திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
எல்லாம் வல்ல இறைவன் போற்றி
1அல்லேலூயா!
நம்முடைய கடவுளைப்
புகழ்ந்து பாடுவது நல்லது;
அவரைப் புகழ்வது இனிமையானது;
அதுவே ஏற்புடையது.
2ஆண்டவர் எருசலேமை
மீண்டும் கட்டி எழுப்புகின்றார்;
நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக்
கூட்டிச் சேர்க்கின்றார்;
3உடைந்த உள்ளத்தோரைக்
குணப்படுத்துகின்றார்;
அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார்.
4விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி,
அவை ஒவ்வொன்றையும்
பெயர் சொல்லி அழைக்கின்றார்.
5நம் தலைவர் மாண்புமிக்கவர்;
மிகுந்த வல்லமையுள்ளவர்;
அவர்தம் நுண்ணறிவு
அளவிடற்கு அரியது.
6ஆண்டவர் எளியோர்க்கு
ஆதரவளிக்கின்றார்;
பொல்லாரையோ
தரைமட்டும் தாழ்த்துகின்றார்.
7ஆண்டவருக்கு
நன்றி செலுத்திப் பாடுங்கள்;
நம் கடவுளை
யாழ்கொண்டு புகழ்ந்து பாடுங்கள்.
8அவர் வானத்தை
மேகங்களால் மறைக்கின்றார்;
பூவுலகின்மீது மழையைப் பொழிகின்றார்;
மலைகளில்
புல்லை முளைக்கச் செய்கின்றார்.
9கால்நடைகளுக்கும்
கரையும் காக்கைக் குஞ்சுகளுக்கும்,
அவர் இரை கொடுக்கின்றார்.
10குதிரையின் வலிமையில்
அவர் மகிழ்ச்சி காண்பதில்லை;
வீரனின் கால்வலிமையையும்
அவர் விரும்புவதில்லை.
11தமக்கு அஞ்சி நடந்து
தம் பேரன்புக்காக
நம்பிக்கையுடன் காத்திருப்போரிடம்
அவர் மகிழ்ச்சி கொள்கின்றார்.
12எருசலேமே!
ஆண்டவரைப் போற்றுவாயாக!
சீயோனே!
உன் கடவுளைப் புகழ்வாயாக!
13அவர் உன் வாயில்களின் தாழ்களை
வலுப்படுத்துகின்றார்;
உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு
ஆசி வழங்குகின்றார்.
14அவர் உன் எல்லைப்புறங்களில்
அமைதி நிலவச் செய்கின்றார்;
உயர்தரக் கோதுமை வழங்கி
உன்னை நிறைவடையச் செய்கின்றார்.
15அவர் தமது கட்டளையை
உலகினுள் அனுப்புகின்றார்;
அவரது வாக்கு
மிகவும் விரைவாய்ச் செல்கின்றது.
16அவர் வெண்கம்பளிபோல்
பனியைப் பொழிகின்றார்;
சாம்பலைப்போல்
உறைபனியைத் தூவுகின்றார்;
17பனிக்கட்டியைத்
துகள்துகளாக விழச் செய்கின்றார்;
அவர் வரவிடும் குளிரைத்
தாங்கக் கூடியவர் யார்?
18அவர் தம் கட்டளையால்
அவற்றை உருகச் செய்கின்றார்;
தம் காற்றை வீசச் செய்ய,
நீர் ஓடத் தொடங்குகின்றது.
19யாக்கோபுக்குத் தமது வாக்கையும்
இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும்
நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.
20அவர் வேறெந்த இனத்துக்கும்
இப்படிச் செய்யவில்லை;
அவருடைய நீதிநெறிகள்
அவர்களுக்குத் தெரியாது;
அல்லேலூயா!