back to top
HomeTamil2 அரசர்கள் அதிகாரம் - 6 - திருவிவிலியம்

2 அரசர்கள் அதிகாரம் – 6 – திருவிவிலியம்

2 அரசர்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

கோடரியை மீட்டல்

1ஒரு நாள் இறைவாக்கினர் குழுவினர் எலிசாவை நோக்கி, “உம்மோடு நாங்கள் வாழும் இந்த இடம் மிகக் குறுகியதாய் உள்ளது.

2எனவே, நாங்கள் யோர்தானுக்குச் சென்று ஆளுக்கொரு உத்திரம் கொண்டு வந்து வீடொன்று கட்டி அதில் குடிபுகுவோம்” என்றனர். அதற்கு அவர், “போய், வாருங்கள்” என்றார்.

3அவர்களில் ஒருவன், “நீரும் உம் அடியாராகிய எம்மோடு வாரும்” என்று அழைத்தான். “நானும் வருகிறேன்” என்று அவர் கூறினார்.

4எனவே, அவரும் அவர்களுடன் யோர்தானுக்குச் சென்றார்.

5அவர்கள் மரங்களை வெட்டி வீழ்த்தினர். அவ்வாறு ஒருவன் உத்திரம் வெட்டிக்கொண்டிருந்தபோது அவனது கோடரி கழன்று தண்ணீரில் விழுந்தது. உடனே அவன் “ஐயோ! என் தலைவரே, இது இரவல் பொருளாயிற்றே!” என்று கத்தினான்.

6அப்போது கடவுளின் அடியவர், “அது எங்கு வீழ்ந்தது” என்று கேட்டார். அவனும் அந்த இடத்தைக் காட்டினான். உடனே எலிசா ஒரு கம்பை வெட்டி அங்கு எறியவே கோடரியும் மிதக்கத் தொடங்கியது.

7அவர் “அதை எடுத்துக் கொள்” என்று அவனிடம் கூற, அவனும் கை நீட்டி அதை எடுத்துக் கொண்டான்.

சிரியாவின் படை தோல்வியுறல்

8சிரியாவின் மன்னன் இஸ்ரயேல் நாட்டின் மீது போர் தொடுத்தான். அப்பொழுது அவன் தன் அலுவலரோடு கலந்து பேசி, “இந்த இடத்தில் பாளையம் இறங்குவோம்” என்றான்.

9அப்பொழுது கடவுளின் அடியவர் இஸ்ரயேல் அரசனிடம் ஆளனுப்பி, “அந்த இடத்திற்குப் போகாமல் எச்சரிக்கையாயிரும், ஏனெனில், அங்கே சிரியர் பதுங்கி இருக்கின்றனர்” என்று சொல்லச் சொன்னார்.

10இஸ்ரயேல் அரசன் கடவுளின் அடியவர் எச்சரித்துக் குறிப்பிட்ட ஒவ்வோர் இடத்திற்கும் ஆளனுப்பினான். இவ்வாறு, அவன் தன்னைக் காத்துக் கொண்டது ஒருமுறை, இருமுறை அல்ல.

11இதன் பொருட்டுச் சிரியாவின் அரசன், நெஞ்சம் கொதித்துத் தன் பணியாளர்களைக் கூப்பிட்டு, “இஸ்ரயேல் அரசனுக்கு ஒற்றனாக நம்மிடையே ஒருவன் இருக்கின்றான். அவன் யாரென்று தெரிய வேண்டும்” என்றான்.

12பணியாளருள் ஒருவன் அவனை நோக்கி, “என் தலைவரான அரசே! அப்படி ஒருவனும் இங்கில்லை. ஆனால், இஸ்ரயேலில் இருக்கும் எலிசா என்ற இறைவாக்கினர் தாங்கள் பள்ளியறையில் பேசுவதைக்கூடத் தம் அரசனுக்கு வெளிப்படுத்தி விடுகிறார்” என்றான்.

13அதற்கு அரசன், “நீங்கள் போய், அவர் எங்கு இருக்கிறார் என்று பார்த்து வாருங்கள். நான் ஆள்களை அனுப்பி அவரைப் பிடிக்கச் செய்வேன்” என்றான். ‘அவர் தோத்தானில் இருக்கிறார்’ என்று தெரிவிக்கப்பட்டது.

14ஆதலால், அரசன் அங்குக் குதிரைகளையும், தேர்களையும் பெரிய படையையும் அனுப்பினான். அவர்கள் இரவோடு இரவாக வந்து நகரைச் சூழ்ந்து கொண்டனர்.

15கடவுளுடைய அடியவரின் வேலைக்காரன் வைகறையில் எழுந்து வெளியே வந்தான். அப்பொழுது படைகளும், குதிரைகளும், தேர்களும் நகரைச் சூழ்ந்திருக்கக் கண்டு, “ஐயோ! என் தலைவரே, என்ன செய்வோம்?” என்று கதறினான்.

16அதற்கு அவர், “அஞ்ச வேண்டாம். அவர்களோடு இருப்பவர்களைவிட நம்மோடு இருப்பவர்கள் அதிகம்” என்றார்.

17பின்பு எலிசா, “ஆண்டவரே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும்!” என்று வேண்டினார். ஆண்டவர் அவ்விதமே வேலைக்காரனின் கண்களைத் திறந்தார். இதோ! மலை எங்கணும் நெருப்புக் குதிரைகளும், தேர்களும் எலிசாவைச் சூழ்ந்து நிற்பதைக் கண்டான்.

18சிரியா நாட்டினர் அவரை நெருங்கி வந்த பொழுது, எலிசா ஆண்டவரை நோக்கி, “இவ்வினத்தாரைக் குருடாக்கியருளும்” என்று மன்றாடினார். உடனே ஆண்டவர் எலிசாவின் மன்றாட்டுக்கு இணங்கி அவர்களைக் குருடாக்கினார்.

19அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி, “இது நீங்கள் செல்ல வேண்டிய பாதையுமல்ல, நகருமல்ல. என்னைப் பின் தொடருங்கள். நீங்கள் தேடும் மனிதனிடம் நான் உங்களை அழைத்துச் செல்வேன்” என்று சொல்லி அவர்களைச் சமாரியாவிற்கு அழைத்துச் சென்றார்.

20அவர்கள் அந்நகருக்குள் நுழைந்ததும் எலிசா, “ஆண்டவரே! இவர்கள் பார்வை பெறும்படி இவர்கள் கண்களைத் திறந்தருளும்!” என்றார். ஆண்டவர் அவர்கள் கண்களைத் திறக்கவே, சமாரிய நகரின் நடுவில் தாங்கள் இருப்பதை அவர்கள் கண்டனர்.

21இஸ்ரயேல் அரசன் அவர்களைக் கண்டவுடன் எலிசாவை நோக்கி, “என் தந்தையே! இவர்களை நான் வெட்டி வீழ்த்தட்டுமா?” என்றான்.

22அதற்கு அவர், “கொல்லாதே! நீ சிறைப்படுத்தியவர்களை நீயே உன் வாளினாலோ அம்பினாலோ கொல்வாயா? எனவே, அவர்கள் பசிதாகம் தீர அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடு. அவர்கள் தங்கள் தலைவனிடம் திரும்பிச் செல்லட்டும்” என்றார்.

23அவ்வாறே, அரசன் அவர்களுக்குப் பெரிய விருந்தளித்தான். அவர்களும் உண்டு குடித்தனர். பின்னர், அவன் அவர்களை அனுப்பி வைத்தான். அவர்களும் தங்கள் தலைவனிடம் திரும்பிச் சென்றனர். அதன்பின் சிரியாக் கொள்ளைக் கூட்டத்தினர் இஸ்ரயேல் நாட்டுக்குள் காலெடுத்து வைக்கவில்லை.

சமாரியா முற்றுகையிடப்படுதல்

24பின்னர், சிரியா மன்னன் பெனதாது தன் முழுப் படையையும் திரட்டிக் கொண்டு சமாரியாவுக்குச் சென்று அதை முற்றுகையிட்டான்.

25எனவே, சமாரியாவில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. ஒரு கழுதைத் தலை, எண்பது வெள்ளிக் காசுக்கும், புறாவின் எச்சம் கால்படி ஐந்து வெள்ளிக் காசுக்கும் விற்கும் அளவுக்கு முற்றுகை கடுமையாய் இருந்தது.

26இஸ்ரயேலின் அரசன் நகர மதில்மேல் நடந்து செல்கையில் ஒரு பெண், “அரசே, என் தலைவரே! என்னைக் காப்பாற்றும்!” என்று கூக்குரலிட்டாள்.

27அதற்கு அவன், “ஆண்டவரே, உன்னைக் காப்பாற்றவில்லையெனில், நான் எப்படி உன்னைக் காப்பாற்றுவது? களஞ்சியத்திலிருந்தா? ஆலையிலிருந்தா?” என்றான்.

28பின்னும், அரசன் அவளிடம், “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான். அதற்கு அவள், “இதோ! ஒரு நாள் இந்தப் பெண் என்னை நோக்கி, ‘இன்று நாம் உண்பதற்கு உன் மகனைக் கொடு; நாளை என் மகனைத் தின்போம்’ என்றாள்,

29அவ்வாறே, நாங்கள் என் மகனைச் சமைத்துத் தின்றோம். மறுநாள் நான் அவளிடம், ‘நாம் உண்ணும்படி உன் மகனைக் கொடு!’ என்றேன். ஆனால், அவளோ தன் மகனை ஒளித்து வைத்துவிட்டாள்” என்று சொன்னாள்.

30அரசன் இவ்வார்த்தைகளைக் கேட்டவுடன், தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டான். அவன், நகர மதில் வழியாக நடந்து செல்கையில், தன் உடலின்மேல் கோணியாடை அணிந்திருந்ததை மக்கள் கண்டனர்.

31அரசன், “இன்றைக்குள் நான் சாபாற்றின் மகன் எலிசாவின் தலையை வெட்டாது விட்டால் கடவுள் என்னை இப்படியும் இதற்கு மேலும் தண்டிப்பாராக!” என்றான்.

32அப்பொழுது எலிசா தம் வீட்டில் பெரியோர்களுடன் அமர்ந்திருந்தார். அரசன் தனக்குமுன் ஒரு மனிதனை அவரிடம் அனுப்பியிருந்தான். அத்தூதன் வருவதற்குள் எலிசா தம்மோடு இருந்த பெரியோர்களை நோக்கி, “இந்தக் கொலைகார மகன் என் தலையை வெட்டும்படி, இதோ ஒருவனை அனுப்பியிருப்பது தெரியவில்லையா? அத்தூதன் வரும்பொழுது அவன் உள்ளே வராதவாறு கதவை அடைத்து விடுங்கள். அவனைப் பின்தொடர்ந்து வரும் அவன் தலைவனின் காலடி ஓசையும் இதோ கேட்கிறதல்லவா?” என்றார்.

33இவ்வாறு, அவர் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில், அரசன்* அவரிடம் வந்து சேர்ந்தான். அப்பொழுது அவன், “இந்தத் தீமை ஆண்டவரிடமிருந்தே வருகிறது! அப்படியிருக்க ஆண்டவருக்காக நான் இன்னும் ஏன் காத்திருக்க வேண்டும்?” என்றான்.


6:29 இச 18:57; புல 4:10.


6:33 ‘தூதுவன்’ என்பது எபிரேய பாடம் (காண். 2 அர 7:2).
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks