திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
திருக்கோவில் வாழ்த்து
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)
1ஆண்டவரே! தாவீதையும்
அவர் பட்ட
இன்னல்கள் அனைத்தையும்
நினைவு கூர்ந்தருளும்.
2அவர் ஆண்டவராகிய உமக்கு
ஆணையிட்டுக் கூறியதை,
யாக்கோபின் வல்லவராகிய
உமக்குச் செய்த பொருத்தனையை
நினைவுகூர்ந்தருளும்.
3“ஆண்டவருக்கு ஓர் இடத்தை,
யாக்கோபின் வல்லவருக்கு
ஒர் உறைவிடத்தை
நான் அமைக்கும் வரையில்,
4என் இல்லமாகிய கூடாரத்தினுள்
செல்லமாட்டேன்;
படுப்பதற்காக என் மஞ்சத்தில்
ஏறமாட்டேன்;
5என் கண்களைத் தூங்க விடமாட்டேன்;
என் இமைகளை மூடவிடமாட்டேன்”
என்று அவர் சொன்னாரே.
6திருப்பேழை எப்ராத்தாவில்
இருப்பதாய்க் கேள்விப்பட்டோம்;
வனவெளியில் அதைக் கண்டுபிடித்தோம்.
7“அவரது உறைவிடத்திற்குச் செல்வோம்!
வாருங்கள்;
அவரது திருவடிதாங்கி
முன் வீழ்ந்து பணிவோம்!” என்றோம்.
8ஆண்டவரே! நீர் உமது
வல்லமை விளங்கும் பேழையுடன்
உமது உறைவிடத்திற்கு
எழுந்தருள்வீராக!
9உம் குருக்கள் நீதியை
ஆடையென அணிவார்களாக!
உம் அன்பர்கள் அக்களிப்பார்களாக!
10நீர் திருப்பொழிவு செய்த அரசரை,
உம் ஊழியராகிய தாவீதின் பொருட்டுப்
புறக்கணியாதேயும்.
11ஆண்டவர் தாவீதுக்கு
உண்மையாய் ஆணையிட்டுக் கூறினார்;
அவர்தம் வாக்குறுதியினின்று
பின்வாங்கமாட்டார்;
“உனக்குப் பிறந்த ஒருவனை
அரசனாக ஏற்படுத்தி
உன் அரியணையில்
வீற்றிருக்கச் செய்வேன்.
12உன் மைந்தர்
என் உடன்படிக்கையையும்,
நான் அவர்களுக்குக் கற்பிக்கும்
என் நியமங்களையும் கடைப்பிடித்தால்,
அவர்களுடைய மைந்தரும்
என்றென்றும் உன் அரியணையில்
வீற்றிருப்பர்.”
13ஆண்டவர் சீயோனைத்
தேர்ந்தெடுத்தார்;
அதையே தம்
உறைவிடமாக்க விரும்பினார்.
14“இது என்றென்றும்
நான் இளைப்பாறும் இடம்;
இதை நான் விரும்பினதால்
இதையே என் உறைவிடமாக்குவேன்.
15இங்கே என் ஆசியால்
உணவுப் பொருள்
தாராளமாகக் கிடைக்கச்செய்வேன்;
அதனை ஏழைகள் உண்டு
நிறைவு பெறுமாறு செய்வேன்.
16இங்குள்ள குருக்களுக்கு
மீட்பெனும் உடையை உடுத்துவேன்;
இங்குள்ள என் அன்பர்கள்
மகிழ்ந்து ஆரவாரிப்பார்கள்.
17இங்கே தாவீதின் மரபிலிருந்து
ஒரு வல்லவனை எழச்செய்வேன்;
நான் திருப்பொழிவு செய்தவனுக்காக
ஒரு ஒளிவிளக்கை ஏற்பாடு செய்துள்ளேன்.
18அவனுடைய எதிரிகளுக்கு
இகழ்ச்சியெனும்
உடையை உடுத்துவேன்;
அவன்மீதோ அவனது மணிமுடி
ஒளிவீசும்.”