திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
மக்களில் மகிழ்ச்சியுறும் மாமன்னர் போற்றி!
1அல்லேலூயா!
ஆண்டவருக்குப் புதியதொரு
பாடலைப் பாடுங்கள்;
அவருடைய அன்பர் சபையில்
அவரது புகழைப் பாடுங்கள்.
2இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக்
குறித்து மகிழ்ச்சி கொள்வதாக!
சீயோனின் மக்கள் தம் அரசரை
முன்னிட்டுக் களிகூர்வார்களாக!
3நடனம் செய்து அவரது பெயரைப்
போற்றுவார்களாக;
மத்தளம் கொட்டி, யாழிசைத்து
அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!
4ஆண்டவர் தம் மக்கள் மீது
விருப்பம் கொள்கின்றார்;
தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு
வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார்.
5அவருடைய அன்பர்
மேன்மையடைந்து களிகூர்வராக!
மெத்தைகளில் சாய்ந்து
மகிழ்ந்து கொண்டாடுவராக!
6அவர்களின் வாய்
இறைவனை ஏத்திப் புகழட்டும்;
அவர்களின் கையில் இருபுறமும்
கூர்மையான வாள் இருக்கட்டும்.
7அவர்கள் வேற்றினத்தாரிடம்
பழிதீர்த்துக் கொள்வார்கள்;
மக்களினங்களுக்கு
தண்டனைத் தீர்ப்பிடுவார்கள்;
8வேற்றின மன்னர்களை
விலங்கிட்டுச் சிறைசெய்வார்கள்;
உயர்குடி மக்களை
இரும்பு விலங்குகளால் கட்டுவார்கள்.
9முன்குறித்து வைத்த தீர்ப்பை
அவர்களிடம் நிறைவேற்றுவார்கள்;
இத்தகைய மேன்மை
ஆண்டவர் தம் அன்பர்
அனைவருக்கும் உரித்தானது.
அல்லேலூயா!