back to top
HomeTamil2 அரசர்கள் அதிகாரம் - 19 - திருவிவிலியம்

2 அரசர்கள் அதிகாரம் – 19 – திருவிவிலியம்

2 அரசர்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

எசேக்கியா எசாயாவிடம் திருவுளம் கேட்டல்
(எசா 37:1-7)

1அரசர் எசேக்கியா இதைக் கேட்டு தம் ஆடைகளைக் கிழித்துவிட்டு சாக்கு உடை உடுத்திக் கொண்டு ஆண்டவரின் இல்லத்தினுள் நுழைந்தார்.

2அரண்மனையின் மேலதிகாரியான எலியாக்கிமையும், எழுத்தன் செபுனாவையும், குருக்களில் முதியோரையும் சாக்கு உடை உடுக்கச் செய்து ஆமோசின் மகன் எசாயா இறைவாக்கினரிடம் அனுப்பினார்.

3அவர்கள் அவரிடம், “எசேக்கியா கூறுவது இதுவே: இன்று துன்பமும் கண்டனமும் அவமானமும் மிக்க நாள். பிள்ளைகளைப் பெற்றெடுக்க நேரம் வந்துவிட்டது; ஆனால், பெற்றெடுக்கவோ வலிமையில்லை.

4வாழும் கடவுளைப் பழித்து இகழும்படி அசீரிய மன்னனாகிய தன் தலைவனால் அனுப்பப்பட்ட இரப்சாக்கே சொன்னவற்றையெல்லாம் உம் கடவுளாகிய ஆண்டவர் கேட்டிருப்பார்! அச்சொற்களை முன்னிட்டு உம் கடவுளாகிய ஆண்டவர் அவனைத் தண்டிக்க வேண்டும். நீரோ இன்னும் இங்கு எஞ்சியிருப்போர்க்காக மன்றாடும்” என்றனர்.

5அரசர் எசேக்கியாவின் அலுவலர் எசாயாவிடம் வந்தபொழுது,

6எசாயா அவர்களை நோக்கி, “உங்கள் தலைவனிடம் இவ்வாறு சொல்லுங்கள். ஆண்டவர் கூறுவது இதுவே: அசீரிய மன்னனின் கைக்கூலிகள் என்னை இகழ்ந்து சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அஞ்சவேண்டாம்.

7இதோ, நான் அவனிடம் ஓர் ஆவியை அனுப்புவேன். அவன் ஒரு வதந்தியைக் கேட்டுத் தன் நாட்டிற்குத் திரும்பிப் போய்விடுவான். அவனது நாட்டில் வாளால் வெட்டுண்டு அவன் இறக்கும்படி செய்வேன்” என்றார்.

அசீரியர் மீண்டும் அச்சுறுத்தல்
(எசா 37:8-20)

8அவ்வாறே, ‘அசீரிய மன்னன் இலாக்கிசை விட்டு வெளியேறிவிட்டான்’ என்று கேள்விப்பட்டு அங்கிருந்து கிளம்பிய இராப்சாக்கே தன் மன்னன் லிப்னாவுக்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டான்.

9அப்பொழுது, அசீரிய மன்னன், எத்தியோப்பிய மன்னனான திராக்கா தனக்கு எதிராய்ப் படைதிரட்டிக்கொண்டு வருவதாகக் கேள்வியுற்று எசேக்கியாவிடம் மீண்டும் தூதரை அனுப்பி,

10“யூதா அரசன் எசேக்கியாவிடம் நீங்கள் இவ்வாறு கூறுங்கள்: ‘எருசலேம் அசீரிய மன்னனின் கையில் ஒப்புவிக்கப்படமாட்டாது’ என்று கூறும் உன் கடவுளை நம்பி ஏமாந்துவிடாதே.

11இதோ! அசீரியா மன்னர்கள் எல்லா நாடுகளுக்கும் செய்திருப்பதையும், அவற்றை முற்றிலும் அழித்ததையும் நீ கேள்விப்பட்டிருப்பாய். அப்படியிருக்க நீ மட்டும் தப்பிவிட முடியுமா?

12என் முன்னோர்கள் அழித்துவிட்ட கோசான், ஆரான், இரட்சேபு, ஏதேனியர் வாழ்ந்த தெலாசர் ஆகியவற்றை அந்நாடுகளின் தெய்வங்களால் விடுவிக்க முடிந்ததா?

13ஆமாத்தின் மன்னன் எங்கே? அர்பாதின் மன்னன் எங்கே? செபர்வயிம் நகர், ஏனா, இவ்வா இவற்றின் மன்னர்கள் எங்கே?” என்று கூறியிருந்தான்.

14எசேக்கியா தூதரின் கையிலிருந்த மடலை வாங்கி வாசித்தபின் கோவிலினுள் சென்று ஆண்டவர் திருமுன் மடலை விரித்து வைத்தார்.

15மேலும், எசேக்கியா ஆண்டவரை மன்றாடிக் கூறியது: “கெருபுகள்மேல் வீற்றிருக்கும் இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவரே! இவ்வுலகத்து அரசுகளுக்கெல்லாம் நீர் ஒருவரே கடவுள்! விண்ணையும் மண்ணையும் படைத்தவர் நீரே!

16ஆண்டவரே! நீர் செவி சாய்த்துக் கேட்டருளும். ஆண்டவரே! உம் விழிகளைத் திறந்து என்னை நோக்கியருளும். தூதனுப்பி என்றுமுள கடவுளைப் பழித்துரைக்கும் சனகெரிபின் சொற்களைக் கேட்பீராக!

17ஆண்டவரே! அசீரிய மன்னர்கள் வேற்றினத்தாரையும், அவர்கள் நாடுகளையும் அழித்தது உண்மைதான்!

18அவர்கள் வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளை நெருப்பிலிட்டு எரித்தனர். ஏனெனில், அவை உண்மைக் கடவுளல்ல; மரத்தாலும் கல்லாலும் மனிதன் செய்தவையே; எனவே, அவற்றை அழிக்க முடிந்தது.

19எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! இப்பொழுது இவன் கையிலிருந்து எங்களைக் காத்தருளும். இதன் மூலம், நீர் ஒருவரே கடவுளாகிய ஆண்டவர் என்பதை உலகின் எல்லா அரசுகளும் அறிந்துகொள்ளும்.”

எசாயா எசேக்கியாவுக்கு விடுத்த செய்தி
(எசா 37:21-38)

20அப்பொழுது ஆமோட்சின் மகன் எசாயா எசேக்கியாவிடம் ஆளனுப்பிச் சொன்னது:

“இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் .

கூறுவது இதுவே: அசீரிய மன்னன்

சனகெரிபைப் பற்றிய உன்

வேண்டுதலைக் கேட்டேன்.

21அவனக்கு எதிராக ஆண்டவர்

கூறிய வார்த்தை இதுவே:

கன்னிமகள் சீயோன் உன்னை

இகழ்கிறாள்; உன்னைப் பார்த்து

நகைக்கிறாள்; மகள் எருசலேம்

பின் நின்று தலையசைக்கிறாள்.

22யாரை நீ பழித்து இகழ்ந்தாய்?

யாருக்கு எதிராய்க் குரல்

எழுப்பினாய்? யாரை நீ இறுமாப்புடன்

நோக்கினாய்? இஸ்ரயேலின்

புனிதமானவரை அன்றோ!

23நீ உன் தூதர்மூலம் என்

தலைவரைப் பழித்துரைத்து,

‘எண்ணற்ற என் தேர்களோடு

நான் மலையுச்சிகளுக்கு

லெபனோனின் சிகரங்களுக்கு

ஏறிச் சென்றேன்.

வானளாவிய கேதுரு மரங்களையும்

அங்கு நின்ற உயர்ந்த தேவதாரு

மரங்களையும் வெட்டினேன். அதன்

காடுகளின் மிக அடர்ந்த பகுதியான

கடையெல்லைவரை சென்றேன்.

24நான் அயல்நாடுகளில் கிணறு

வெட்டி நீர் பருகினேன்.

எகிப்தின் நதிகளையெல்லாம் என்

உள்ளங்கால்களினால் வற்றச்

செய்தேன்’ என்றாய்!

25நீ கேட்டதில்லையோ? நான் தான் பல

நாள்களுக்கு முன்பே இதை முடிவு

செய்தேன். நான்தான் தொன்று

தொட்டே இதைத் திட்டமிட்டேன்.

அரண்சூழ் நகர்களைப் பாழடைந்த

கற்குவியலாக நீ ஆக்க வேண்டு

மென்பதை இப்பொழுது நான்தான்

நிறைவேறச் செய்தேன்.

26அவற்றின் குடிமக்கள் வலிமை இழந்து

கலக்கமுற்று அவமானமடைந்தனர்;

வயல்வெளிப் புல் போலவும்,

கூரைகளில் முளைத்து

வளருமுன்னே பட்டுப்போகும் பச்சைப்

பூண்டு போலவும் ஆயினர்.

27நீ இருப்பதும் போவதும் வருவதும்

எனக்குத் தெரியும். எனக்கு எதிராக

நீ பொங்கி எழுவதையும்

நான் அறிவேன்.

28நீ எனக்கு எதிராகப் பொங்கி

எழுந்தாலும், உன் ஆணவம் என்

செவிகளுக்கு எட்டி உள்ளதாலும், உன்

மூக்கில் வளையத்தையும் உன்

வாயில் கடிவாளத்தையும் போட்டு, நீ

வந்த வழியே உன்னைத் திருப்பி

விரட்டுவேன்!

29எசேக்கியா! இதோ உனக்கு ஓர் அடையாளம் தருகிறேன்; இவ்வாண்டு தானாக விளைவதை நீ உண்பாய்; அடுத்த ஆண்டு அதன் முளையிலிருந்து விளைவதை உண்பாய்; ஆனால், மூன்றாம் ஆண்டில் நீ விதைத்து அறுவடை செய்வாய்; திராட்சைச் செடிகளை நட்டு அவற்றின் கனிகளை உண்பாய்.

30யூதா வீட்டில் எஞ்சியவை எல்லாம் கீழே வேரூன்றி மேலே பயன் அளிக்கும்.

31ஏனெனில், எஞ்சியோர் எருசலேமிலிருந்து வெளியேறுவர். உயிர் பிழைத்தோர் சீயோன் மலையினின்று புறப்படுவர். படைகளின் ஆண்டவரது ஆர்வமே இதை நிறைவேற்றும்!

32ஆதலால், ஆண்டவர் அசீரிய மன்னனைக் குறித்து இவ்வாறு கூறுகிறார்; இந்நகருக்குள் அவன் நுழையமாட்டான்; அதில் அம்பு எய்ய மாட்டான்; அதை எதிர்த்துக் கேடயத்துடன் வரமாட்டான். அதற்கு எதிராக முற்றுகைத்தளம் எழுப்ப மாட்டான்.

33அவன் வந்த வழியே திரும்பிப் போவான்; இந்நகருக்குள் நுழையவே மாட்டான் என்கிறார் ஆண்டவர்.

34இந்நகரை நான் பாதுகாப்பேன்; என் பொருட்டும் என் ஊழியன் தாவீதின் பொருட்டும் நான் அதை விடுவிப்பேன்.”

35அன்றிரவு ஆண்டவரின் தூதர் புறப்பட்டுச் சென்று அசீரியரின் பாளையத்தில் இலட்சத்து எண்பத்தையாயிரம் பேரைக் கொன்றார். மக்கள் காலையில் எழுந்தபோது அங்கு அனைவரும் செத்துப் பிணமாய்க் கிடந்ததைக் கண்டனர்.

36எனவே, அசீரிய மன்னன் சனகெரிபு திரும்பிச் சென்று நினிவேயில் தங்கியிருந்தான்.

37தன் தெய்வமாகிய நிஸ்ரோக்கின் கோவிலில் அவன் வழிபாடு செய்துகொண்டிருந்த பொழுது, அவன் புதல்வர்களாகிய அதிரம் மெலக்கும், சரேத்சரும் அவனை வாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, அரராத்து நாட்டிற்குத் தப்பி ஓடிவிட்டனர். அவனுடைய மகன் ஏசகத்தோன் அவனுக்குப்பின் அரசன் ஆனான்.


19:15 விப 25:22.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks