back to top
HomeTamilலேவியர் அதிகாரம் - 7 - திருவிவிலியம்

லேவியர் அதிகாரம் – 7 – திருவிவிலியம்

லேவியர் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1குற்றப்பழி நீக்கும் பலிபற்றிய கட்டளை இதுவே; அது மிகத்தூயது.

2எரிபலி அடிக்கப்படும் இடத்திலேயே குற்றப்பழி நீக்கும் பலியும் அடிக்கப்படவேண்டும். அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கவேண்டும்.

3அதன் கொழுப்பு முழுவதையும், அதன் கொழுப்பு வாலையும் குடல்களை மூடிய கொழுப்பையும்,

4இரு சிறுநீரகங்களையும் அவற்றின்மேல் குடல்களோடு சேர்ந்திருக்கிற கொழுப்பையும் சிறுநீரகங்களோடு கல்லீரலின் மேல் இருக்கிற சவ்வையும் எடுத்து,

5இவற்றைக் குரு பலிபீடத்தின்மேல் ஆண்டவருக்கு நெருப்புப்பலி ஆக்கவேண்டும். அது குற்றப்பழி நீக்கும் பலி.

6குருக்களில் ஆண்மக்கள் யாவரும் அதை உண்பர். அதைத் தூய தலத்தில் உண்ண வேண்டும். அது மிகத் தூயது.

7பாவம் போக்கும் பலியைப் போன்றதே குற்றப்பழி நீக்கும் பலியும். அவற்றிற்குரிய சட்டம் ஒன்றே. அது கறை நீக்கம் செய்யும் குருவுக்கே உரியது.

8ஒருவர் செலுத்தும் எரிபலியின் தோல் அப்பலியைச் செலுத்தும் குருவுக்கே உரியது.

9அடுப்பில் சுட்டதும், பொரிக்கும் சட்டியிலும் தட்டையான சட்டியிலும் தயாரித்ததுமான உணவுப் படையல் அனைத்தும் அதைச் செலுத்துகிற குருவுக்கே உரியவை.

10எண்ணெயில் பிசைந்ததும் பிசையாததுமான உணவுப்படையல் அனைத்தும் ஆரோனின் புதல்வர் யாவருக்கும் சரிபங்காகச் சேரும்.

நல்லுறவுக் காணிக்கைகள்

11ஆண்டவருக்கு ஒருவர் செலுத்தும் நல்லுறவுப் பலிபற்றிய சட்டம் இதுவே;

12அவர் அதை நன்றிக் கடனாகச் செலுத்தினால் எண்ணெயில் தோய்த்த நெய்யப்பங்கள், எண்ணெய் பூசிய புளிப்பற்ற அடைகள், மெல்லிய மாவினால் எண்ணெயில் நன்கு பிசைந்து செய்த நெய்யப்பங்கள் ஆகியவற்றை நன்றிப் பலியோடு கொண்டுவர வேண்டும்.

13புளித்த மாவினால் செய்த நெய்யப்பங்களை நன்றிக்கடனாகச் செலுத்தும் நல்லுறவுப் பலியைத் தமது நேர்ச்சையாக அவர் கொண்டுவருவார்.

14ஒவ்வொரு காணிக்கையிலும் ஒன்றை எடுத்து, ஆண்டவருக்குரிய பங்காகப் படைக்க வேண்டும். இப்பொருள்கள் நல்லுறவுப் பலியின் இரத்தத்தைத் தெளிக்கும் குருவுக்கே உரியவை.

15நன்றிக் கடனாகச் செலுத்தும் நல்லுறவுப் பலியின் இறைச்சி படைக்கப்படும் நாளில் உண்ணப்படவேண்டும். விடியுமட்டும் அதில் எதையும் மீதி வைக்கலாகாது.

16அவர் செலுத்தும் நேர்ச்சைப் பலி ஒரு பொருத்தனையாகவோ தன்னார்வப்பலியாகவோ இருந்தால், அதைப் படைக்கும் நாளிலும் எஞ்சியதை மறுநாளிலும் உண்ணலாம்.

17பலி இறைச்சியில் எஞ்சியிருப்பதெல்லாம் மூன்றாம் நாளில் நெருப்பால் எரிக்கப்பட வேண்டும்.

18நல்லுறவுப்பலி இறைச்சியில் எஞ்சியதை மூன்றாம் நாளில் உண்பது உகந்ததன்று. அதைச் செலுத்தினவருக்கும் அது பயன் அளிக்காது. அது அருவருப்பானது. அதை உண்பவர் தம் குற்றபழியைச் சுமப்பார்.

19தீட்டான எந்தப் பொருளிலாவது அந்த இறைச்சி பட நேர்ந்தால் அதை உண்ணலாகாது. அதை நெருப்பில் எரிக்க வேண்டும். மற்ற இறைச்சியையோ தூய்மையாய் இருக்கிறவர் எவரும் உண்ணலாம்.

20தீட்டுப்பட்ட ஒருவர் ஆண்டவரின் நல்லுறவுப் பலியின் இறைச்சியை உண்பாராகில், அவர் தம் இனத்தாரிலிருந்து விலக்கப்பட்டவர் ஆவார்.

21தீட்டான எதையும் – தீட்டுப்பட்ட மனிதரையோ கால்நடையையோ, தீட்டான ஊர்வனவற்றையோ – ஒருவர் தீண்டியவராக இருந்து ஆண்டவருக்குப் படைக்கும் நல்லுறவுப்பலி இறைச்சியை உண்டால், அவர் தம் இனத்தாரிலிருந்து விலக்கப்பட்டவர் ஆவார்.

22ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:

23நீ இஸ்ரயேல் மக்களிடம், “மாடு, ஆடு, வெள்ளாடு இவற்றின் கொழுப்பை நீங்கள் உண்ணலாகாது.

24தானாய்ச் செத்ததின் கொழுப்பையும், பீறுண்டதின் கொழுப்பையும் வேறு செயல்களுக்குப் பயன்படுத்தலாமேயன்றி நீங்கள் அதை ஒருபோதும் உண்ணலாகாது.

25ஏனெனில், ஆண்டவருக்கு நெருப்புப்பலியாகப் படைக்கும் கால்நடையின் கொழுப்பை உண்கிற எவரும் தம் இனத்தாரிலிருந்து விலக்கப்பட்டவர் ஆவார்.

26உங்கள் குடியிருப்புகள் எங்கும், பறவையின் இரத்தத்தையோ கால்நடைகளின் இரத்தத்தையோ, வேறு எந்த இரத்தத்தையுமோ உண்ணலாகாது.

27இரத்தத்தை உண்ணும் எவரும் தம் இனத்தாரிலிருந்து விலக்கப்பட்டவர் ஆவார்” என்று சொல்.

28ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது;

29நீ இஸ்ரயேல் மக்களிடம், “ஆண்டவருக்கு நல்லுறவுப் பலி செலுத்துபவர், தாம் செலுத்தும் நல்லுறவுப் பலியிலிருந்து ஆண்டவருக்குரிய நேர்ச்சையைக் கொண்டுவர வேண்டும்.

30ஆண்டவருக்குரிய நெருப்புப் பலியை அவரே கொண்டு வரவேண்டும். நெஞ்சுக் கறியையும் அதனோடு அதன் மேலுள்ள கொழுப்பையும் ஆண்டவரின் திருமுன் ஆரத்திப் பலியாகக் கொண்டு வர வேண்டும்.

31குரு அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தில் எரிப்பார். நெஞ்சுக் கறியோ ஆரோனுக்கும் அவன் புதல்வர்க்கும் உரியதாகும்.

32நல்லுறவுப் பலிகளில் வலது பின்னந்தொடையைக் குருவிடம் பங்காகக் கொடுக்க வேண்டும்.

33ஆரோனின் புதல்வருள் நல்லுறவுப் பலியின் இரத்தத்தையும், கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு வலது பின்னந்தொடை பங்காகச் சேரும்.

34நல்லுறவுப் பலிகளில் ஆரத்திப் பலியாகிய நெஞ்சுக் கறியையும் பங்காகிய பின்னந்தொடையையும் நான் இஸ்ரயேல் மக்களிடமிருந்து எடுத்து குருவாகிய ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் கொடுத்துள்ளேன். இது இஸ்ரயேல் மக்களிடமிருந்து பெறும் நிலையான பங்காகும்” என்று சொல்.

35ஆரோனும் அவன் புதல்வரும் ஆண்டவர்க்குரிய குருக்களாகும்படி அழைத்து வரப்பட்ட நாளிலிருந்து இது ஆண்டவரின் நெருப்புப் பலியிலிருந்து அவர்களுக்கென அர்ப்பணிக்கப்பட்ட பங்காகும்.

36ஆண்டவர் அவர்களுக்கு அருள்பொழிவு செய்த நாளில், அவர்கள் தலைமுறைதோறும் அவர்களுக்கு மாறாத பங்காகக் கொடுக்கக் கட்டளையிட்டார்.

37எரிபலி, உணவுப் படையல், பாவம் போக்கும் பலி, குற்றப்பழி நீக்கும் பலி, திருநிலைப்படுத்தும் பலி, நல்லுறவுப் பலி ஆகிய பலிகளைப்பற்றிய சட்டம் இதுவே.

38தமக்குச் செலுத்த வேண்டிய நேர்ச்சைகளைப் பற்றி ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்குச் சீனாய்ப் பாலைநிலத்தில் கட்டளையிட்ட நாளில் மோசேக்கு அவர் சீனாய் மலையில் இட்ட கட்டளைகள் இவையே.


7:26-27 தொநூ 9:4; லேவி 17:10 14; 19:26; இச 12:16,23; 15:23.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks