திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
அரசராம் கடவுள் போற்றி!
(தாவீதின் திருப்பாடல்)
1என் கடவுளே, என் அரசே!
உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்;
உமது பெயரை என்றும்
எப்பொழுதும் போற்றுவேன்.
2நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்;
உமது பெயரை என்றும்
எப்பொழுதும் புகழ்வேன்.
3ஆண்டவர் மாண்புமிக்கவர்;
பெரிதும் போற்றுதலுக்கும் உரியவர்;
அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது.
4ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு
உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்;
வல்லமைமிகு உம் செயல்களை
எடுத்துரைக்கும்.
5உமது மாண்பின்
மேன்மையையும் மாட்சியையும்
வியத்தகு உம் செயல்களையும்
நான் சிந்திப்பேன்.
6அச்சந்தரும் உம் செயல்களின்
வல்லமையைப்பற்றி
மக்கள் பேசுவார்கள்;
உமது மாண்பினை நான்
விரித்துரைப்பேன்,
7அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை
நினைந்துக் கொண்டாடுவார்கள்;
உமது நீதியை எண்ணி
ஆர்ப்பரித்துப் பாடுவார்கள்.
8ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்;
எளிதில் சினம் கொள்ளாதவர்;
பேரன்பு கொண்டவர்.
9ஆண்டவர் எல்லாருக்கும்
நன்மை செய்பவர்;
தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும்
இரக்கம் காட்டுபவர்.
10ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும்
உமக்கு நன்றி செலுத்தும்;
உம்முடைய அன்பர்கள்
உம்மைப் போற்றுவார்கள்.
11அவர்கள் உமது அரசின் மாட்சியை
அறிவிப்பார்கள்;
உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள்.
12மானிடர்க்கு
உம் வல்லமைச் செயல்களையும்
உமது அரசுக்குரிய
மாட்சியின் பேரொளியையும்
புலப்படுத்துவார்கள்.
13உமது அரசு
எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு;
உமது ஆளுகை
தலைமுறை தலைமுறையாக உள்ளது.
ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும்
உண்மையானவர்;
தம் செயல்கள் அனைத்திலும்
தூய்மையானவர்.
14தடுக்கி விழும் யாவரையும்
ஆண்டவர் தாங்குகின்றார்.
தாழ்த்தப்பட்ட யாவரையும்
தூக்கிவிடுகின்றார்.
15எல்லா உயிரினங்களின் கண்களும்
உம்மையே நோக்குகின்றன;
தக்க வேளையில் நீரே அவற்றிற்கு
உணவளிக்கின்றீர்.
16நீர் உமது கையைத் திறந்து
எல்லா உயிரினங்களின்
விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.
17ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும்
நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும்
இரக்கச் செயல்களே.
18தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்,
உண்மையாய்த் தம்மை நோக்கி
மன்றாடும் யாவருக்கும்,
ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.
19அவர் தமக்கு அஞ்சி நடப்போரின்
விருப்பத்தை நிறைவேற்றுவார்;
அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து
அவர்களைக் காப்பாற்றுவார்.
20ஆண்டவர் தம்மிடம் பற்றுக் கொள்ளும்
அனைவரையும் பாதுகாக்கின்றார்;
பொல்லார் அனைவரையும் அழிப்பார்.
21என் வாய் ஆண்டவரின் புகழை
அறிவிப்பதாக!
உடல்கொண்ட அனைத்தும்
அவரது திருப்பெயரை
என்றும் எப்பொழுதும் போற்றுவதாக!