back to top
HomeTamilதிருப்பாடல்கள் அதிகாரம் - 147 - திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 147 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

எல்லாம் வல்ல இறைவன் போற்றி

1அல்லேலூயா!

நம்முடைய கடவுளைப்

புகழ்ந்து பாடுவது நல்லது;

அவரைப் புகழ்வது இனிமையானது;

அதுவே ஏற்புடையது.

2ஆண்டவர் எருசலேமை

மீண்டும் கட்டி எழுப்புகின்றார்;

நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக்

கூட்டிச் சேர்க்கின்றார்;

3உடைந்த உள்ளத்தோரைக்

குணப்படுத்துகின்றார்;

அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார்.

4விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி,

அவை ஒவ்வொன்றையும்

பெயர் சொல்லி அழைக்கின்றார்.

5நம் தலைவர் மாண்புமிக்கவர்;

மிகுந்த வல்லமையுள்ளவர்;

அவர்தம் நுண்ணறிவு

அளவிடற்கு அரியது.

6ஆண்டவர் எளியோர்க்கு

ஆதரவளிக்கின்றார்;

பொல்லாரையோ

தரைமட்டும் தாழ்த்துகின்றார்.

7ஆண்டவருக்கு

நன்றி செலுத்திப் பாடுங்கள்;

நம் கடவுளை

யாழ்கொண்டு புகழ்ந்து பாடுங்கள்.

8அவர் வானத்தை

மேகங்களால் மறைக்கின்றார்;

பூவுலகின்மீது மழையைப் பொழிகின்றார்;

மலைகளில்

புல்லை முளைக்கச் செய்கின்றார்.

9கால்நடைகளுக்கும்

கரையும் காக்கைக் குஞ்சுகளுக்கும்,

அவர் இரை கொடுக்கின்றார்.

10குதிரையின் வலிமையில்

அவர் மகிழ்ச்சி காண்பதில்லை;

வீரனின் கால்வலிமையையும்

அவர் விரும்புவதில்லை.

11தமக்கு அஞ்சி நடந்து

தம் பேரன்புக்காக

நம்பிக்கையுடன் காத்திருப்போரிடம்

அவர் மகிழ்ச்சி கொள்கின்றார்.

12எருசலேமே!

ஆண்டவரைப் போற்றுவாயாக!

சீயோனே!

உன் கடவுளைப் புகழ்வாயாக!

13அவர் உன் வாயில்களின் தாழ்களை

வலுப்படுத்துகின்றார்;

உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு

ஆசி வழங்குகின்றார்.

14அவர் உன் எல்லைப்புறங்களில்

அமைதி நிலவச் செய்கின்றார்;

உயர்தரக் கோதுமை வழங்கி

உன்னை நிறைவடையச் செய்கின்றார்.

15அவர் தமது கட்டளையை

உலகினுள் அனுப்புகின்றார்;

அவரது வாக்கு

மிகவும் விரைவாய்ச் செல்கின்றது.

16அவர் வெண்கம்பளிபோல்

பனியைப் பொழிகின்றார்;

சாம்பலைப்போல்

உறைபனியைத் தூவுகின்றார்;

17பனிக்கட்டியைத்

துகள்துகளாக விழச் செய்கின்றார்;

அவர் வரவிடும் குளிரைத்

தாங்கக் கூடியவர் யார்?

18அவர் தம் கட்டளையால்

அவற்றை உருகச் செய்கின்றார்;

தம் காற்றை வீசச் செய்ய,

நீர் ஓடத் தொடங்குகின்றது.

19யாக்கோபுக்குத் தமது வாக்கையும்

இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும்

நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.

20அவர் வேறெந்த இனத்துக்கும்

இப்படிச் செய்யவில்லை;

அவருடைய நீதிநெறிகள்

அவர்களுக்குத் தெரியாது;

அல்லேலூயா!

Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks