Home » எசாயா அதிகாரம் – 43 – திருவிவிலியம்

எசாயா அதிகாரம் – 43 – திருவிவிலியம்

எசாயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

விடுதலை வரும் என்ற உறுதிமொழி

1யாக்கோபே, உன்னைப் படைத்தவரும்

இஸ்ரயேலே, உன்னை

உருவாக்கிய வருமான ஆண்டவர்

இப்போது இவ்வாறு கூறுகிறார்:

அஞ்சாதே, நான் உன்னை

மீட்டுக் கொண்டேன்;

உன் பெயரைச் சொல்லி

உன்னை அழைத்தேன்;

நீ எனக்கு உரியவன்.

2நீர்நிலைகள் வழியாக நீ செல்லும்போது

நான் உன்னோடு இருப்பேன்;

ஆறுகளைக் கடந்து போகும்போது

அவை உன்னை மூழ்கடிக்க மாட்டா;

தீயில் நடந்தாலும்

சுட்டெரிக்கப்பட மாட்டாய்;

நெருப்பு உன்மேல் பற்றியெரியாது.

3ஏனெனில் உன் கடவுளாகிய

ஆண்டவர் நானே;

இஸ்ரயேலின் தூயவரும்

உன்னை விடுவிப்பவரும் நானே;

உனக்குப் பணயமாக எகிப்தையும்,

உனக்கு ஈடாக எத்தியோப்பியா,

செபா நாடுகளையும்

ஒப்புக்கொடுக்கிறேன்.

4என் பார்வையில் நீ

விலையேறப் பெற்றவன்; மதிப்புமிக்கவன்;

நான் உன்மேல் அன்பு கூர்கிறேன்,

ஆதலால் உனக்குப் பதிலாக

மானிடரையும்

உன் உயிருக்கு மாற்றாக

மக்களினங்களையும் கொடுக்கிறேன்.

5அஞ்சாதே, ஏனெனனில்

நான் உன்னோடு இருக்கின்றேன்;

கிழக்கிலிருந்து உன் வழிமரபை

அழைத்து வருவேன்;

மேற்கிலிருந்து உன்னை

ஒன்று திரட்டுவேன்.

6வடபுறம் நோக்கி,

‘அவர்களை விட்டுவிடு’ என்பேன்.

தென்புறத்திடம் ‘தடுத்து நிறுத்தாதே’

என்று சொல்வேன்.

“தொலைநாட்டிலிருந்து

என் புதல்வரையும்

உலகின் எல்லையிலிருந்து

என் புதல்வியரையும்

அழைத்து வா.

7என் மாட்சிக்காக நான் படைத்த,

உருவாக்கிய, உண்டாக்கிய

என் பெயரால் அழைக்கப்பெற்ற

அனைவரையும் கூட்டிக்கொண்டுவா!”.

இஸ்ரயேல் ஆண்டவரின் சாட்சி

8கண்ணிருந்தும் குருடராய்,

காதிருந்தும் செவிடராய் இருக்கும்

மக்களைப் புறப்பட்டு வரச்செய்.

9வேற்றினத்தார் அனைவரும்

ஒருங்கே திரண்டு வரட்டும்;

மக்களினங்கள் ஒன்று கூடட்டும்;

அவர்களுள் யார்

அதை முன்னறிவிக்கக்கூடும்?

முன்பு நடந்தவற்றை யாரால்

விளக்கக் கூடும்?

அவர்கள் கூறுவது சரியெனக் காட்டத்

தம் சான்றுகளைக் கொண்டு வரட்டும்;

மக்கள் அதைக்கேட்டு

‘உண்மை’ என்று சொல்லட்டும்.

10“நீங்கள் என் சாட்சிகள்”

என்கிறார் ஆண்டவர்;

‘நான் தேர்ந்தெடுத்த

என் ஊழியனும் நீங்களே;

என்னை அறிந்து என்மீது

நம்பிக்கை வைப்பீர்கள்;

‘நானே அவர்’ என்பதை

உணர்ந்து கொள்வீர்கள்;

எனக்கு முன் எந்தத் தெய்வமும்

உருவாக்கப்படவில்லை;

எனக்குப்பின் எதுவும் இருப்பதில்லை.

11நான், ஆம், நானே ஆண்டவர்;

என்னையன்றி வேறு மீட்பர் இல்லை.

12அறிவித்தது, விடுதலை அளித்தது,

பறைசாற்றியது அனைத்தும் நானே;

உங்களிடையே உள்ள

வேறு தெய்வமன்று;

நீங்களே என் சாட்சிகள்,

என்கிறார் ஆண்டவர்!

13நானே இறைவன்;

எந்நாளும் இருப்பவரும் நானே;

என் கையிலிருப்பதைப்

பறிப்பவர் எவருமில்லை;

நான் செய்ததை மாற்றியமைப்பவர் எவர்?

பாபிலோனிலிருந்து விடுவிக்கப்படல்

14இஸ்ரயேலின் தூயவரும்

உங்கள் மீட்பருமான

ஆண்டவர் கூறுவது இதுவே:

உங்கள் பொருட்டுப்

பாபிலோனுக்கு ஆள்களை அனுப்பி,

அதன் தாழ்ப்பாள்கள் அனைத்தையும்

தகர்த்துவிடுவேன்;

கல்தேயரின் மகிழ்ச்சிப் பாடல்

புலம்பலாக மாறும்.

15நானே உங்கள் தூயவரான ஆண்டவர்;

இஸ்ரயேலைப் படைத்தவர்;

உங்கள் அரசர்.

16கடலுக்குள் வழியை ஏற்படுத்தியவரும்,

பொங்கியெழும் நீர்நடுவே

பாதை அமைத்தவரும்,

17தேர்களையும், குதிரைகளையும்,

படைவீரரையும், வலிமைமிக்கோரையும்

ஒன்றாகக் கூட்டி வந்தவரும்,

அவர்கள் எழாதவாறு விழச்செய்து,

திரிகளை அணைப்பதுபோல்

அவர்களை அழித்தவருமாகிய

ஆண்டவர் கூறுவது இதுவே.

18முன்பு நடந்தவற்றை மறந்து விடுங்கள்;

முற்கால நிகழ்ச்சிபற்றிச்

சிந்திக்காதிருங்கள்;

19இதோ புதுச்செயல் ஒன்றை

நான் செய்கிறேன்;

இப்பொழுதே அது தோன்றிவிட்டது;

நீ அதைக் கூர்ந்து கவனிக்கவில்லையா?

பாலைநிலத்தில் நான்

பாதை ஒன்று அமைப்பேன்;

பாழ்வெளியில் நீரோடைகளைத்

தோன்றச் செய்வேன்.

20காட்டு விலங்குகளும் என்னைப் புகழும்;

குள்ள நரிகளும், தீக்கோழிகளும்

என்னைப் பெருமைப்படுத்தும்;

ஏனெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட

என் மக்களுக்குப் பாலைநிலத்தில்

குடிக்கக் கொடுப்பேன்;

பாழ்நிலத்தில்

நீரோடைகள் தோன்றச் செய்வேன்.

21எனக்கென்று நான் உருவாக்கிய இந்த மக்கள்

என் புகழை எடுத்துரைப்பர்.

இஸ்ரயேலின் பாவம்

22ஆனால் யாக்கோபே,

நீ என்னை நோக்கி மன்றாடவில்லை;

இஸ்ரயேலே,

என்னைப் பற்றிச் சலிப்புற்றாயே!

23ஆடுகளை எரிபலிக்கென

நீ என்னிடம் கொண்டு வரவில்லை;

உன் பலிகளால் நீ என்னைப்

பெருமைப்படுத்தவில்லை;

உணவுப்படையல் படைக்குமாறு

நான் உங்களிடம் கேட்கவில்லை;

தூபம் காட்டுமாறு

உன்னை வற்புறுத்தவில்லை.

24பணம் கொடுத்து நீ எனக்கென்று

நறுமணப்படையல் வாங்கவில்லை;

உன் பலிகளின் கொழுப்பால்

என்னை நிறைவு செய்யவில்லை;

மாறாக, உன் பாவங்களால்

என்னைத் தொல்லைப்படுத்தினாய்;

உன் தீச்செயல்களால்

என்னைச் சலிப்புறச் செய்தாய்.

25நான், ஆம், நானே, உன் குற்றங்களை

என்பொருட்டுத் துடைத்தழிக்கின்றேன்;

உன் பாவங்களை

நினைவிற் கொள்ள மாட்டேன்.

26கடந்ததை எனக்குச் சொல்லிக் காட்டுங்கள்.

ஒருமிக்க நாம் வழக்காடுவோம்;

நீங்கள் குற்றமற்றவர்கள் என்பதை

நிலைநாட்டுவதற்கானவற்றை

எடுத்துரையுங்கள்.

27உன் முதல் தந்தை பாவம் செய்தான்;

உனக்காகப் பேசுவோரும்

எனக்கெதிராய்க் குற்றம் புரிந்துள்ளனர்.

28உன் தலைவர்கள் என் திருத்தூயகத்தைத்

தீட்டுப்படுத்தினார்கள்;

ஆதலால் யாக்கோபை அழிவுக்கும்

இஸ்ரயேலைப் பழிப்புரைக்கும்

உள்ளாக்கினேன்.

Pradeep Augustine Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks