back to top
HomeTamil2 அரசர்கள் அதிகாரம் - 1 - திருவிவிலியம்

2 அரசர்கள் அதிகாரம் – 1 – திருவிவிலியம்

2 அரசர்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

எலியாவும் அரசன் அகசியாவும்

1ஆகாபு இறந்தபின் மோவாபியர் இஸ்ரயேலுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.

2அப்பொழுது அகசியா சமாரியாவில் தன் மேல் மாடியிலிருந்து பலகணி வழியாய்க் கீழே விழுந்து காயமுற்றான். எனவே, அவன் தூதரிடம், “நீங்கள் எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் சென்று, ‘இக்காயம் எனக்குக் குணமாகுமா?’ என்று கேட்டு வாருங்கள்” என்று சொல்லி அனுப்பினான்.

3ஆனால், ஆண்டவரின் தூதர் திஸ்பேயைச் சார்ந்த எலியாவிடம், “நீ புறப்பட்டுச் சமாரிய அரசனின் தூதரைச் சந்தித்து அவர்களிடம், ‘இஸ்ரயேலுக்குக் கடவுள் இல்லை என்றா, எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் நீங்கள் குறிகேட்கப்போகிறீர்கள்? எனவே, ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:

4நீ கிடக்கும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டாய்; அங்கேயே செத்துப் போவாய்; இது உறுதி! என்று சொல்” என்றார். அவ்வாறே எலியா புறப்பட்டுப் போனார்.

5திரும்பி வந்த தூதரை நோக்கி, அரசன், “ஏன் திரும்பி வந்துவிட்டீர்கள்?” என்று அவர்களைக் கேட்டான்.

6அதற்கு அவர்கள் மறுமொழியாக, “வழியில் ஓர் ஆள் எங்களைச் சந்தித்து, ‘நீங்கள் உங்களை அனுப்பின அரசனிடம் போய், ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேலுக்குக் கடவுள் இல்லை என்றா, நீ எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் குறிகேட்க ஆள் அனுப்புகிறாய்? நீ கிடக்கும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டாய்; அங்கேயே செத்துப் போவாய்; இது உறுதி! என்று சொல்லுங்கள்’ என்றார்” என்று கூறினர்.

7அவன் அவர்களிடம், “உங்களைச் சந்திக்க வந்து உங்களிடம் இவற்றை அறிவித்த ஆள் எப்படி இருந்தான்?” என்று கேட்டான்.

8அவனுக்கு அவர்கள் மறுமொழியாக, “அவர் மயிரடர்ந்த மனிதர்; இடையில் தோற்கச்சை அணிந்திருந்தார்” என்றனர். அப்பொழுது அவன், “அந்த ஆள் திஸ்பேயைச் சார்ந்த எலியாதான்!” என்றான்.

9உடனே அரசன் ஐம்பதின்மர் தலைவன் ஒருவனை அவனுடைய ஐம்பது வீரரோடு அவரிடம் அனுப்பினான். தலைவனும் சென்று, ஒரு மலையின் உச்சியில் அமர்ந்திருந்த எலியாவைக் கண்டு அவரிடம், “கடவுளின் அடியவரே! கீழே இறங்கி வாரும்; இது அரச கட்டளை!” என்றான்.

10எலியா ஐம்பதின்மர் தலைவனுக்கு மறுமொழியாக, “நான் உண்மையாகவே கடவுளின் அடியவனாய் இருந்தால், வானினின்று நெருப்பு இறங்கி வந்து உன்னையும் உன்னோடு இருக்கும் ஐம்பது பேரையும் சுட்டெரிக்கும்!” என்றார். உடனே வானினின்று நெருப்பு இறங்கி வந்து அவனையும் அவனோடிருந்த ஐம்பது பேரையும் சுட்டெரித்தது.

11அகசியா மீண்டும் வேறொரு தலைவனை அவனுடைய வீரரோடு அனுப்பினான். அத்தலைவனும் மேலேறிச் சென்று* எலியாவிடம், “கடவுளின் அடியவரே! விரைவாய் கீழே இறங்கி வாரும்; இது அரச கட்டளை!” என்றான்.

12எலியா மறுமொழியாக, “நான் உண்மையாகவே கடவுளின் அடியவனாய் இருந்தால், வானினின்று நெருப்பு இறங்கி வந்து உன்னையும் உன்னோடு இருக்கும் ஐம்பது பேரையும் சுட்டெரிக்கட்டும்!” என்றார். உடனே வானினின்று நெருப்பு இறங்கிவந்து, அவனையும் அவனோடிருந்த ஐம்பது பேரையும் சுட்டெரித்தது.

13அகசியா மூன்றாம் முறையாகத் தலைவன் ஒருவனை அவனுடைய ஐம்பது வீரரோடு அனுப்பினான். மூன்றாம் தலைவனும் மேலேறிச் சென்று, எலியாவின் முன் முழந்தாளிட்டு, “கடவுளின் அடியவரே! என் உயிரையும், உம் அடியாராகிய இந்த ஐம்பதின்மர் உயிரையும் காத்தருளும்!

14வானினின்று நெருப்பு இறங்கி வந்து, முன்னைய ஐம்பதின்மர் தலைவர் இருவரையும் அவரவருடைய ஐம்பது வீரர்களையும் சுட்டெரித்து விட்டது. எனவே, இப்பொழுது என் உயிரைக் காத்தருளும்!” என்று மன்றாடினான்.

15அப்பொழுது ஆண்டவரின் தூதர் எலியாவிடம், “அவனோடு இறங்கிச் செல். அவனுக்கு அஞ்ச வேண்டாம்” என்றார். எனவே, எலியா எழுந்து அரசனைப் பார்க்க அவனோடு இறங்கிச் சென்றார்.

16அவர் அரசனை நோக்கி, “ஆண்டவர் கூறுவது இதுவே: இறை உளத்தைத் தெரிந்துகொள்ள இஸ்ரயேலுக்குக் கடவுள் இல்லை என்றா, நீ எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் தூதரை அனுப்பினாய்? எனவே, நீ கிடக்கும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டாய்; அங்கேயே செத்துப்போவாய்; இது உறுதி!” என்றார்.

17எனவே, எலியா வாயிலாக அறிவிக்கப்பட்ட ஆண்டவரது வாக்கிற்கேற்ப, அகசியா இறந்தான். அவனுக்குப் புதல்வர் இல்லாமையால், அவனுக்குப் பின் யோராம்* அரசன் ஆனான். இது யூதா அரசன் யோசபாத்தின் மகன் யோராமின் இரண்டாம் ஆட்சி ஆண்டில் நிகழ்ந்தது.

18அகசியாவின் ஆட்சியைப் பற்றிய பிற செய்திகளும், அவனுடைய பிற செயல்களும், ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?


1:8 மத் 3:4; மாற் 1:6.
1:10-12 லூக் 9:34.


1:11 ‘மறுமொழி கூறி’ என்பது எபிரேய பாடம்.
1:17 யோராம் அகசியாவின் சகோதரன்.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks