எசாயா அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)
மோவாபின் நம்பிக்கையற்ற நிலை
1சீயோன் மகளின் மலையில்
நாட்டை ஆள்பவனுக்குச்
சேலா நகரிலிருந்து பாலைநிலம் வழியாகச்
செம்மறியாடு அனுப்புங்கள்.
2சிறகடித்து அலையும் பறவை போலும்
கூடு இழந்த குஞ்சுபோலும்
மோவாபிய மகளிர்
அர்னோன் துறைகளில் காணப்படுவர்.
3வாருங்கள்; அறிவுரை கூறுங்கள்;
நடுநிலையோடு நடந்துகொள்ளுங்கள்;
நண்பகலில் உங்கள் நிழலை
இரவு போலாக்கி,
விரட்டியடிக்கப்பட்டவர்களுக்கு
மறைத்து வையுங்கள்;
தப்பி ஓடுகிறவர்களைக்
காட்டிக் கொடுக்காதீர்கள்.
4மோவாபிலிருந்து துரத்தப்பட்டவர்கள்
உங்களிடமே தங்கியிருக்கட்டும்;
அழிக்க வருபவனின்
பார்வையிலிருந்து தப்ப
அவர்களுக்கு அடைக்கலமாய் இருங்கள்;
ஒடுக்குபவன் ஒழிந்து போவான்;
அழிவு ஓய்ந்து போகும்;
மிதிக்கிறவர்கள்
நாட்டில் இல்லாது போவர்.
5அப்பொழுது, ஆண்டவர் தம் பேரன்பால்
ஓர் அரியணையை அமைப்பார்;
அதன்மேல் தாவீதின் கூடாரத்தைச் சார்ந்த
ஒருவர் வீற்றிருப்பார்;
அவர் உண்மையுடன் ஆள்பவர்;
நீதியை நிலைநாட்டுபவர்;
நேர்மையானதைச் செய்ய விரைபவர்.
6மோவாபின் இறுமாப்பைப்பற்றி
நாங்கள் கேள்வியுற்றோம்;
அவன் ஆணவம் பெரிதே;
அவன் இறுமாப்பையும் ஆணவத்தையும்
செருக்கையும் குறித்துக்
கேள்விப்பட்டோம்.
அவன் தற்புகழ்ச்சிகள் யாவும் பொய்யுரையே.
7ஆதலால் மோவாபு அழுது புலம்பட்டும்;
மோவாபுக்காக யாவரும் கதறியழட்டும்;
கீர் அரசேத்தின்
திராட்சை அடைகளை நினைந்து,
நெஞ்சம் தளர்ந்து விம்மியழுங்கள்.
8எஸ்போனின் வயல்வெளி நிலங்கள்
வாடுகின்றன,
மக்களினங்களின் தலைவர்களை
விழத் தள்ளிய சிபிமானின்
திராட்சைத் தோட்டத்துக் கிளைகள்
அழிந்துவிட்டன.
அவை ஒருபுறம் யாசேரைத் தொட்டன;
பாலை நிலம்வரை படர்ந்திருந்தன;
அவற்றின் தளிர்கள் செழிப்புடன் வளர்ந்து
கடல்கடந்து படர்ந்து சென்றன.
9ஆதலால் யாசேருக்காக அழுததுபோல்
நான் சிபிமாவின்
திராட்சைத் தோட்டத்திற்காகக்
கண்ணீர் விடுகின்றேன்;
எஸ்போன்! எலயாரே! உங்களை
என் கண்ணீரால் நனைக்கின்றேன்;
ஏனெனில் உங்கள் கோடைக் கனிக்காகவும்
அறுவடைக்காகவும் எழும்
மகிழ்ச்சி ஆரவாரம் அடங்கி விட்டது.
10வளமான வயல் நிலங்களிலிருந்து
அக்களிப்பும் மகிழ்ச்சியும் அகற்றப்பட்டன.
திராட்சைத் தோட்டங்களில்
பாடல்கள் பாடுவார் யாருமில்லை;
ஆரவாரம் எழுப்புவார் எவருமில்லை.
இரசம் எடுப்பதற்கு ஆலையில்
திராட்சைக்கனி பிழிவாருமில்லை;
பழம் பிழிவாரின் பூரிப்பும்
இல்லாதொழிந்தது;
11ஆதலால், மோவாபுக்காக என் நெஞ்சமும்,
கீர்கேரசிற்காக என் இதயமும்
வீணையின் நரம்புபோல் துடிக்கின்றது;
12மோவாபியர் உயரமான
தொழுகை மேடுகளில்
வழிபாடு செய்து களைத்தும்,
திருத்தலங்களுக்குச் சென்று மன்றாடியும்
அவர்களுக்கு ஒன்றும் இயலாமற் போயிற்று.
13இதுவே கடந்த காலத்தில் மோவாபைக் குறித்து ஆண்டவர் கூறிய திருவாக்கு.
14ஆனால், இப்பொழுது ஆண்டவர் கூறுவது: கூலியாள் கணக்கிடுவதற்கு ஒப்ப, மூன்று ஆண்டுகளில், மோவாபு நாட்டில் திரளான மக்கள் கூட்டம் இருப்பினும், அதன் மேன்மை அழிவுறும்; ஒருசிலரே நாட்டில் எஞ்சியிருப்பர்; அவர்களும் வலிமை இழந்திருப்பர்.