சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
1தங்களது வீழ்ச்சிக் காலத்தில்
அவர்கள் உதவி பெறுவர்.
குழந்தாய்,
ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே;
கையேந்தி நிற்போரைக்
காத்திருக்க வைக்காதே.
2பசித்திருப்போரை
வாட்டி வதைக்காதே;
வறுமையில் உழல்வோரை
எரிச்சலூட்டாதே.
3உள்ளம் உடைந்தோர்க்குத்
துயரங்களைக் கூட்டாதே;
வறுமையில் உழல்வோருக்குக்
காலம் தாழ்த்தாமல் உதவி செய்.
4துன்புறுவோரின் வேண்டுதலைத்
தள்ளிவிடாதே;
ஏழையரிடமிருந்து
உன் முகத்தைத் திருப்பிக்
கொள்ளாதே.
5உன்னிடம் உதவி
வேண்டுவோரிடமிருந்து
உன் கண்களைத்
திருப்பிக் கொள்ளாதே;
உன்னைச் சபித்திட யாருக்கும்
வாய்ப்பு அளிக்காதே.
6ஏழைகள் கசப்புணர்வினால்
உன்னைச் சபித்தால்,
அவர்களைப் படைத்தவர்
அவர்களுடைய வேண்டுதலுக்குச்
செவிசாய்ப்பார்.
7மக்களின் அன்புக்கு
உரியவனாய் இரு;
பெரியோர்களுக்குத் தலை வணங்கு.
8ஏழைகளுக்குச் செவிசாய்;
அவர்களுக்கு அமைதியாக,
கனிவோடு பதில் சொல்.
9ஒடுக்குவோரின் கையினின்று
ஒடுக்கப்பட்டோரை விடுவி;
நீதியான தீர்ப்பு வழங்குவதில்
உறுதியாய் இரு.
10கைவிடப்பட்டோர்க்குத்
தந்தையாய் இரு;
அவர்களின் அன்னையர்க்குத்
துணைவன்போல் இரு.
அப்போது நீ உன்னத
இறைவனின் பிள்ளைபோல்
இருப்பாய்; தாயைவிட
அவர் உன்மீது அன்புகூர்வார்.
ஞானம் என்னும் ஆசான்
11ஞானம் தன் மக்களை
மேன்மைப்படுத்தும்;
தன்னைத் தேடுவோர்க்குத்
துணைநிற்கும்.
12ஞானத்திற்கு அன்பர்
வாழ்விற்கும் அன்பர்;
அதனை வைகறையிலேயே
தேடுவோர் மகிழ்ச்சியால் நிரம்புவர்.
13அதனைப் பற்றிக்கொள்வோர்
மாட்சியை உரிமையாக்கிக்கொள்வர்;
அது செல்லும் இடமெல்லாம்
ஆண்டவர் ஆசி வழங்குவார்.
14அதற்குப் பணி செய்வோர்
தூய இறைவனுக்கே
ஊழியம் புரிகின்றனர்;
ஞானத்துக்கு அன்பர்
ஆண்டவருக்கும் அன்பர்.
15ஞானத்துக்குப் பணிவோர்
மக்களினங்களுக்குத்
தீர்ப்பு வழங்குவர்;
அதற்குச் செவிசாய்ப்போர்
பாதுகாப்பாய் வாழ்வர்;
16ஞானத்தை நம்புவோர்
அதனை உரிமையாக்கிக்
கொள்வர்; அவர்களுடைய
வழி மரபினரும் அதனை
உடைமையாக்கிக் கொள்வர்;
17முதலில் அவர்களை
அது கோணல் வழியில்
அழைத்துச் செல்லும்;
அவர்களுக்கு அச்ச நடுக்கத்தை
வருவிக்கும்;
தனக்கு அவர்கள்மீது
நம்பிக்கை ஏற்படும்வரை
அவர்களை அது கண்டிக்கும்,
வதைக்கும்;
தன் நெறிமுறைகளால்
அவர்களைச் சோதிக்கும்.
18அது மீண்டும் அவர்களிடமே
வந்து அவர்களை மகிழ்விக்கும்;
அவர்களுக்குத் தன்
இரகசியங்களை வெளிப்படுத்தும்.
19அதைவிட்டு அவர்கள்
விலகிச் சென்றால்,
அவர்களை அது கைவிட்டுவிடும்;
அழிவுக்கு அவர்களை இட்டுச் செல்லும்.
தன்னம்பிக்கை
20தக்கநேரம் பார்;
தீமையைக்குறித்து
விழிப்பாயிரு;
உன்னைப்பற்றியே
நாணம் அடையாதே.
21ஒரு வகை நாணம்
பாவத்திற்கு இட்டுச்செல்லும்;
மற்றொரு வகை நாணம்
மாட்சியையும் அருளையும் தரும்.
22பாகுபாடு காட்டி
உனக்கே கேடு
வருவித்துக் கொள்ளாதே;
பணிவின் பெயரால் வீழ்ச்சி
அடையாதே.
23பேச வேண்டிய நேரத்தில்
பேசாமல் இருந்துவிடாதே.*
24ஞானம் பேச்சில் புலப்படும்;
நற்பயிற்சி வாய்மொழியால் வெளிப்படும்.
25உண்மைக்கு மாறாகப் பேசாதே;
உன் அறியாமைக்காக
நாணம் கொள்.
26உன் பாவங்களை அறிக்கையிட
வெட்கப்படாதே;
ஆற்றின் நீரோட்டத்தைத்
தடை செய்யமுயலாதே.
27மூடருக்கு அடிபணியாதே;
வலியோருக்குப் பாகுபாடு
காட்டாதே.
28இறக்கும்வரை
உண்மைக்காகப் போராடு;
கடவுளாகிய ஆண்டவர்
உனக்காகப் போரிடுவார்.
29பேச்சில் துடுக்காய் இராதே;
செயலில் சோம்பலாகவும்
ஈடுபாடின்றியும் இராதே.
30வீட்டில் சிங்கம்போல் இராதே;
பணியாளர்முன் கோழையாய் இராதே.
31பெறுவதற்காக மட்டும்
கைகளை விரித்து வைத்திராதே;
கொடுக்கும் நேரத்திலோ
உன் கைகளை மூடிக்கொள்ளாதே.