back to top
HomeTamil2 சாமுவேல் அதிகாரம் - 1 - திருவிவிலியம்

2 சாமுவேல் அதிகாரம் – 1 – திருவிவிலியம்

2 சாமுவேல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

சவுலின் இறப்பைத் தாவீது அறிதல்

1சவுல் இறந்தபின், அமலேக்கியரைத் தோற்கடித்துத் திரும்புகையில் தாவீது சிக்லாகில் இரண்டு நாள்கள் தங்கினார்.

2மூன்றாம் நாள், சவுலின் பாசறையினின்று கிழிந்த ஆடைகளோடும், புழுதிபடிந்த தலையோடும் ஒருவன் வந்தான். அவன் தாவீதிடம் வந்ததும், தரையில் வீழ்ந்து வணங்கினான்.

3“நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று தாவீது அவனை வினவ, “நான் இஸ்ரயேல் பாசறையினின்று தப்பி வந்துவிட்டேன்” என்று அவன் பதில் கூறினான்.

4“என்ன நடந்தது? என்னிடம் சொல்” என்று தாவீது கேட்க, அவன், “வீரர்கள் போரினின்று ஓடிவிட்டனர்; அவர்களுள் பலர் வீழ்ந்து மடிந்து விட்டனர்; சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துவிட்டனர்” என்று கூறினான்.

5“சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துவிட்டனர் என்று உனக்கு எப்படி தெரியும்?” என்று தன்னிடம் பேசிக்கொண்டிருந்த இளைஞனிடம் தாவீது கேட்டார்.

6அதற்கு அந்த இளைஞன், “நான் தற்செயலாக கில்போவா மலையில் இருந்தேன். சவுல் தன் ஈட்டியின்மீது சாய்ந்து கொண்டிருந்தார். அப்போது தேர்களும் குதிரை வீரர்களும் அவரை நெருங்கிக் கொண்டிருந்தனர்.

7அவர் தம் பின்னால் திரும்பிய போது என்னைப் பார்த்துக் கூப்பிட்டார். ‘இதோ இருக்கிறேன்’ என்று நான் கூறினேன்.

8‘யார் நீ?’ என்று அவர் என்னை வினவ, ‘நான் ஓர் அமலேக்கியன்’ என்று பதிலளித்தேன்.

9‘என்மீது நின்று, என்னைக் கொல், ஏனெனில், மரணவேதனையில் நான் சிக்கியுள்ளேன். ஆனால், என் உயிர் இன்னும் ஊசலாடிக்கொண்டிருக்கிறது’ என்று அவர் என்னிடம் கூறினார்.

10நான் அவர்மீது நின்று அவரைக் கொன்றேன். ஏனெனில், விழுந்தபின்பு அவர் உயிர் பிழைக்க மாட்டார் என நான் அறிவேன். அவரது தலையில் இருந்த மகுடத்தையும் கையிலிருந்த காப்பையும் எடுத்துக்கொண்டு, என் தலைவராகிய உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்” என்று கூறினார்.

11தாவீது தம் ஆடைகளைப் பற்றிக் கிழித்தார். அவரோடு இருந்தவர்களும் அவ்வாறே செய்தனர்.

12சவுலுக்காகவும், அவருடைய மகன் யோனத்தானுக்காகவும், ஆண்டவரின் மக்களுக்காகவும் இஸ்ரயேல் வீட்டாருக்காகவும் அவர்கள் அழுது புலம்பி மாலை வரை நோன்பு இருந்தார்கள். ஏனெனில், அவர்கள் வாளால் மடிந்துவிட்டார்கள்.

13தாவீது தமக்குச் செய்தி கொண்டு வந்த இளைஞனிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று மீண்டும் வினவ, “நான் ஒரு வேற்றினத்தான், அமலேக்கியன்” என்று மறுமொழி கூறினான்.

14“ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரைக் கையோங்கிக் கொலை செய்ய நீ அஞ்சாதது ஏன்?” என்று தாவீது அவனைக் கேட்டார்.

15பின்பு, தாவீது இளைஞன் ஒருவனைக் கூப்பிட்டு, “போ, அவனை வெட்டு” என்றார். அந்த இளைஞன் அவனை வெட்டி வீழ்த்த, அவன் இறந்தான்.

16“உன் இரத்தம் உன் தலைமேல் இருக்கட்டும். ஏனெனில், ‘ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரை நான் கொன்றேன்’ என்று உன் வாயே உனக்கு எதிராகச் சான்று சொல்லிவிட்டது” என்று தாவீது அவனை நோக்கிக் கூறினார்.

சவுல், யோனத்தான் ஆகியோருக்காக தாவீதின் துயரம்

17பிறகு, தாவீது சவுலையும் அவருடைய மகன் யோனத்தானையும் குறித்து இரங்கற்பா ஒன்று பாடினார்.

18“யூதாவின் மக்களுக்கும் இது கற்பிக்கப்பட வேண்டும் என்று யாசாரின் நூலில் எழுதப்பட்டுள்ள ‘வில்லின் பாடல்’:

19‘இஸ்ரயேல்! உனது மாட்சி

உன் மலைகளிலே மாண்டு

கிடக்கின்றது!

மாவீரர் எவ்வாறு மடிந்தனர்!

20காத்தில் இதைச் சொல்ல வேண்டாம்;

அஸ்கலோன் வீதிகளில் இதை

அறிவிக்க வேண்டாம்;

ஏனெனில், பெலிஸ்தியரின்

புதல்வியர் அகமகிழக்கூடாது;

விருத்தசேதனமற்றோரின்

புதல்வியர் ஆர்ப்பரிக்கக் கூடாது.

21கில்போவா மலைகளே!

பனியோ மழையோ

உம்மீது பொழியாதிருப்பதாக!

வயல்கள் முதற்கனிகளைத்

தராதிருப்பனவாக!

ஏனெனில், வீரர்களின் கேடயங்கள்

தீட்டுப்பட்டனவே!

சவுலின் கேடயமும் எண்ணெயால்

இனி மெருகு பெறாதே!

22வீழ்த்தப்பட்டோரின்

இரத்தத்தினின்றும்

வீரர்களின் கொழுப்பினின்றும்

யோனத்தானின் அம்பு

பின்வாங்கியது இல்லை!

சவுலின் வாள் வெறுமையாய்த்

திரும்பியதும் இல்லை!

23சவுல்! யோனத்தான்!

அன்புடையார், அருளுடையார்!

வாழ்விலும் சாவிலும்

இணைபிரியார்! கழுகினும்

அவர்கள் விரைந்து செல்வர்!

அரியினும் அவர்கள்

வலிமைமிக்கோர்!

24இஸ்ரயேல் புதல்வியரே!

சவுலுக்காக அழுங்கள்!

செந்நிற மென்துகிலால் உங்களை

உடுத்தியவர் அவரே!

பொன்னின் நகைகளினால் உம்

உடைகளை ஒளிரச் செய்தாரே!

25போர் முனையில் வீரர் எங்ஙனம்

வீழ்ந்துபட்டனர்!

உன் மலைகளிலே யோனத்தான்

மாண்டு கிடக்கின்றான்!

26சகோதரன் யோனத்தான்! உனக்காக

என் உளம் உடைந்து போனது!

எனக்கு உவகை அளித்தவன் நீ!

என் மீது நீ பொழிந்த பேரன்பை

என்னென்பேன்!

அது மகளிரின் காதலையும்

மிஞ்சியது அன்றோ!

27மாவீரர் எவ்வாறு மடிந்தனர்!

போர்க்கலன்கள் எங்ஙனம்

அழிந்தன!”


1:6-10 1 சாமு 31:1-6; 1 குறி 10:1-6.
1:18 யோசு 10:13.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks