back to top
HomeTamil1 அரசர்கள் அதிகாரம் - 3 - திருவிவிலியம்

1 அரசர்கள் அதிகாரம் – 3 – திருவிவிலியம்

1 அரசர்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

சாலமோன் ஞானத்திற்காக மன்றாடல்
(2 குறி 1:3-12)

1பின்னர், சாலமோன் எகிப்து மன்னனான பார்வோனின் மகளை மணந்து, பார்வோனுடன் உடன்பாடு செய்துகொண்டார். மேலும் தம் அரண்மனை, ஆண்டவர் இல்லம், எருசலேமின் சுற்றுமதில் ஆகியவற்றைக் கட்டி முடிக்கும் வரை அவளைத் தாவீதின் நகரில் தங்கியிருக்கச் செய்தார்.

2அந்நாள் வரை ஆண்டவரின் பெயருக்குக் கோவில் எழுப்பப்படவில்லை. எனவே, மக்கள் தொழுகை மேடுகளில் பலியிட்டு வந்தார்கள்.

3ஆண்டவர்மீது சாலமோன் அன்பு கொண்டு, தம் தந்தையான தாவீது விதித்த நியமங்களின்படி நடந்து வந்தார். ஆனால், அவரும் தொழுகை மேடுகளில் பலியிட்டுத் தூபம் காட்டி வந்தார்.

4ஒருநாள் அரசர் பலி செலுத்துமாறு கிபயோனுக்குச் சென்றார். அங்கேதான் மிக முக்கியமான தொழுகைமேடு இருந்தது. அங்கிருந்த பலிபீடத்தின் மேல்தான் சாலமோன் ஆயிரம் எரிபலிகளைச் செலுத்தியிருந்தார்.

5அன்றிரவு கிபயோனில் ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றினார். “உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!” என்று கடவுள் கேட்டார்.

6அதற்குச் சாலமோன், “உம் அடியாராகிய என் தந்தை தாவீது உமது பார்வையில் உண்மையுடனும் நீதியுடனும் நேரிய உள்ளத்துடனும் நடந்து கொண்டார். அதனால் நீர் அவருக்குப் பேரன்பு காட்டினீர். அந்தப் பேரன்பை அவருக்கு என்றும் காட்டி வந்து, இன்று அவரது அரியணையில் வீற்றிருக்கும் மகனை அவருக்குத் தந்தீர்.

7என் கடவுளாகிய ஆண்டவரே, நீர் அடியேனை என் தந்தை தாவீதுக்குப் பதிலாக அரசனாக்கியுள்ளீர். நான் செய்வதறியாத சிறு பிள்ளை.

8இதோ! உமக்கென நீர் தெரிந்து கொண்ட திரளான மக்களிடையே அடியேன் இருக்கிறேன். அவர்கள் எண்ணிக் கணிக்க முடியாத மாபெரும் தொகையினர்.

9எனவே, உம் மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும். இல்லாவிடில், உமக்குரிய இம்மாபெரும் மக்கள் இனத்திற்கு நீதி வழங்க யாரால் இயலும்?” என்று கேட்டார்.

10சாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது.

11கடவுள் அவரிடம், “நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய்.

12இதோ! நான் இப்பொழுது நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதுமில்லை.

13அந்த அளவுக்கு ஞானமும் பகுத்தறிவும் நிறைந்த உள்ளத்தை உனக்கு வழங்குகிறேன். இன்னும் நீ கேளாத செல்வத்தையும் புகழையும் உனக்குத் தருவேன். ஆகையால், உன் வாழ்நாள் முழுவதிலும் உனக்கு இணையான அரசன் எவனும் இரான்.

14மேலும், உன் தந்தை தாவீதைப் போல் நீயும் என் வழிகளில் நடந்து, என் நியமங்களையும் விதிமுறைகளையும் கடைப்பிடித்து வந்தால் உனக்கு நீண்ட ஆயுளையும் வழங்குவேன்” என்றார்.

15சாலமோன் கனவினின்று விழித்தெழுந்தார். பின்னர், எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்று ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையின்முன் நின்று எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தினார். பின் தம் அலுவலர் அனைவருக்கும் பெரும் விருந்து அளித்தார்.

சாலமோனின் ஞானமிகு தீர்ப்பு

16ஒரு நாள், இரு விலைமாதர் அரசர் முன்னிலையில் வந்து நின்றனர்.

17அவர்களுள் ஒருத்தி, “என் தலைவரே! இந்தப் பெண்ணும் நானும் ஒரே வீட்டில் குடியிருக்கிறோம். அந்த வீட்டில் அவள் என்னுடன் இருந்தபோது நான் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தேன்.

18என் குழந்தை பிறந்து மூன்று நாள் ஆன பின், அவளும் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்த வீட்டில் எங்கள் இருவரைத் தவிர வேறு யாரும் இல்லை.

19இவள் இரவில் தூங்கும்போது தன் மகன் மீது புரண்டுவிட்டதால் அவன் இறந்துபோனான்.

20அவள் நள்ளிரவில் எழுந்து, உம் பணிப்பெண்ணாகிய நான் தூங்கிக் கொண்டிருக்கையில், என்னருகில் கிடந்த என் மகனை எடுத்துத் தன் நெஞ்சருகில் வைத்துக்கொண்டு, இறந்துவிட்ட தன் மகனை என் நெஞ்சருகில் கிடத்திவிட்டாள்.

21விடியற்காலையில் பிள்ளைக்குப் பால் கொடுக்க நான் எழுந்தபோது, ஐயோ! அது செத்துக் கிடந்தது. சற்று விடிந்தபின் பிள்ளையை உற்று பார்த்தபோது, அது நான் பெற்ற பிள்ளை அல்ல என்று கண்டேன்” என்றாள்.

22இதைக் கேட்ட மற்றவளோ, “இல்லை! உயிரோடிருப்பதே என் பிள்ளை. செத்துப் போனது உன் பிள்ளை” என்றாள். முதல் பெண்ணோ, “இல்லை! செத்த பிள்ளைதான் உன்னுடையது. உயிரோடிருக்கும் பிள்ளை என்னுடையது” என்றாள். இவ்வாறு அரசர்முன் அவர்கள் வாதாடினர்.

23அப்பொழுது அரசர், “என்ன இது? ஒருத்தி, ‘உயிரோடு இருக்கிற இவன் என் மகன்; செத்துவிட்டவன் உன் மகன்’ என்கிறாள். மற்றவளோ ‘இல்லை! செத்துவிட்டவன் உன் மகன்; உயிரோடு இருக்கிறவன் என் மகன்’ என்கிறாள்” என்றார்.

24பின்னர் அரசர், “ஒரு வாளைக் கொண்டு வாருங்கள்” என்றார்.

25அவ்வாறே அவர்கள் அரசரிடம் ஒரு வாள் கொண்டு வந்தனர். பிறகு அரசர், “உயிரோடிருக்கும் குழந்தையை இரண்டாக வெட்டி, ஒரு பாதியை ஒருத்தியிடமும் மறு பாதியை மற்றொருத்தியிடமும் கொடுங்கள்” என்றார்.

26உடனே, உயிரோடிருந்த பிள்ளையின் தாய் தன் மகனுக்காக நெஞ்சம் பதறி அரசரிடம், “வேண்டாம் என் தலைவரே! கொல்ல வேண்டாம். உயிரோடிருக்கும் குழந்தையை அவளிடமே கொடுத்து விடுங்கள்” என்று வேண்டினாள். மற்றவளோ, “அது எனக்கும் வேண்டாம்; உனக்கும் வேண்டாம்; அதை இரண்டாக வெட்டுங்கள்” என்றாள்.

27உடனே அரசர், “உயிரோடிருக்கும் அந்தக் குழந்தையைக் கொல்ல வேண்டாம். முதல் பெண்ணிடமே கொடுங்கள். அவள்தான் அதன் தாய்” என்று முடிவு கூறினார்.

28அரசர் அளித்த தீர்ப்பைப் பற்றி இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் கேள்விப்பட்டனர். நீதித் தீர்ப்பு வழங்குவதற்கெனக் கடவுள் அருளிய ஞானம் அவரிடம் உள்ளது என்று கண்டு, அவருக்கு அஞ்சி நடந்தனர்.

Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks