Home » சீராக்கின் ஞானம் அதிகாரம் – 19 – திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரம் – 19 – திருவிவிலியம்

சீராக்கின் ஞானம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

1குடிகாரரான தொழிலாளர்கள்

செல்வர்களாக முடியாது;

சிறியவற்றை புறக்கணிப்போர்

சிறிது சிறிதாய் வீழ்ச்சி அடைவர்.

2மதுவும் மாதும் ஞானிகளை

நெறிபிறழச் செய்யும்;

விலைமாதரோடு உறவு கொள்வோர்

அசட்டுத் துணிவு கொள்வர்.

3அவர்களது உடல் அழிவுற,

புழு தின்னும்; அசட்டுத் துணிவு

கொண்டோர் விரைவில்

எடுத்துக்கொள்ளப் பெறுவர்.

நாவடக்கம்

4பிறரை எளிதில் நம்புவோர்

கருத்து ஆழமற்றோர்;

பாவம் செய்வோர் தங்களுக்கே

தீங்கு இழைத்துக் கொள்கின்றனர்.

5தீச்செயல்களில்* மகிழ்ச்சி காண்போர்

கண்டனத்திற்கு உள்ளாவர்.**

6புறங்கூறுதலை வெறுப்போரிடம்

தீமைகள் குறையும்.

7உன்னிடம் கூறப்பட்டதை

மற்றவர்களிடம் சொல்லாதே;

சொல்லாவிடில், உனக்கு

ஒன்றும் குறைந்துவிடாது.

8நண்பராயினும் பகைவராயினும்

அதைத் தெரிவிக்காதே;

மறைப்பது உனக்குப்

பாவமானாலொழிய

அதை வெளிப்படுத்தாதே.

9நீ கூறியதைக் கேட்டு

உன்னைக் கவனித்தோர்

காலம் வரும்போது உன்னை

வெறுப்பர்.

10எதையாவது நீ கேள்வியுற்றாயா?

அது உன்னோடு மடியட்டும்.

துணிவுகொள்; எதுவும் உன்னை

அசைக்கமுடியாது.

11அறிவிலிகள் தாங்கள் கேட்டவற்றை

வெளியிடாமல் இருப்பது

அவர்களுக்குப் பேறுகாலத் துன்பம்

போல் இருக்கும்.

12தொடையில் அம்பு

ஆழமாகப் பாயும்;

அதுபோலப் புரளி

அறிவிலிகளின் உள்ளத்தில்

உறுத்தும்.

கேட்பதையெல்லாம் நம்பாதே

13உன் நண்பர்கனைக் கேட்டுப்பார்;

ஒருவேளை அவர்கள் ஒன்றும்

செய்யாதிருக்கலாம்.

ஒருகால் அதைச் செய்திருந்தாலும்

இனிமேலாவது செய்யாதிருப்பார்கள்.

14அடுத்திருப்பவர்களைக் கேட்டுப்பார்;

ஒருவேளை அவர்கள்

ஒன்றும் சொல்லாதிருந்திருக்கலாம்.

ஒருகால் அவற்றைச்

சொல்லியிருந்தாலும் மறுமுறை

சொல்லாது விட்டுவிடுவார்கள்.

15உன் நண்பர்களைக் கேட்டுப்பார்;

நீ கேள்விப்பட்டது பொதுவாக

அவதூறாக இருக்கும்.

எனவே கேட்பதையெல்லாம்

நம்பிவிடாதே.

16அறியாது சிலர் தவறலாம்;

தம் நாவால் பாவம்

செய்யாதோர் யார்?

17உனக்கு அடுத்திருப்பவரை

அச்சுறுத்துமுன் எச்சரிக்கை செய்;

உன்னத இறைவனின்

திருச்சட்டத்திற்கு உரிய

இடம் கொடு.

18*[ஆண்டவரிடம் கொள்ளும்

அச்சமே அவரால்

ஏற்றுக்கொள்ளப் படுவதன்

தொடக்கம்.

ஞானம் அவருடைய அன்பைப்

பெற்றுத் தருகிறது.]

19*[ஆண்டவருடைய சட்டங்கள்

பற்றிய அறிவு வாழ்வு அளிக்கும்

நற்பயிற்சியாகும்;

அவருக்கு விருப்பமானதைச்

செய்வோர் வாழ்வு அளிக்கும்

மரத்தின் கனியைப் பெறுவர்.]

உண்மையான ஞானம்

20*ஆண்டவரிடம் கொள்ளும்

அச்சமே முழு ஞானம்;

முழு ஞானம் என்பது

திருச்சட்டத்தின் நிறைவே.

[அவரது எல்லாம் வல்ல

தன்மை பற்றிய அறிவே.

21‘நீர் விரும்புவதைச்

செய்யமாட்டேன்’

எனத் தன் தலைவரிடம்

கூறும் அடிமை

பின்பு அதைச் செய்தாலும்

தனக்கு உணவு அளித்து

வளர்க்கின்றவரின் சினத்தைத்

தூண்டி விடுகிறான்.]

22தீமைப்பற்றிய அறிவாற்றல்

உண்மையான ஞானமன்று;

பாவிகளின் அறிவுரையில்

அறிவுத்திறனில்லை.

23அருவருக்கத்தக்க

அறிவுடைமையும் உண்டு.

ஞானம் இல்லாதோர் மூடராவர்.

24அறிவுத்திறன் இருந்தும்

திருச்சட்டத்தை மீறுவோரைவிட

அறிவுக்கூர்மை இல்லாது

போயினும் இறையச்சம்

கொண்டோர் மேலானோர்.

25தெளிந்த அறிவுடைமை

இருந்தும் அது அநீதியான

தாய் இருக்கலாம்;

தீர்ப்பில் வெற்றி பெற

நன்மைகளைத் தவறாகப்

பயன்படுத்திக் கொள்வர்.

26துயரில் முகவாட்டமுடன்

திரியும் தீயவர்கள் உண்டு;

அவர்கள் உள்ளத்தில்

நிறைந்திருப்பதெல்லாம் வஞ்சகமே.

27அவர்கள் கண்டும்

காணாதவர்களாய் ஒன்றும்

கேளாதவர்கள்போல் இருப்பார்கள்;

அவர்களை யாரும் கவனிக்காத

வேளையில் உன்னைப் பயன்படுத்திக்

கொள்வார்கள்.

28வலிமைக் குறைவு

பாவம் செய்வதினின்று

அவர்களைத் தடுத்தாலும்,

வாய்ப்புக் கிடைக்கும்போது

அவர்கள் தீங்கு செய்வார்கள்.

29தோற்றத்தைக் கொண்டு

மனிதரைக் கண்டு கொள்ளலாம்.

முதல் சந்திப்பிலேயே

அறிவாளியைக் கண்டுகொள்ளலாம்.

30ஒருவருடைய உடையும்

மனமுவந்த சிரிப்பும்

நடையும் அவர் எத்தகையவர்

என்பதைக் காட்டிவிடும்.


19:5 * ‘உள்ளத்தில்’ என்னும் பாடம் சில சுவடிகளில் காணப்படுகிறது..
19:5 ** சில சுவடிகளில் 19:5ஆ-6அ இடம் பெறுகிறது. 5ஆ இன்பங்களை மறுத்து வாழ்வோர் வாழ்வின் மணிமுடியைச் சூடிக்கொள்வர். 6அ தம் நாவை அடக்குவோர் பிணக்கின்றி வாழ்வர்..
19:6 [ ] சில சுவடிகளில் இடம் பெறுகிறது.
19:18 [ ] சில சுவடிகளில் மட்டுமே காணப்படுகிறது.
19:19 [ ] சில சுவடிகளில் மட்டுமே காணப்படுகிறது.
19:20ஆ-21 [ ] சில சுவடிகளில் மட்டுமே காணப்படுகிறது.
Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks