திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
உதவிக்காக வேண்டல்
(தாவீதின் மன்றாட்டு)
1ஆண்டவரே! எனக்குச்
செவிசாய்த்துப் பதிலளியும்;
ஏனெனில், நான் எளியவன்; வறியவன்.
2என் உயிரைக் காத்தருளும்;
ஏனெனில், நான் உம்மீது பற்றுடையவன்;
உம் ஊழியனைக் காத்தருளும்;
நீரே என் கடவுள்! நான் உம்மீது
நம்பிக்கை கொண்டுள்ளேன்.
3என் தலைவரே! என் மேல் இரக்கமாயிரும்;
ஏனெனில், நான் முழுவதும்
உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.
4உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்;
என் தலைவரே! உம்மை நோக்கி
என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.
5ஏனெனில் என் தலைவரே!
நீர் நல்லவர்; மன்னிப்பவர்;
உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும்
பேரன்பு காட்டுபவர்.
6ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச்
செவிகொடும்;
உம் உதவியை நாடும்
என் குரலைக் கேட்டருளும்.
7என் துன்ப நாளில்
உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்;
நீரும் எனக்குப் பதிலளிப்பீர்.
8என் தலைவரே! தெய்வங்களுள்
உமக்கு நிகரானவர் எவருமில்லை.
உமது செயல்களுக்கு ஒப்பானவை
எவையுமில்லை.
9என் தலைவரே! நீர் படைத்த
மக்களினத்தார் அனைவரும்
உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்;
உமது பெயருக்கு மாட்சி அளிப்பர்.
10ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்;
வியத்தகு செயல்கள் புரிபவர்;
நீர் ஒருவரே கடவுள்!
11ஆண்டவரே, உமது உண்மைக்கேற்ப
நான் நடக்குமாறு
உமது வழியை எனக்குக் கற்பியும்,
உமது பெயருக்கு அஞ்சுமாறு
என் உள்ளத்தை ஒருமுகப்படுத்தும்.
12என் தலைவரே! என் கடவுளே!
என் முழு இதயத்தோடு
உம்மைப் புகழ்வேன்;
என்றென்றும் உமது பெயருக்கு
மாட்சி அளிப்பேன்.
13ஏனெனில், நீர் என்மீது காட்டிய
அன்பு பெரிது!
ஆழமிகு பாதாளத்தினின்று
என்னுயிரை விடுவித்தீர்!
14கடவுளே! செருக்குற்றோர்
எனக்கெதிராய் எழுந்துள்ளனர்;
கொடியோர் கூட்டம்
என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றது;
அவர்களுக்கு உம்மைப்பற்றிய
நினைவே இல்லை.
15என் தலைவரே!
நீரோ இரக்கமிகு இறைவன்;
அருள் மிகுந்தவர்;
விரைவில் சினமுறாதவர்;
பேரன்பும் உண்மையும்
பெரிதும் கொண்டவர்.
16என்னைக் கண்ணோக்கி
என்மீது இரங்கும்;
உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்;
உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும்.
17நன்மைத்தனத்தின் அடையாளம் ஒன்றை
எனக்கு அருளும்;
என் எதிரிகள் அதைக் கண்டு நாணுவர்;
ஏனெனில், ஆண்டவராகிய நீர்தாமே
எனக்குத் துணைசெய்து
ஆறுதல் அளித்துள்ளீர்.