழுதியும் சாம்பலும்போல் ஆனேன்.

20நான் உம்மை நோக்கி மன்றாடினேன்.

ஆனால், நீர் எனக்குப் பதில் அளிக்கவில்லை,

நான் உம்முன் நின்றேன்;

நீர் என்னைக் கண்ணோக்கவில்லை.

21கொடுமையுள்ளவராய் என்மட்டில் மாறினீர்;

உம் கை வல்லமையால்

என்னைத் துன்புறுத்துகின்றீர்;

22என்னைத் தூக்கிக் காற்றில் பறக்கவிட்டீர்;

புயலின் சீற்றத்தால் என்னை அலைக்கழித்தீர்.

23ஏனெனில், சாவுக்கும்,

வாழ்வோர் அனைவரும் கூடுமிடத்திற்கும்

என்னைக் கொணர்வீர் என அறிவேன்.

24இருப்பினும், அழிவின் நடுவில்

ஒருவர் உதவிக்கு அலறும்பொழுது,

அவல நிலையில் அவர் இருக்கும்பொழுது,

எவர் அவருக்கு எதிராகக்

கையை உயர்த்துவார்?

25அவதிபட்டவருக்காக நான் அழவில்லையா?

ஏழைக்காக என் உள்ளம் இளகவில்லையா?

26நன்மையை எதிர்பார்த்தேன்; தீமை வந்தது.

ஒளிக்குக் காத்திருந்தேன்; இருளே வந்தது.

27என் குலை நடுங்குகிறது, அடங்கவில்லை;

இன்னலின் நாள்கள்

எனை எதிர்கொண்டு வருகின்றன.

28கதிரோன் இன்றியும்

நான் கருகித் திரிகிறேன்; எழுகிறேன்;

மன்றத்தில் அழுகிறேன் உதவிக்கு.

29குள்ள நரிக்கு உடன்பிறப்பானேன்;

நெருப்புக் கோழிக்குத் தோழனும் ஆனேன்.

30என் தோல் கருகி உரிகின்றது;

என் எலும்புகள் வெப்பத்தால் தீய்கின்றன.

31என் யாழின் ஓசை புலம்பலாயிற்று;

என் குழலின் ஒலி அழுகையாயிற்று.

Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks