back to top
HomeTamilயோபு அதிகாரம் - 28 - திருவிவிலியம்

யோபு அதிகாரம் – 28 – திருவிவிலியம்

யோபு அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

‘ஞானத்தின் மேன்மை’

1வெள்ளிக்கு விளைநிலம் உண்டு;

பொன்னுக்குப் புடமிடும் இடமுண்டு.

2மண்ணிலிருந்து இரும்பு எடுக்கப்படுகின்றது;

கல்லிலிருந்து செம்பு உருக்கப்படுகின்றது.

3மனிதர் இருளுக்கு இறுதி கண்டு,

எட்டின மட்டும் தோண்டி,

இருட்டிலும் சாவின் இருளிலும்

கனிமப் பொருளைத் தேடுகின்றனர்.

4மக்கள் குடியிருப்புக்குத் தொலையில்

சுரங்கத்தைத் தோண்டுவர்;

வழிநடப்போரால் அவர்கள் மறக்கப்படுவர்;

மனிதரிடமிருந்து கீழே இறங்கி

ஊசலாடி வேலை செய்வர்.

5மேலே நிலத்தில் உணவு விளைகின்றது;

கீழே அது நெருப்புக் குழம்பாய் மாறுகின்றது.

6நீலமணிகள் அதன் கற்களில் கிட்டும்;

பொன்துகளும் அதில் கிடைக்கும்.

7அதற்குச் செல்லும் பாதையை,

ஊன் உண்ணும் பறவையும் அறியாது;

கழுகின் கண்களும் அதைக் கண்டதில்லை.

8வீறுகொண்ட விலங்குகள்

அதன் மேல் சென்றதில்லை;

சிங்கமும் அவ்வழி நடந்து கடந்ததில்லை.

9கடின பாறையிலும் அவர்கள் கைவைப்பர்;

மலைகளின் அடித்தளத்தையே

பெயர்த்துப் புரட்டிடுவர்.

10பாறைகள் நடுவே

சுரங்க வழிகளை வெட்டுகின்றனர்;

விலையுயர் பொருளையே

அவர்களது கண் தேடும்.

11ஒழுகும் ஊற்றுகளைத்

தடுத்து நிறுத்துகின்றனர்;

மறைவாய் இருப்பதை

ஒளிக்குக் கொணர்கின்றனர்.

12ஆனால், ஞானம்

எங்கே கண்டெடுக்கப்படும்?

அறிவின் உறைவிடம் எங்கேயுள்ளது?

13மனிதர் அதன் மதிப்பை உணரார்;

வாழ்வோர் உலகிலும் அது காணப்படாது.

14‘என்னுள் இல்லை’ என உரைக்கும் ஆழ்கடல்;

‘என்னிடம் இல்லை’ என இயம்பும் பெருங்கடல்.

15தங்கத்தைக் கொடுத்து

அதைப் பெறமுடியாது; வெள்ளியால்

அதன் விலையை நிறுக்க இயலாது.

16ஓபீர்த் தங்கமும் கோமேதகமும்

அரிய நீலமணியும் அதற்கு மதிப்பாகா!

17பொன்னும் பளிங்கும் அதற்கு நிகராகா;

பசும்பொன் கலன்களும் பண்டமாற்றாகா.

18மணியும் பவளமும் அதற்கு இணையில்லை;

மதிப்பினில் முத்தினை ஞானம் விஞ்சும்.

19எத்தியோப்பிய புட்பராகம்

அதற்கு இணையல்ல;

பத்தரை மாற்றுத் தங்கமும் அதற்கு நிகரல்ல.

20அவ்வாறாயின், எங்கிருந்து வருகிறது ஞானம்?

எங்குள்ளது அறிவின் உறைவிடம்?

21வாழ்வோர் அனைவர்தம் கண்களுக்கும்

ஒளிந்துள்ளது;

வானத்துப் பறவைகளுக்கும்

மறைவாய் உள்ளது.

22படுகுழியும் சாவும் பகர்கின்றன;

அதைப்பற்றிய பேச்சு காதில் விழுந்தது;

23அதன் வழியைத் தெரிந்தவர் கடவுள்;

அதன் இடத்தை அறிந்தவரும் அவரே!

24ஏனெனில், வையகத்தின் எல்லை வரை

அவர் காண்கின்றார்;

வானத்தின்கீழ் உள்ளவற்றைப் பார்க்கின்றார்.

25காற்றுக்கு எடையைக் கடவுள் கணித்தபோது,

நீரினை அளவையால் அளந்தபோது,

26மழைக்கு அவர் கட்டளை இட்டபொழுது,

இடி மின்னலுக்கு வழியை வகுத்த பொழுது,

27அவர் ஞானத்தைக் கண்டார்;

அதைப்பற்றி அறிவித்தார்;

அதை நிலைநாட்டினார்;

இன்னும் அதை ஆய்ந்தறிந்தார்.

28அவர் மானிடர்க்குக் கூறினார்;

ஆண்டவர்க்கு அஞ்சுங்கள்; அதுவே ஞானம்;

தீமையை விட்டு விலகுங்கள்; அதுவே அறிவு.


28:28 திபா 111:10; நீமொ 1:7; 9:10.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks