back to top
HomeTamilலேவியர் அதிகாரம் - 14 - திருவிவிலியம்

லேவியர் அதிகாரம் – 14 – திருவிவிலியம்

லேவியர் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

தொழுநோய் கண்டபின் தூய்மை செய்தல்

1ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

2தொழுநோயாளியின் தீட்டகற்றும் நாளில் அவரைக் குறித்த சட்டம்; அவர் குருவிடம் அழைத்து வரப்பட வேண்டும். குரு பாளையத்திற்கு வெளியே வந்து, அவரைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.

3தொழுநோயாளியின் நோய் குணமாயிற்று எனக் குரு கண்டால்,

4தீட்டு அகற்றப்பட இருப்போரை உயிருள்ள, குறையற்ற இரு குருவிகளையும், ஒரு கேதுரு மரக்கட்டையையும், கருஞ்சிவப்பு நூலையும், ஈசோப்பையும் வாங்கி வருமாறு பணிப்பார்.

5மண்பாண்டத்தில் ஊற்றிய ஊற்று நீரில் குருவி ஒன்றின் கழுத்தை அறுப்பார்;

6உயிருள்ள குருவியையும், கேதுரு மரக்கட்டையையும், கருஞ்சிவப்பு நூலையும், ஈசோப்பையும் எடுத்து, இவை அனைத்தையும் உயிருள்ள குருவியையும் ஊற்று நீரில் கழுத்தறுக்கப்பட்ட குருவியின் குருதியில் தோய்ப்பார்;

7தொழுநோயால் ஏற்பட்ட தீட்டை அகற்றப்படவிருப்போரின் மீது ஏழுமுறை தெளித்து, அவரது தீட்டை அகற்றுமாறு உயிருள்ள குருவியைத் திறந்த வெளியில் விட்டுவிடுவார்.

8தீட்டு அகற்றப்படுவோர் தம் உடைகளைத் துவைத்து, தம் தலையை மழித்து நீராடியதும் தூய்மையாவார்; பின்பு, பாளையத்திற்குச் சென்று, ஏழு நாள் தம் கூடாரத்துக்கு வெளியே தங்கியிருப்பார்;

9ஏழாம் நாளில் தம் தலை, தாடி, புருவம், மற்றும் உரோமம் அனைத்தையும் மழுங்கச் சிரைத்துத் தம் உடலை நன்கு கழுவித் தூய்மையாவார்.

10எட்டாவது நாள், ஒரு வயது நிரம்பிய பழுதற்ற ஓர் ஆட்டையும் இரு கிடாய்க்குட்டிகளையும், இருபதுபடி* அளவில் பத்தில் மூன்று பங்கு மாவை எண்ணெயில் பிசைந்து தயாரித்த உணவுப் படையலையும் ஆழாக்கு எண்ணெயையும் கொண்டு வரவேண்டும்.

11தூய்மைப்படுத்தவிருக்கும் குரு தீட்டு அகற்றப்படவிருக்கும் மனிதரையும், பலிப் பொருள்களையும், சந்திப்புக்கூடார வாயிலுக்குக் கொண்டு வருவார்.

12பின்னர், குரு ஆழாக்கு எண்ணெயையும் கிடாய்க் குட்டிகளில் ஒன்றையும் குற்றம் நீக்கும் பலியாக ஒப்படைப்பார். ஆண்டவர் திருமுன் ஆரத்திப்பலியாக அவற்றைச் செலுத்துவார்.

13பாவம் போக்கும் பலிக்கும் எரிபலிக்கும் உரியவற்றை வெட்டும் தூய இடத்தில் கிடாய்க் குட்டியையும் வெட்டுவார். இந்தக் குற்றப்பழி நீக்கும்பலி பாவம் போக்கும் பலி போன்று குருவுக்கு உரியது. ஏனெனில், அது மிகவும் தூய்மையானது.

14குற்றம் நீக்கும் பலியின் குருதியில் குரு சிறிது எடுத்துத் தீட்டு அகற்றப்படவிருப்போரின் வலக்காது மடல், வலக்கைப் பெருவிரல், வலக்கால் பெருவிரல் ஆகியவற்றின் மீது பூசுவார்.

15பின்பு, குரு அந்த ஆழாக்கு எண்ணெயில் சிறிது தன் இடக்கையில் ஊற்றி,

16தன் வலக்கை விரலை அதில் தோய்த்து, ஏழு முறை அந்த எண்ணெயை ஆண்டவர் திருமுன் தெளிப்பார்.

17தன் கையில் எஞ்சியிருக்கும் எண்ணெயில் சிறிது எடுத்து, தீட்டு அகற்றப்படவிருப்போரின் வலக்காது மடல், வலக்கைப் பெருவிரல், வலக்கால் பெருவிரல் ஆகியவற்றின் முன்பு பூசிய குற்றப்பழி நீக்கும் பலிக்குருதியின் மீது அவர் பூசுவார்.

18பின்னர், அவர் தம் கையில் எஞ்சியிருக்கும் எண்ணெயைத் தீட்டு அகற்றப்படவிருப்போரின் தலையில் தடவி அவருக்காக ஆண்டவர் திருமுன் கறை நீக்கம் செய்வார்.

19பாவம் போக்கும் பலியைச் செலுத்தி, தீட்டகற்றப்பட இருப்போருக்குத் தீட்டு நீங்கக் கறை நீக்கம் செய்வார். பின்னர், எரிபலிக்குரியதை வெட்டுவார்.

20எரிபலியையும், உணவுப்படையலையும் பலிபீடத்தில் படைப்பார். இவ்வாறு, குரு கறைநீக்கம் செய்ய அந்த மனிதர் தூய்மையாவார்.

21இவற்றைச் செலுத்த இயலாத ஏழையாயிருந்தால் அவர் குற்றப்பழி நீக்கத்திற்கான ஆரத்திப் பலியாகவும், குறைநீக்கப் பலியாகவும் ஒரு கிடாய்க் குட்டியையும், உணவுப் பலியாக இருபது படி அளவில் மரக்காலில் பத்தில் ஒரு பங்கு மாவை எண்ணெயில் பிசைந்து தயாரித்த உணவுப்படையலையும் ஆழாக்கு எண்ணெயையும்

22தம் நிலைமைக்கேற்ப, இரு புறாக்களையோ, புறாக் குஞ்சுகளையோ கொண்டுவர வேண்டும். ஒன்று பாவம்போக்கும் பலி; மற்றது எரிபலி.

23அவற்றை அவர் எட்டாம் நாளில் சந்திப்புக்கூடார வாயிலில் ஆண்டவர் திருமுன் தம் தீட்டை அகற்றிக்கொள்வதற்காகக் கொண்டுவர வேண்டும்.

24குற்றப்பழி நீக்கும் கிடாய்க்குட்டியையும், ஆழாக்கு எண்ணெயையும் குரு வாங்கி, ஆண்டவர் திருமுன் ஆரத்திப்பலியாகக் காட்டுவார்.

25குற்றப்பழி நீக்கும் கிடாய்க்குட்டியை அடித்து அதன் இரத்தத்தில் சிறிது பிடித்துத் தீட்டு அகற்றப்படவிருப்போர் வலக்காது மடலிலும் வலக்கைப் பெருவிரலிலும் வலக்கால் பெருவிரலிலும் பூசுவார்.

26பின்னர், அவர் தம் இடக்கையில் சிறிது எண்ணெயை ஊற்றி,

27தம் வலக்கை விரலை அதில் தோய்த்து, ஏழுமுறை அந்த எண்ணெயை ஆண்டவர் திருமுன் தெளிப்பார்.

28தம் கையில் எஞ்சியிருக்கும் எண்ணெயில் சிறிது எடுத்து, தீட்டு அகற்றப்பட இருக்கிறவரின் வலக்காது மடல், வலக்கைப் பெருவிரல், வலக்கால் பெருவிரல் ஆகியவற்றில் முன்னர் பூசிய குற்றப்பழி நீக்கும் பலிக்குருதியின் மீது அவர் பூசுவார்.

29பின்னர், அவர் தம் கையில் எஞ்சியிருக்கும் எண்ணெயைத் தீட்டு அகற்றப்பட விருப்போரின் தலையில் தடவி அவருக்காக ஆண்டவர் திருமுன் கறைநீக்கம் செய்வார்.

30பின்னர், தீட்டு அகற்றப்படவிருப்போர் தம் நிலைமைக்குத் தக்கவாறு கொண்டுவந்த புறா எனினும் புறாக் குஞ்செனினும்,

31அவற்றில் ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும், மற்றதை எரிபலியாகவும் உணவுப் படையலோடு படைப்பார். இவ்வாறு, குரு தீட்டு அகற்றப்படுவோருக்கு ஆண்டவர் திருமுன் கறைநீக்கம் செய்வார்.

32தம்மைத் தூய்மையாக்கிக் கொள்ளப் போதுமானவற்றைக் கொண்டுவர இயலாத தொழுநோயாளிக்கு உரிய சட்டம் இதுவே.”

தொழுநோய் வீடு

33ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:

34உங்களுக்கு உடைமையாக நான் வழங்கும் கானான் நாட்டிற்கு நீங்கள் வந்த பின்னர், அங்குள்ள ஒரு வீட்டில் தொழுநோயை நான் வரச்செய்தால்,

35அந்த வீட்டின் உடைமையாளன், என் வீட்டில் நோய்க்கான அறிகுறி தென்படுகிறது எனக் குருவுக்கு அறிவிக்க வேண்டும்.

36குரு நோயைச் சோதித்துப் பார்க்கச் செல்லுமுன் வீட்டிலுள்ள அனைத்தையும் வெளியேற்றுமாறு கட்டளையிடுவார்; இல்லையேல் வீட்டிலுள்ள அனைத்தும் தீட்டெனக் கருதப்படும். பின்னர், நோயைச் சோதிப்பதற்காகக் குரு வீட்டினுள் நுழைவார்.

37அவர் நோய் பற்றியிருக்கும் இடத்தைப் பார்வையிடுவார். வீட்டுச் சுவர்களில் பச்சையும் சிவப்புமான கறை இருந்து, அப்பகுதி சுவர்ப்பரப்பை விடக் குழிவாயிருந்தால்,

38குரு வீட்டைவிட்டு வெளியே வந்து வாயிலை ஏழு நாள் அடைத்து வைப்பார்.

39ஏழாம் நாள் மீண்டும் வந்து சோதித்துப் பார்ப்பார். அங்கு நோய்க்குறி சுவர்களில் பரவக்கண்டால்,

40அந்த இடத்திலுள்ள கற்களைப் பெயர்த்து நகருக்கு வெளியே தீட்டான இடத்தில் போடப் பணிப்பார்.

41வீட்டின் உட்சுவரைச் செதுக்கி, செதுக்கப்பட்ட பூச்சுமண்ணை நகருக்கு வெளியே தீட்டான இடத்தில் கொட்டிவிட்டு,

42பெயர்த்த கற்களுக்குப் பதிலாக வேறு கற்களைக் கொண்டுவந்து வேறுமண்ணை எடுத்துப் பூசச் சொல்வார்.

43கற்களை மாற்றி, சுவரைக் கொத்திப் பூசிப் புதிதாக்கியபின்னர் அந்நோய் வீட்டில் மீண்டும் தென்பட்டால்,

44குரு வந்து பார்ப்பார். நோய் வீட்டில் இடம் பெற்றதெனில் அது வளரும் தொழுநோய். அது தீட்டு.

45எனவே, வீட்டை இடித்து, அதன் மரங்களையும் மண்ணையும் நகருக்கு வெளியே தீட்டான இடத்தில் கொட்ட வேண்டும்.

46வீடு அடைக்கப்பட்டிருந்த நாள்களில் அதனுள் செல்பவன் மாலைவரை தீட்டுள்ளவன்.

47வீட்டிலே படுத்திருந்தவனும், அவ்வீட்டில் உணவுண்டவனும், தங்கள் உடைகளை வெளுக்க வேண்டும்.

48குரு, வீடு பூசப்பட்டபின் மீண்டும் வந்து அங்கு நோய் பரவவில்லை எனக் கண்டால், அந்த வீடு தூயது என அறிவிப்பார். ஏனெனில், நோய் குணமாகிவிட்டது.

49வீட்டின் கறையை நீக்க, இரு குருவிகள், கேதுருக்கட்டை, சிவப்பு நூல், ஈசோப்பு ஆகியவற்றைக் குரு எடுப்பார்;

50ஒரு குருவியை மண்பாண்டத்திலுள்ள ஊற்று நீரில் கொல்வார்;

51கேதுருக் கட்டையையும், ஈசோப்பையும், சிவப்பு நூலையும், உயிருள்ள குருவியையும் கொல்லப்பட்ட அக்குருவியின் குருதியிலும் ஊற்று நீரிலும் தோய்த்து, வீட்டின் மேல் ஏழு தரம் தெளிப்பார்.

52குருவியின் குருதி, ஊற்று நீர், உயிருள்ள குருவி, கேதுருக்கட்டை, ஈசோப்பு, சிவப்பு நூல், இவற்றால் கறை நீக்கம் செய்வார்.

53உயிருள்ள குருவியைக் குடியிருப்புக்கு வெளியே மைதானத்தில் விட்டு விடவேண்டும். இவ்வாறு, வீட்டிற்கான கறை நீக்கம் செய்ததும் அது தூய்மையாகும்.

54இது அனைத்துத் தொழுநோய்க்கும், சொறிக்கும்

55உடைப் பத்துக்கும், வீட்டு நோய்க்கும்

56வீக்கம், சிரங்கு, வெள்ளைமறு ஆகியவற்றிற்கான சட்டம்.

57எப்போது தீட்டு, எப்போது தூய்மை என முடிவு செய்வதற்குரிய தொழு நோய்க்கான சட்டமும் அதுவே.”


14:2 மத் 8:4; மாற் 1:44; லூக் 5:14; 17:14.


14:10 ‘லாகு’ என்பது எபிரேய பாடம்.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks