யோபு அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
‘ஞானத்தின் மேன்மை’
1வெள்ளிக்கு விளைநிலம் உண்டு;
பொன்னுக்குப் புடமிடும் இடமுண்டு.
2மண்ணிலிருந்து இரும்பு எடுக்கப்படுகின்றது;
கல்லிலிருந்து செம்பு உருக்கப்படுகின்றது.
3மனிதர் இருளுக்கு இறுதி கண்டு,
எட்டின மட்டும் தோண்டி,
இருட்டிலும் சாவின் இருளிலும்
கனிமப் பொருளைத் தேடுகின்றனர்.
4மக்கள் குடியிருப்புக்குத் தொலையில்
சுரங்கத்தைத் தோண்டுவர்;
வழிநடப்போரால் அவர்கள் மறக்கப்படுவர்;
மனிதரிடமிருந்து கீழே இறங்கி
ஊசலாடி வேலை செய்வர்.
5மேலே நிலத்தில் உணவு விளைகின்றது;
கீழே அது நெருப்புக் குழம்பாய் மாறுகின்றது.
6நீலமணிகள் அதன் கற்களில் கிட்டும்;
பொன்துகளும் அதில் கிடைக்கும்.
7அதற்குச் செல்லும் பாதையை,
ஊன் உண்ணும் பறவையும் அறியாது;
கழுகின் கண்களும் அதைக் கண்டதில்லை.
8வீறுகொண்ட விலங்குகள்
அதன் மேல் சென்றதில்லை;
சிங்கமும் அவ்வழி நடந்து கடந்ததில்லை.
9கடின பாறையிலும் அவர்கள் கைவைப்பர்;
மலைகளின் அடித்தளத்தையே
பெயர்த்துப் புரட்டிடுவர்.
10பாறைகள் நடுவே
சுரங்க வழிகளை வெட்டுகின்றனர்;
விலையுயர் பொருளையே
அவர்களது கண் தேடும்.
11ஒழுகும் ஊற்றுகளைத்
தடுத்து நிறுத்துகின்றனர்;
மறைவாய் இருப்பதை
ஒளிக்குக் கொணர்கின்றனர்.
12ஆனால், ஞானம்
எங்கே கண்டெடுக்கப்படும்?
அறிவின் உறைவிடம் எங்கேயுள்ளது?
13மனிதர் அதன் மதிப்பை உணரார்;
வாழ்வோர் உலகிலும் அது காணப்படாது.
14‘என்னுள் இல்லை’ என உரைக்கும் ஆழ்கடல்;
‘என்னிடம் இல்லை’ என இயம்பும் பெருங்கடல்.
15தங்கத்தைக் கொடுத்து
அதைப் பெறமுடியாது; வெள்ளியால்
அதன் விலையை நிறுக்க இயலாது.
16ஓபீர்த் தங்கமும் கோமேதகமும்
அரிய நீலமணியும் அதற்கு மதிப்பாகா!
17பொன்னும் பளிங்கும் அதற்கு நிகராகா;
பசும்பொன் கலன்களும் பண்டமாற்றாகா.
18மணியும் பவளமும் அதற்கு இணையில்லை;
மதிப்பினில் முத்தினை ஞானம் விஞ்சும்.
19எத்தியோப்பிய புட்பராகம்
அதற்கு இணையல்ல;
பத்தரை மாற்றுத் தங்கமும் அதற்கு நிகரல்ல.
20அவ்வாறாயின், எங்கிருந்து வருகிறது ஞானம்?
எங்குள்ளது அறிவின் உறைவிடம்?
21வாழ்வோர் அனைவர்தம் கண்களுக்கும்
ஒளிந்துள்ளது;
வானத்துப் பறவைகளுக்கும்
மறைவாய் உள்ளது.
22படுகுழியும் சாவும் பகர்கின்றன;
அதைப்பற்றிய பேச்சு காதில் விழுந்தது;
23அதன் வழியைத் தெரிந்தவர் கடவுள்;
அதன் இடத்தை அறிந்தவரும் அவரே!
24ஏனெனில், வையகத்தின் எல்லை வரை
அவர் காண்கின்றார்;
வானத்தின்கீழ் உள்ளவற்றைப் பார்க்கின்றார்.
25காற்றுக்கு எடையைக் கடவுள் கணித்தபோது,
நீரினை அளவையால் அளந்தபோது,
26மழைக்கு அவர் கட்டளை இட்டபொழுது,
இடி மின்னலுக்கு வழியை வகுத்த பொழுது,
27அவர் ஞானத்தைக் கண்டார்;
அதைப்பற்றி அறிவித்தார்;
அதை நிலைநாட்டினார்;
இன்னும் அதை ஆய்ந்தறிந்தார்.
28அவர் மானிடர்க்குக் கூறினார்;
ஆண்டவர்க்கு அஞ்சுங்கள்; அதுவே ஞானம்;
தீமையை விட்டு விலகுங்கள்; அதுவே அறிவு.